தமிழ் சினிமா உலகில் இசையமைப்பாளர், பாடகர், நடிகர் என பல துறைகளில் கலக்கி கொண்டு இருக்கிறார் நடிகர் ஜீ.வி. பிரகாஷ். தற்போது உள்ள பிரபலமான நடிகர்களின் முன்னணி நடிகராக ஜி.வி. பிரகாஷ் திகழ்ந்து கொண்டு இருக்கிறார். இவர் இசைத்துறையில் புகழ்பெற்ற ஏ.ஆர்.ரகுமானின் அக்கா மகன் ஆவார். இவர் சினிமா துறையில் முதன் முதலாக வெயில் படத்தில் தான் இசை அமைத்து அறிமுகமானார். இந்த படத்தில் வெளிவந்த பாடல்கள் மூலம் மக்களிடையே அதிக வரவேற்பை பெற்றார்.
இந்த படத்தை தொடர்ந்து நிறைய படங்களில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.இவர் ஜென்டில்மேன் திரைப்படத்தில் ஒரு பாடகனாக அறிமுகமானார். அதன் பின்னர் படங்களில் ஹீரோவாக நடிக்கவும் தொடங்கினார். இவருடைய பென்சில், டார்லிங், திரிஷா இல்லனா நயன்தாரா, சிவப்பு மஞ்சள் பச்சை ஆகிய பல படங்கள் சூப்பர் ஹிட் ஆனது. இறுதியாக இவர் நடித்த படங்கள் பெரிதாக ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறவில்லை.
தற்போது இவரது நடிப்பில் கள்வன் படம் வெளியாகி இருக்கிறது. ஜி வி பிரகாஷ் ஒரு நல்ல நடிகர் என்பதைவிட ஒரு சிறந்த இசையமைப்பாளர் என்பதை தான் பலரும் ஒப்புக்கொள்ளவார்கள். அதிலும் இவர் இசையமைத்த வெயில், மயக்கம் என்ன, ராஜா ராணி, ஆடுகளம், ஆயிரத்தில் ஒருவன், அசுரன் போன்ற பல படங்களில் இவரின் இசை பெரிதும் பாராட்டப்பட்டது. ஆனால், இதுவரை இவரது இசைக்கு ஒரு நல்ல அங்கீகாரம் கிடைக்கவில்லை என்பதே ரசிகர்களின் ஆதங்கம்.
ஆனால், இவருக்கு பின்னர் இசையமைப்பாளராக அறிமுகமான அனிருத்திற்கு ஏகப்பட்ட அங்கீகாரம் கிடைத்து வருகிறது. அதே போல அசுரன் படத்தின் 100வது நாள் வெற்றி விழாவில் பலருக்கும் விருதுகள் வழங்கப்பட்டது. அந்த மேடையில் தனுஷ் அனைவருக்கும் விருது கொடுத்துக்கொண்டு இருந்தார். ஆனால், ஜி வி பிரகாஷ் வந்த போது மட்டும் அவரை கண்டுகொள்ளாமல் சென்றுவிட்டார் தனுஷ்.
இந்த விஷயம் தற்போது வரை சர்ச்சையாகவே இருந்து வருகிறது. இப்படி ஒரு நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற ஜிவி பிரகாஷ் ‘இரண்டு நண்பர்கள் இருக்கும்போது சண்டை வருவது எல்லாம் சகஜமான விஷயம்தான். அப்படித்தான் எனக்கும், தனுஷுக்கும் பிரச்னை வந்தது. இதனால் நாங்கள் இரண்டு பேரும் ஆறு வருடங்கள் பேசிக்கொள்ளாமல் இருந்தோம். இப்போது எல்லா பிரச்னைகளையும் சரி செய்தாயிற்று. நாங்கள் இப்போது நல்ல நண்பர்கள் தான் என்று கூறியுள்ளார்.
அதே போல கடந்த 2021 ஆம் ஆண்டு 67-வது தேசிய திரைப்பட விழாவில் தமிழ் சினிமாவில் இருந்து பலருக்கு தேசிய விருதுகளை வாங்கி இருந்தனர். இதில் மற்றவர்களுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டதை விட , விஸ்வாசம் படத்திற்காக இமானுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டது தான் பெரும் கேலிக்கு உள்ளானது. அவரை விட அசுரன் படத்திற்காக ஜி வி பிரகாஷ்ஷிற்கு இந்த விருதை கொடுத்து இருக்கலாம் என்றும் பலர் கூறி வந்தனர்.