சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடித்து வருகிறார். இதன் முதல் கட்ட படப்பிடிப்பு மும்பையில் படு மும்மரமாக நடைபெற்று வருகிறது. 3 மாதங்கள் தொடர்ச்சியாக அங்கு படப்பிடிப்பை நடத்துகின்றனர்.
இந்த படப்பிடிப்பில் ரஜினிகாந்துடன் நயன்தாரா, யோகிபாபு, நிவேதா தாமஸ் ஆகியோரும் இணைந்து நடித்து வருகிறார்கள். படப்பிடிப்பை காண தினமும் ஏராளமான ரஜினி ரசிகர்கள் திரள்கிறார்கள்.அவர்கள் படப்பிடிப்பு காட்சிகளை செல்போனில் படம்பிடித்து இணையதளத்தில் வெளியிட்டு வருகிறார்கள்.
ரஜினிகாந்த், யோகிபாபு கிரிக்கெட் விளையாடுவது, அதை நயன்தாரா அருகில் நின்று ரசிப்பது போன்ற காட்சிகள் வெளிவந்தன. படப்பிடிப்பு காட்சிகள் உடனுக்குடன் இணையதளத்தில் வெளியாவது தயாரிப்பு தரப்பினருக்கும், இயக்குனருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதனை தடுப்பது குறித்து ஆலோசனை நடத்தி படப்பிடிப்பை பார்வையாளர்கள் காண தடைவிதித்துள்ளனர். தனியார் பாதுகாவலர்களை படப்பிடிப்பு நடைபெறும் இடத்தை சுற்றிலும் நிறுத்தி உள்ளனர். அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் மனு அளித்து அதிகமான போலீஸ் பாதுகாப்பையும் பெற்றுள்ளனர். துணை நடிகர்-நடிகைகளுக்கும் செல்போன் கொண்டுவர தடை விதித்துள்ளனர்.