தமிழ் சினிமாவில் நடிகர் விஜய் மற்றும் அஜித் முன்னணி நட்சத்திரங்களாக திகழ்ந்து வருகின்றனர். இவர்கள் இருவருக்குமே சரிக்கு சமமான மாபெரும் ரசிகர் பட்டாளம் இருப்பது அனைவரும் அறிந்த ஒன்றே.
இவர்கள் இருவரும் சில ஆண்டுகளுக்கு முன்னர் திரைப்படங்களில் வரும் வசனம் மூலம் பேசிய வசனங்கள் ஒருவரை ஒருவர் மறைமுகமாக தாக்கி பேசுவது போல இருந்தது. அன்று முதல் ஆரம்பித்து ரசிகர்கள் மத்தியில் தல தளபதி சண்டை.
சமீப காலமாக இரு ரசிகர்களும் ஒற்றுமையாக இருந்து வந்தாலும் ஒரு சில ரசிகர்கள் இன்னும் தலயா , தளபதியா என்ற சண்டையை விடுவதாக இல்லை. இதனால் சமூக வலைத்தளத்திலும் அடிக்கடி இரு ரசிகர்களும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் கடந்த 30ம் தேதி காலை சர்கார் திரைப்படத்தின் 50வது நாளை சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகினி தியேட்டரில் விஜய் ரசிகர்கள் கொண்டாடினர். அப்போது விஸ்வாசம் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு கொண்டாட்டமும் அதே தியேட்டரில் நடந்தது.
இதனால் சென்னை ரோகினி தியேட்டரில் ஒரே சமயத்தில் விஜய் ரசிகர்களும், அஜித் ரசிகர்களும் குழுமியிருந்தனர். திடீரென அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். அங்கிருந்த பேனர்களும் கிழிக்கப்பட்டன. பின்னர் அவர்களை திரையரங்க நிர்வாகிகள் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.