இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'பைசன் காளமாடன்' . இந்த படத்தில் பசுபதி, அனுபமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன், லால் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு நிவாஸ். கே பிரசன்னா இசையமைத்திருக்கிறார். இந்த படத்தை அப்ளாஸ் என்டர்டைன்மென்ட் மற்றும் நீலம் ப்ரொடக்ஷன் இருவரும் இணைந்து தயாரித்து இருக்கிறார்கள். கபடி விளையாட்டை மையமாக வைத்து வெளியாகி இருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

கதைக்களம்:
கபடி விளையாட்டின் மீது ஆர்வமாக இருக்கும் ஒரு கிராமத்து இளைஞன், ஜாதி பிரச்சனைகள், அவமானங்கள், வன்முறை, துரோகங்கள் என பல தடைகளை மீறி எப்படி தன் வாழ்க்கையில் வெற்றி பெற்று இந்திய அணியில் இணைகிறார் என்பது தான் படத்தினுடைய கதை. படத்தின் ஆரம்பத்தில் ஜப்பானில் நடக்கும் ஆசிய கபடி விளையாட்டு போட்டியில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதுகிறது. அதில் விளையாடும் இந்திய வீரராக துருவ் விக்ரம் இருக்கிறார்.
இவர் இந்த இடத்துக்கு எப்படி வந்தார்? என்னென்ன பிரச்சினைகளை சந்தித்தார் என்பது தான் கதை. படத்தின் ஹீரோ துருவ், சின்ன வயசிலிருந்தே கபடியின் மீது அதிக ஆர்வம் கொண்டிருக்கிறார்.
எப்பொழுதும் கபடியை பற்றியே யோசித்துக் கொண்டே இருக்கிறார். இதை அறிந்த அவருடைய பள்ளி ஆசிரியர் கபடி அணிக்குள் துருவை கொண்டு வருகிறார். ஆனால், அந்த நேரம் பார்த்து எதிர்பாராத விதமாக ஒரு கொலை நடக்கிறது.

இதனால் துருவ் உடைய அப்பா பசுபதி தன்னுடைய மகனுக்கு கபடி எல்லாம் வேண்டாம் என்று
சொல்கிறார். சொந்த குடும்ப தடை, பகை ஒரு பக்கம், கபடி வீரராக மாற வேண்டும் என்று துருவுடைய வெறி, ஜாதி கலவரங்கள் இதையெல்லாம் தாண்டி துருவ் விக்ரம் எப்படி கபடி வீரர் ஆனார் என்பதுதான் படத்தினுடைய மீதி கதை. படம் 1994 ஆம் ஆண்டு கபடி விளையாட்டுக்காக அர்ஜுனா விருது வென்ற மணத்தி கணேசனின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டு இருக்கிறது.
இருந்தாலும் சினிமாவுக்காக சில விஷயங்களை இயக்குனர் சேர்த்திருக்கிறார். அழுத்தமான கதை என்பதால்
கபடி விளையாட்டை மட்டும் காண்பிக்காமல் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் நடந்த ஜாதி கலவரங்கள், தீண்டாமை கொடுமைகளை பற்றியும் விவரமாக இயக்குனர் காண்பித்து இருப்பது பாராட்டுக்குரிய விஷயம். உணர்வுபூர்வமாக சில விஷயங்களையும் இயக்குனர் படத்தில் காண்பித்து இருக்கிறார். இது படத்திற்கு மிகப்பெரிய பலத்தை கொடுத்து இருக்கிறது. அதோட முதல்முறையாக மாரி செல்வராஜ் கொஞ்சம் திரும்பி தங்கள் பக்கம் இருக்கும் சில குறைகளையும் பதிவு செய்திருக்கிறார்.

ஆரம்பத்திலிருந்து இறுதிவரை மாரி செல்வராஜ் இந்த படத்திற்காக போட்டு இருக்கும் உழைப்பு தெளிவாகத் தெரிகிறது. புலிக்குப் பிறந்தது பூனையாகுமா? என்பதை துருவ் விக்ரம் நிரூபித்திருக்கிறார். தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். இது முழுக்க முழுக்க துருவுக்கு ஒரு சிறந்த படமாக அமைந்திருக்கிறது. இவரை அடுத்து படத்தில் வரும் மற்ற நடிகர்களுமே தங்களுக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
மனத்தி கணேசனின் வாழ்க்கையை கண்முன்னே துருவ் கொண்டு வந்திருப்பது சிறப்பான விஷயம்.
லட்சியம், குடும்பம், காதல், போராட்டம் என அனைத்தையும் இயக்குனர் நேர்த்தியாக கொண்டு சென்றிருக்கிறார். பின்னணி இசையும் ஒளிப்பதிவும் படத்திற்கு பக்க பலத்தை கொடுத்திருக்கிறது. ஆனால், படத்தின் நீளத்தை கொஞ்சம் குறைத்திருக்கலாம். மற்றபடி பெரிதாக குறைகள் எதுவும் இல்லை. எல்லோரும் சென்று பார்க்கும் படமாக தான் பைசன் இருக்கிறது.
நிறை:
துருவ் விக்ரம் நடிப்பு
நடிகர்கள் தங்களுக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்
கதைக்களம் அருமை
சமூகத்திற்கு ஒரு நல்ல மெசேஜ்
பின்னணி இசை ஒளிப்பதிவு படத்திற்கு பக்க பலத்தை கொடுத்து இருக்கிறது

குறை:
படத்தின் நீளத்தை குறைத்திருக்கலாம்
ஆங்காங்கே சில லாஜிக் குறைபாடுகள்
சில காட்சிகளை இன்னும் கொஞ்சம் உணர்வு பூர்வமாக சொல்லி இருக்கலாம்
மொத்தத்தில் பைசன் - வெறித்தனம்






