தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகர்களின் அபிமான இயக்குனராக திகழ்ந்து வருகிறார் இயக்குனர் வெற்றிமாறன். இவர் இயக்கிய ஆடுகளம், பொல்லாதவன், விசாரணை போன்ற பல்வேறு படங்கள் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றிருந்தது. அதிலும் தனுஷை வைத்து இவர் இயக்கியிருந்த வடசென்னை திரைப்படமும் அசுரன் திரைப்படம் தமிழ் சினிமாவில் இவருக்கு ஒரு மாபெரும் அங்கீகாரத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. அசுரன் படத்தை தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறன் தற்போது சூரியை கதாநாயகனாக வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளார் இந்த படம் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாக உள்ளது என்ற அறிவிப்பும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியாகியிருந்தது.
இந்த படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யாவை வைத்து ஒரு படத்தை இயக்க இருக்கிறார் என்ற தகவல் ஏற்கனவே வெளியாகி இருந்தது இந்த நிலையில் இந்த படத்தில் பிரபல நடிகரும் பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் போட்டியாளரான சக்தி கமிட்டாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பிரபல இயக்குனர் பி வாசுவின் மகனான சக்தி பல்வேறு படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து இருக்கிறார் மேலும் தமிழில் 2007 ஆம் ஆண்டு வெளியான தொட்டால் பூ மலரும் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார் சக்தி.
அதன்பின்னர் நினைத்தாலே இனிக்கும், ஆட்ட நாயகன், ஏதோ செய்தாய் என்னை போன்ற பல்வேறு படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார் சக்தி. ஆனால், இவரது படங்கள் மிகப்பெரிய தோல்வியை தழுவியது. இதனால் 2017 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்டார். இந்த சீசனில் கலந்து கொண்ட இவருக்கு ட்ரிகர் சக்தி என்று பெயரும் வந்தது. பிக் நிகழ்ச்சிக்குப் பின்னர் சிவலிங்கா, ஏழு நாட்கள் போன்ற படங்களில் துணை நடிகராக நடித்து இருந்தார் சக்தி. அதன் பின்னர் இரண்டு ஆண்டுகளாக பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இது ஒருபுறம் இருக்க கடந்த ஜனவரி மாதம் நடிகர் சக்தி, குடி போதையில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதால் போலீசாரால் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமினில் வெளியில் வந்தார்.பின்னர் இதுகுறித்து வீடியோ வெளியிட்ட சக்தி, நடந்த செயலுக்காக உண்மையில் நான் மிகவும் வருந்துகிறேன். மீண்டும் இதுபோன்ற செயல் நடக்காது என்று உறுதி அளிக்கிறேன். இந்த சம்பவம் எனக்கு ஒரு பாடமாக அமைந்துள்ளது. உண்மையாகவே வருந்துகிறேன். என்னை மன்னித்து விடுங்கள். குடித்து விட்டு வாகனம் ஓட்டாதீர்கள் என்று பேசி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.