நாகை மீனவன் என்ற பெயரில் பிரபல யூடியூப் சேனல் நடத்தி வந்த ஒருவர் கஞ்சா கடத்தலில் ஈடுபட்டதால் போலீசார் அவரை தீவிரமாக தேடி வருகின்றனர். தற்போது இந்த நியூஸ் சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கைக்கு படகு மூலம் கஞ்சா கடத்த இருப்பதாக சுங்கவரி அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனை அறிந்து நேற்றிரவு சுங்கத் துறை அதிகாரி செந்தில்நாதன் என்பவர் தலைமையில் 15 பேர் கொண்ட குழுவினர் நாகை துறைமுகம் கடலோர பகுதியில் தீவிர ரோந்து பணியில் மேற்கொண்டனர்.
அப்போது நாகை துறைமுகம் அருகே ஒரு படகில் கஞ்சா மூட்டைகள் ஏற்றி கொண்டிருப்பதை கண்டு அங்கு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சுங்கத்துறை அதிகாரிகள் வருவதை அறிந்த கடத்தல்காரர்கள் கஞ்சாவை அங்கேயே வைத்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதை அடுத்து படகை சுற்றி வளைத்த கஸ்டம்ஸ் அதிகாரிகள் படகிலிருந்து 10 மூட்டையில் இருந்த 280 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
மேலும், கடத்தல்காரர்கள் விட்டு சென்ற நான்கு மோட்டார் சக்கர வாகனங்கள், வலை, ஐஸ்கட்டி பெட்டி, கடத்தலுக்கு பயன்பட்ட படகு என அனைத்தையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதோடு சுங்கத்துறை அதிகாரிகள் தப்பிச்சென்ற கடத்தல்காரர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த கும்பலில் குணசீலன் என்பவரும் இருந்துள்ளார். இவர் நாகை மீனவன் என்ற பெயரில் யூடியூப் சேனல் ஒன்று நடத்தி வருகிறார். இந்த யூடியூப் சேனலில் கடல் மீன்கள் சமைப்பது குறித்து அடிக்கடி வீடியோக்களை வெளியிட்டு வந்தார். அதுமட்டும் இல்லாமல் தற்போது கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட படகும் குணசீலன் குடும்பத்துக்கு சொந்தமானது என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
பின் அதிகாரிகள் பறிமுதல் செய்யப்பட்ட 4 மோட்டார் வாகனங்களில் ஒரு மோட்டார் வாகனம் குணசீலனுக்கு சொந்தமானது என தெரிய வந்து உள்ளது. குணசீலன் உள்ளிட்ட 4 பேர்களை பிடிக்க போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும், பிடிபட்ட கஞ்சாவின் சர்வதேச மதிப்பு ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் இருக்கும் என்று சொல்லப்படுகிறது.