தமிழில் 2012 ஆம் ஆண்டு வெளியான ‘கலகலப்பு’ படத்தின் மூலம் காமெடி நடிகராக அறிமுகமானவர் நடிகர் கருணாகரன். அதன் பின்னர் பல படங்களில் காமெடியனாக நடித்துள்ளார். பின்னர் 2015 ஆம் ஆண்டு வெளியான ‘உப்பு கருவாடு’ என்ற படத்தில் ஹீரோவாகவும் நடித்துள்ளார்.
இதுநாள் வரை காமெடி கதாபாத்திரத்தில் நடித்து வந்த கருணாகரன், சமீபத்தில் வெளியான ‘ பொதுநலன் கருதி ‘ என்ற திரைப்படத்தில் மூன்று ஹீரோக்களில் ஒருவராக நடித்துள்ளார். இந்நிலையில் இந்த படத்தின் இயக்குநர், துணை தயாரிப்பாளர் காவல் ஆணையத்தில் புகார் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் அளித்துள்ள புகாரில், கருணாகரனுக்கு படத்தில் நடிக்க 25 லட்சம் ரூபாய் பணம் கொடுக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. மேலும், படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் விளம்பரப்படுத்துதல் போன்ற நிகழ்ச்சிகளுக்கு அழைத்த போது கருணாகரன் வரவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அவரிடம் பேசிய போது கொலை செய்து விடுவேன் என்று நடிகர் கருணாகரன் மிரட்டியுள்ளாராம்.
இதையடுத்து கருணாகரனிடம் இருந்து தங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த இயக்குனர் ஸியோன் பேசுகையில், கந்துவட்டிக்காரர்களால் படத்தை வெளியிட சிக்கல்களை சந்தித்ததாகவும், தற்போது கந்து வட்டிக்காரர்கள் மிரட்டும் தொனியிலேயே கருணாகரன் மிரட்டுவதாகவும் பேசியுள்ளார்.