நீட் தேர்வு முறையால், மருத்துவ சீட் கிடைக்காத விரக்தியில் தற்கொலைசெய்துகொண்டார், அரியலூர் மாவட்டம் குழுமூரைச் சேர்ந்த ஏழை மாணவி அனிதா. அனிதாவின் மரணத்துக்கு நீதிகேட்டும், நீட் தேர்வை முழுமையாக ரத்துசெய்யக் கோரியும் தமிழகம் முழுவதும் மாணவர்கள் வகுப்பைப் புறக்கணித்துப் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
அனிதாவின் மரணத்தைத் தொடர்ந்து, கமல், ரஜினி உட்பட பல திரைப் பிரபலங்கள் ட்விட்டரில் தங்களது கருத்தைத் தெரிவித்துவருகின்றனர். இதற்கிடையில், மாணவர்களின் போராட்டங்களில் திரைத்துறையைச் சேர்ந்த பலர் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்துவருகின்றனர்.
இன்று சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள், அனிதா மரணத்துக்கு நியாயம் கேட்டும், நீட் தேர்வை ரத்துசெய்ய வலியுறுத்தியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஐந்நூறுக்கும் மேற்பட்ட மாணவர்கள் வகுப்புப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு மாணவர்களின் போராட்டத்தில் கலந்துகொண்ட இயக்குநர் வெற்றிமாறன், ’மாணவர்களின் கருத்தை அரசுகள் கேட்க வேண்டும்’ என்று கூறினார்.
இதற்கு முன்பாக, ஞாயிறு அன்று இயக்குநர் பா.இரஞ்சித்தின் `நீலம் அறக்கட்டளை’யின் சார்பில் அனிதாவின் மரணத்துக்காக அஞ்சலி செலுத்தும் `உரிமை ஏந்தல்’ நிகழ்ச்சி, சென்னை லயோலா கல்லூரியில் நடைபெற்றது. இதில், திரைத்துறையைச் சேர்ந்த இயக்குநர்கள் மற்றும் நடிகர்கள் பலரும் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.