தமிழ் சினிமா உலகில் தன்னுடைய உருவத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக அறியப்பட்டவர் குண்டு கல்யாணம். இவர் 1967ஆம் ஆண்டு தான் சினிமா உலகில் அடியெடுத்து வைத்தார். இவருடைய நடிப்பு மற்றும் உடல் தோற்றம் இவரை ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆக்கியது. பின் இவர் சூப்பர் ஸ்டார் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் படத்தில் நடித்துள்ளார். இவர் இதுவரை 500க்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். சினிமாவை தாண்டி இவர் ஒரு தீவிர அதிமுக தொண்டர். மேலும், தன்னுடைய பேச்சு திறமையின் மூலம் அதிமுக கட்சியின் வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டியவர்.
சமீபத்தில் இவர் தீவிர சிறுநீரக பிரச்சனையால் அவதிப்பட்டு இருந்தது அனைவருக்கும் தெரிந்ததே.சிறுநீரக சிகிச்சைக்கு போதிய பணம் இல்லாமல் இவர் தன்னுடன் நடித்த பிற நடிகர்கள் மற்றும் அரசியல்வாதிகள் பலரிடம் உதவி கேட்டு இருந்தார். ஆனால், உதவி கிடைக்காமையால் இவர் தன்னுடைய ஆபரேஷனை தள்ளி வைத்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் இவரிடம் பேட்டி எடுக்கப்பட்டது. அதில் அவர் தன் வாழ்க்கையில் நடந்த மிக சோகமான சம்பவங்களை பகிர்ந்து கொண்டார்.
சினிமாவை தவிர எதுவும் தெரியாது :
அதில் அவர் கூறியது,நான் சினிமாவில் நடித்ததால் பேர், புகழ் கிடைத்தது. ஆனால், சொத்து தான் வாங்க முடியல. ஏன்னா, அப்ப எல்லாம் ஒரு படத்துக்கு 500 ரூபாய் ,1000 தான் சம்பளம். இப்ப தர மாதிரி எல்லாம் அப்ப கிடையாது. நான் பணம் சம்பாதிக்கவில்லை என்றாலும் மக்களுடைய இதயங்களை சம்பாதித்தேன். நான் சினிமா, நாடகம் என்று இரண்டில் மட்டும் தான் என்னுடைய கவனம் இருந்தது. இதைத் தாண்டினால் நான் வேறு எந்த ஒரு தொழிலையும் செய்யவில்லை. நான் சட்ட மந்திரியாக இருந்து என்ன பிரயோஜனம். நான் சினிமா துறையில் இருந்து விலகியது நினைத்து இப்ப ரொம்ப ஃபீல் பண்ணுகிறேன்.
1998ல் நாடாளுமன்றத் தேர்தல் நடந்த போது என்னை வேறு எந்த வேலையாக இருந்தாலும் ஒதுக்கிவிட்டு தேர்தலுக்கான பணிகளை பார்த்துக்கொள் என்று சொன்னார்கள். அப்போது தான் நான் சினிமா வாழ்க்கையில் இருந்து விலகினேன். நான் தேர்தலுக்காக உழைத்தேன். ஆனால், எனக்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை. நான் உடம்பு சரியில்லாமல் இருந்தபோது யாருமே எனக்கு உதவ வில்லை. ஓபிஎஸ் ஐயா மட்டும் தான் எனக்கு உதவி செய்தார். இப்போ ரொம்ப கஷ்டப்படுகிறேன்.
நாம் இருவர் நமக்கு இருவர் வாய்ப்பு :
ரஜினிகாந்த் போன்ற பெரிய நடிகர்கள் நீங்க எனக்கு பண உதவி செய்யவில்லை என்றாலும் பரவாயில்லை என்னை மாதிரி நலிந்த நடிகர்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். நாங்கள் அதை வைத்து உடம்பு சரி செய்வதற்காகத் தான் கேட்கிறோம். மீண்டும் எனக்கு சினிமாவில் நடிக்க ஆசையாக இருக்கிறது. இப்போது இருக்கும் இளம் இயக்குனர்கள் எனக்கும் ஒரு வாய்ப்பு தாருங்கள் என்று கூறி இருந்தார். இப்படி ஒரு நிலையில் இவருக்கு நாம் இருவருர் நமக்கு இருவர் தொடரில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
22 ஆண்டுகள் கழித்து ரீ-என்ட்ரி :
22 ஆண்டுகள் கழித்து கிடைத்து இருக்கும் சின்னத்திரை வாய்ப்பு குறித்து பேசியுள்ள குண்டு கல்யாணம் ‘விஜய் டிவியில் ஃபோன் செய்து அழைத்ததும் மிகவும் சந்தோஷமாஇருந்தது . இது ஒரு கெஸ்ட் ரோல் தான், அடுத்தடுத்த தொடர்களில் வாய்ப்பு இருந்தா நிச்சயம் கூப்பிடுறோம்னு சொன்னாங்க. மனநல மருத்துவமனையில் வேலை பார்க்கிற டாக்டர் கதாபாத்திரத்தில் நடிச்சிருக்கேன். அது எப்படி இருக்கிறது என்று மக்கள் தான் பார்த்துவிட்டு சொல்ல வேண்டும் ‘ என்று கூறியுள்ளார்.