தமிழ் சினிமா உலகில் மிகப்பிரபலமான இயக்குனராக திகழ்பவர் வெங்கட்பிரபு. இவர் இயக்கத்தில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், வசூலையும் பெற்றுத் தந்திருக்கின்றது. அந்த வகையில் சமீபத்தில் வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியாகி இருந்த மாநாடு படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பினை பெற்றது. இதுவரை இல்லாத அளவிற்கு வித்தியாசமான கதையை இயக்கி இருந்தார் வெங்கட் பிரபு.
மேலும், நீண்ட இடைவெளிக்கு பிறகு சிம்புவின் படம் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு இருந்தது. இதனை அடுத்து வெங்கட்பிரபு அவர்கள் மன்மதலீலை என்ற படத்தை இயக்கியிருந்தார். தற்போது இவர் நாகசைதன்யா நடிப்பில் புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார். இந்த நிலையில் இவர் விஜய், அஜித்தை வைத்து ஒரு புதிய படம் ஒன்றை இயக்க உள்ள தகவல்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வந்து கொண்டு இருக்கிறது.
வெங்கட் பிரபு படத்தில் விஜய் – அஜித்தா :
அதாவது, மோகன் ராஜா இயக்கத்தில் வேலாயுதம் படத்தில் விஜய் நடித்துக் கொண்டிருந்தார். அப்போது அஜித்குமாரின் மங்காத்தா படப்பிடிப்பு தளத்திற்கு விஜய் சர்ப்ரைஸ் விசிட் அடித்து இருந்தார். அப்போது இயக்குனர் வெங்கட் பிரபு அவர்கள் அஜித்-விஜய் இருவருடனும் இணைந்து ஒரு புகைப்படம் எடுத்தார். இந்த புகைப்படம் எல்லாம் ஏற்கனவே இணையத்தில் வைரல் ஆகி இருந்தது. மேலும், மங்காத்தா படம் வெளிவந்த போது படத்தை பார்த்த விஜய் அவர்கள் இந்த படத்தின் கதையை சொல்லியிருந்தால் நானும் வந்திருப்பேனே என்று கேட்டிருந்தார்.
கங்கை அமரன் அளித்த பேட்டி :
அதேபோல் அஜித், விஜயை வைத்து படம் இயக்க இருப்பதாகவும் வெங்கட்பிரபு வெளிப்படையாக கூறியிருந்தார். இந்த தகவலும், புகைப்படமும் வெளியானதையடுத்து ரசிகர்கள் பலரும் இவர்கள் இருவரும் இணைந்து நடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார்கள். ஆனாலும், அதற்கான வாய்ப்புகள் அமையவில்லை. இந்நிலையில் வெங்கட் பிரபுவின் தந்தையும் இசையமைப்பாளருமான கங்கை அமரன் அவர்கள் விஜய்- அஜித் இணைந்து நடிக்கும் படம் குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்திருக்கிறார்.
அதில் அவர் கூறியிருப்பது, மங்காத்தா படத்தின் போதே விஜய்யிடம் வெங்கட் பிரபு படம் பண்ணுவது பற்றி பேசியிருந்தார். வெங்கட்பிரபுவும் அதற்காக முயற்சி செய்து கொண்டிருக்கிறார். விஜய்- அஜித் இருவரையும் வைத்து இயக்கும் ஒரு புதிய கதையை வெங்கட் பிரபு உருவாக்கிக் கொண்டிருக்கிறார். அந்த படம் கண்டிப்பாக பெரிய பான் இந்திய படமாக உருவாகும் என்பதில் ஐயமில்லை. அதுமட்டுமில்லாமல் விஜய்-அஜித் இருவரும் நல்ல நண்பர்கள்.
யாருக்கும் தெரியாமல் சந்தித்து கொள்ளும் விஜய் – அஜித் :
இரு குடும்பமும் யாருக்கும் தெரியாமல் துபாயில் அடிக்கடி சந்தித்துக் கொள்வார்கள். வெளியுலகில் தான் அஜித்-விஜய் இருவரையும் எதிரிகளாக காண்பிக்கிறார்கள். ஆனால், இரு குடும்பங்களும் நல்ல நண்பர்களாக இருக்கிறார்கள் என்று கூறி இருக்கிறார். இப்படி கங்கை அமரன் அளித்த பேட்டியின் மூலம் கூடிய விரைவில் அஜித்- விஜய் இணைந்து நடிக்கும் படம் குறித்த தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.