ஆங்கில மொழிக்கு மாற்றாக இந்தி மொழியை பயன்படுத்த வேண்டும் என உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்து இருக்கும் நிலையில் இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் தமிழ் குறித்து போட்டுள்ள பதிவு பெரும் வைரலாகி வருகிறது. இந்திய அளவில் புகழ் பெற்ற திரைப்பட இசையமைப்பாளர் ஏ. ஆர். ரகுமான். தமிழ், ஹிந்தி, ஆங்கிலம், தெலுங்கு உள்ளிட்ட பல மொழி படங்களுக்கு இசையமைத்து உள்ளார். மேலும், இரண்டு ஆஸ்கர் விருதை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையையும் பெற்றவர். மேலும், உலக அளவில் புகழ்பெற்ற இசை அமைப்பாளராக ஏ ஆர் ரகுமான் திகழ்ந்து கொண்டிருக்கிறார்.
இப்படி ஒரு நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஏ ஆர் ரஹ்மான் அதில் ழகரத்தை ஏந்தியிருக்கும் புரட்சிப் பெண்ணின் புகைப்படத்துக்கு கீழே பாரதிதாசனின் ‘இன்பத் தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு நேர்’ என்ற வரிகளை பதிவிட்டு இருந்தார். சமீபத்தில் தான் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆங்கில மொழிக்கு மாற்றாக இந்தி மொழியை பயன்படுத்த வேண்டும் என்றும், உள்துறை அமைச்சகத்தில் 70 விழுக்காடு அலுவல் பணிகள் ஹிந்தியில் மட்டுமே நடைபெறுவதாகவும் னைத்து மாநில மக்களும் உரையாடுவதற்கு பொதுமொழியாக ஆங்கிலத்துக்கு மாற்றாக இந்திய மொழி ஒன்று இருக்க வேண்டும் என்றும் கூறி இருந்தார்.
ரஹ்மான் பகிர்ந்த ‘தமிழணங்கு’ ஓவியம் :
இதற்கு பலரிடம் இருந்தும் எதிர்புகழ் கிளம்பி இருக்கிறது. மேலும், தமிழ் சினிமாவில் இருக்கும் பல பிரபலங்கள் அமித் ஷாவின் இந்த கருத்திற்கு தங்கள் கண்டனத்தை தெரிவித்து வந்தனர். இப்படி ஒரு நிலையில் ஏ ஆர் ரஹ்மானின் இந்த பதிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. அதே போல சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பத்திரிகையாளர் ஒருவர் ‘அமித் ஷா கூறிய கருத்து குறித்து கேட்டதற்கு, தமிழ் தான் இணைப்பு மொழி என்று கூறிவிட்டு சென்றார் ரஹ்மான்.
ரஹ்மான் மீது புகார் :
இப்படி ஒரு நிலையில் ஏ ஆர் ரஹ்மானின் இந்த பதிவிற்கு அய்யா வைகுண்டர் மக்கள் கட்சி நிர்வாகி முத்து ரமேஷ் நாடார் என்பவர் போலீசில் ஆன்லைன் மூலம் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில் அவர் கூறியுள்ளதாவது ‘உலகின் பல்வேறு நாடுகளில் வாழும் தமிழர்கள், தமிழன்னைக்கு கோவில் கட்டி, சிலை அமைத்து தெய்வமாக வழிபட்டு வருகின்றனர். தமிழறிஞர்கள் பலர், தமிழன்னை படங்களை அழகாக, தெய்வமாக வெளியிட்டுள்ளனர்.
ரஹ்மான் மீது, சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்
அவற்றில், திருக்குறள், சிலப்பதிகாரம், மணிமேலை, குண்டலகேசி, சீவகசிந்தாமணி, வளையாபதி போன்ற நுால்கள், தமிழன்னையின் கரங்களில் செங்கோல்களாய் காட்சி அளிக்கின்றன. ஆனால், இசையமைப்பாளர் ரஹ்மான், தலைவிரி கோலத்துடன் இருப்பது போன்ற படத்தை சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். இது, உலகத்தின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் தமிழர்களை கொச்சைப்படுத்தும் செயல்.தமிழர்கள் தெய்வமாக வழிபடும், தமிழன்னையின் கொச்சையான படத்தை வெளியிட்ட இசையமைப்பாளர் ரஹ்மான் மீது, சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஓவியர் சந்தோஷ் நாராயணன்:
உண்மையில் ஏ ஆர் ரஹ்மான் பகிர்ந்த அந்த ஓவியத்தை வரைந்த ஓவியர் பெயர் சந்தோஷ் நாராயணன். இவர் சென்னை கவின் கலை கல்லூரி மாணவர். சமீபத்தில் பா ரஞ்சித் இயக்கத்தில் சமுத்திரகனி நடிப்பில் வெளியான ரைட்டர் படத்தின் இணை எழுத்தாளர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தனது பல விதமான தனித்துவமான ஓவியத்தின் மூலம் கவனத்தை ஈர்த்தவர். இவர் வரைந்த பல ஓவியங்கள் மிகவும் பிரபலம் என்பது குறிப்பிடத்தக்கது. அதிலும் குறிப்பாக இவர் இந்திய கிரிக்கெட் உலகில் ஜாம்பவானாக கருதப்படும் சச்சின் டெண்டுல்கரின் 100 சதங்களை கொண்டு ஓவியத்தை வரைந்து அதை சச்சினுக்கு பரிசளித்தார். அதைப் பார்த்த சச்சின் டெண்டுல்கர் அதன் நுணுக்கமான விஷயங்களைப் பாராட்டியும் இருந்தார்.