மறைந்த நடிகர் டேனியல் பாலாஜியின் மலரும் நினைவுகளை குறித்து இயக்குனர் அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சமீப காலமாக சினிமா துறைகளில் பிரபலங்கள் மரணம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது. சமீபத்தில் தான் பிரபல காமெடி நடிகர் சேஷு மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இவரை அடுத்து நடிகர் டேனியல் பாலாஜி மாரடைப்பு காரணமாக காலமாகி இருக்கும் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழ் சினிமாவில் மிக பிரபலமான நடிகர் டேனியல் பாலாஜி.
இவர் படங்களில் குணச்சித்திரம் மற்றும் வில்லன் கதாபாத்திரத்தில் தான் நடித்து இருக்கிறார். இவர் மறைந்த நடிகர் முரளியின் தம்பி என்பது குறிப்பித்தக்கது. மேலும், இவர் வேட்டையாடு விளையாடு, பொல்லாதவன், வட சென்னை போன்ற பல படங்களில் வில்லனாக நடித்து உள்ளார். இவர் 2003 ஆம் ஆண்டு வெளிவந்த ஏப்ரல் மாதத்தில் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகில் அறிமுகமானார். அதன் பின்னர் தனுஷ் நடித்த காதல் கொண்டேன் படத்திலும், சூர்யாவின் காக்க காக்க படத்திலும் போலீஸ் அதிகாரியாக நடித்து இருந்தார். அதன் பின்னர் தான் இவர் வில்லன் ரோலில் மிரட்டி வந்தார்.
டேனியல் பாலாஜி குறித்த தகவல்:
வில்லன் ரோல் இவருக்கு பொருத்தமாக அமைந்ததால் அடுத்தடுத்து வாய்ப்புகள் வந்தது. இறுதியாக மித்ரன் ஜவஹர் இயக்கிய அரியான் என்ற படத்தில் டேனியல் பாலாஜி நடித்து இருந்தார். பின் கடந்த 2021ஆம் ஆண்டு இவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சில நாட்களில் இவர் குணமாகி வீடு திரும்பினார். இப்படி ஒரு நிலையில் டேனியல் பாலாஜிக்கு இரண்டு நாட்களுக்கு முன் இரவு நெஞ்சு வலி ஏற்பட்டது. திருவான்மியூர் இல்லத்தில் இருந்து மருத்துவமனைக்கு சென்று பார்த்தபோது வழியிலேயே இறந்து இருக்கிறார்.தற்போது அவருக்கு வயது 48.
டேனியல் பாலாஜி மறைவு:
மேலும், அவரது உடல் அஞ்சலிக்காக சென்னை புரசைவாக்கம் வரதம்மல் காலனியில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டு உள்ளது. அதோடு மறைந்த டேனியல் பாலாஜி இறந்த சில மணி நேரத்திலேயே அவரது கண்களை அவரின் விருப்பப்படி தனமாக கொடுக்கப்பட்டது. இவரின் மறைவுக்கு பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் இரங்கலை தெரிவித்து வருகிறார்களா. இந்த நிலையில் இயக்குனர் நாஞ்சில் பி.சி அழகப்பன் அவர்கள் பாலாஜி குறித்து பேட்டியில், ஒரு கட்டத்தில் முரளி உடைய மார்க்கெட் சினிமாவில் நன்றாக இருந்தது. அதனால் சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் முரளியின் காமராசர் படம் உருவாகிறது. ஷூட்டிங்கும் நடந்தது.
இயக்குனர் பேட்டி:
லைலா, வடிவேலு என்று பெரிய நட்சத்திரங்கள் எல்லாம் இந்த படத்தில் கமிட்டாகி இருந்தார்கள். படம் ஷூட்டிங் நடந்தபோது இடையில் தயாரிப்பு வேறு ஒருவரிடம் கை மாறியது. அப்போது முரளியை பார்க்க வீட்டிற்கு சென்றேன். அங்கு முரளி அம்மா, என்னுடைய தங்கை மகனும் படம் எடுக்க ஆசைப்படுகிறேன். ஆனால், அண்ணனிடம் சிபாரிசு பண்ண சொல்லி கேட்பதற்கு தயக்கம் அடைகிறான். என் மகன் முரளியும் அவனுக்கு திறமை இருக்கு, வாய்ப்பு அதுவா அமையனும் என்று சொல்கிறான். அதனால் உங்களிடம் சேர்த்துக்க முடியுமா? என்று கேட்டார். அப்பதான் முரளி, தன் தம்பியாக இருந்தால் கூட யாரிடமும் சிபாரிசு பண்ண மாட்டார் என்ற விஷயம் எனக்கு தெரிய வந்தது. பின் நான் வர சொல்லுங்கள், காமராசர் படத்திலேயே சேர்த்துக் கொள்கிறேன் என்று சொன்னேன்.
சினிமா அனுபவம் குறித்து சொன்னது:
டேனியல் பாலாஜிக்கு ஹிந்தி நன்றாக தெரியும் என்பதால் லைலாவுக்கு டயலாக்கை புரிய வைக்கும் பொறுப்பை அவரிடமே கொடுத்து விட்டேன். அவர் ஷூட்டிங் ஆரம்பித்த பிறகு செட்டில் நடிகர் நடிகைகளுக்கு கிடைக்கிற மரியாதையை வியந்து போய் பார்த்துக் கொண்டே இருப்பார். அப்பவே அவருக்கு இயக்குனரை விட நடிகராக வேண்டும் என்ற ஆசைதான் உருவானது. ஒருநாள் செட்டிங்கில் அவர் விளையாட்டுத்தனமாக ஆக்சன் கட் சொல்லிக் கொண்டிருந்ததை முரளி பார்த்துவிட்டார். ஷூட்டிங்கில் ஒரு இயக்குனருக்கு மரியாதை கொடுக்க தெரியவில்லை என்றால் நீ இங்கு இருந்து கிளம்பி விடு என்று திட்டி விட்டார். நான் கூட அந்த விஷயத்தை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால், அவருடைய அண்ணன் திட்டினதால் கோபப்பட்டு படம் முடியும் வரைக்கும் வேலை பார்க்காமல் யூனிட்டிலிருந்து பாலாஜி கிளம்பி விட்டார். அதற்குப் பிறகு இயக்குனர் எண்ணம் அவரை விட்டுப் போனது. ஆனாலும், நடிகர் ஆனார். ஏதாவது நிகழ்ச்சிகளில் பார்த்து பேசுவோம். அண்ணனை விட தம்பி குறைந்த வயதிலேயே இந்த உலகத்தை விட்டு சென்றது ரொம்பவே வேதனையாக இருக்கிறது என்று கூறுகிறார்.
Follow Us at Google News : அனைத்து சினிமா செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் என்பதை கிளிக் செய்யவும்.