பழைய வண்ணாரப்பேட்டை படத்தினை இயக்கிய இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் உருவாகி உள்ள படம் தான் “திரௌபதி”. தமிழ் திரை உலகில் கூட்டு தயாரிப்பு முறையில் உருவான முதல் திரைப்படம் திரௌபதி. இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக அஜித் மச்சான், ஷாலினியின் சகோதரன் ரிச்சர்ட் ரிஷி நடித்து உள்ளார். இவர் ஏற்கனவே பெண் சிங்கம், அம்மன் போன்ற தமிழ் படங்களில் நடித்து உள்ளார். மேலும், இந்த படத்தில் கதாநாயகியாக டூலட் படத்தில் நடித்த சுசீலா இன்னும் தெளிவாகச் சொல்லப்போனால் அழகிய தமிழ் மகள் சீரியலில் நடித்த கதாநாயகி தான் இந்த படத்தில் நடிக்கிறார். இந்த படத்திற்கு இசையமைப்பாளராக பழைய வண்ணாரப்பேட்டை படத்திற்கு இசையமைத்தது ஜூபின் தான் இசையமைக்கிறார்.
இவர்களுடன் இந்த படத்தில் நடிகர் கருணாஸ், ஜீவா ரவி, நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்குனர் மறுமலர்ச்சி பாரதி உட்பட பலர் இந்த படத்தில் நடித்து உள்ளார்கள். இந்த படம் சமூகத்தில் நிலவும் பல பிரச்சனைகளுக்குத் தீர்வு சொல்லும் வகையில் உருவாகியுள்ளது எனவும் கூறுகிறார்கள். இந்த படம் சமூகத்தில் காதல் என்ற பெயரில் நிலவும் சம்பவங்களை பற்றியும் வெளிப்படையாக காட்டும் வகையில் உருவாகியுள்ள படம் ஆகும். சமூக வலைத்தளங்கள் மூலம் இந்த படத்திற்கு செய்த விளம்பரத்தின் வாயிலாக இந்த திரைப்படத்திற்கு பலரும் தயாரிப்பாளர்கள் ஆகி உள்ளார்கள் என்று சொல்லலாம். இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் தான் வெளி வந்தது. இந்த படத்தின் ட்ரெயிலர் வெளியானவுடன் சோசியல் மீடியாவில் மூன்று நாட்களுக்கு மேலாக டாப் 5 ட்ரெண்டிங்கில் இந்த படத்தின் ட்ரெய்லர் தான் இருந்தது.
அது மட்டுமில்லாமல் திரை பிரபலங்கள் பலரும் இந்த படத்தை பார்த்து பாராட்டி தங்களுடைய கருத்துகளை பதிவு செய்தார்கள். அதுமட்டுமில்லாமல் சமீபத்தில் இந்த படத்தின் போஸ்டர் வெளியானது. அதில் ஜாதியை மையமாக வைத்து தான் இந்த படம் எடுக்கப்பட்டுள்ளதாக பார்வையாளர்கள் மத்தியில் ஒரு புறம் பேசி வந்தார்கள். அந்த போஸ்டரில் பாரதியாரின் கவிதையில் ஒருவரியை மாற்றப்பட்டு “ஜாதிகள் உள்ளதடி பாப்பா” என குறிப்பிட்டுள்ளது. இது சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இந்த படத்தை வெளியிட தடை கோரி உள்ளது ஒரு அரசியல் கட்சி.
இந்த படத்தின் டிரெய்லரில் ஜாதி ஆவணக் கொலைகளை ஆதரிக்கும் வகையில் வசனங்களும், காட்சிகளும் இடம் பெற்று உள்ளது என்று கூறி இந்த படத்தை வெளியிட தடை செய்ய வேண்டும் என காவல்துறை ஆணையரிடம் பெரியார் திராவிட கழகம் சார்பில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. அதையும் மீறி இந்த படம் வெளியானால் நாங்கள் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் கூறியுள்ளார்கள். இதனை தொடர்ந்து பாமக வழக்கறிஞர் பாலு அவர்கள் திரௌபதி படக்குழுவினற்கு சட்டப்பூர்வமாக துணையாக இருக்கும் எனவும் கூறி உள்ளார். இந்த படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் இருந்த எதிர்பார்ப்பு தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. படத்தின் ட்ரெய்லர் பார்ப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகின்றது.