விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் ஜி.வி.பிரகாஷ்- சைந்தவி மனுதாக்கல் செய்திருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த சில மாதங்களாகவே ஜி.வி பிரகாஷ்-சைந்தவி பிரிந்த செய்தி தான் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கோலிவுட்டில் மிக பிரபலமான இசையமைப்பாளர், பாடகர், நடிகர் என பல துறைகளில் சாதித்து வருபவர் ஜிவி பிரகாஷ். இவர் இரு ஆஸ்கார் விருதுகளை அள்ளி வந்து பெருமை சேர்த்த இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமானின் அக்கா மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், ஜிவி பிரகாஷ் அவர்கள் முதன்முதலாக ‘வெயில்’ என்ற படத்தில் இசை அமைத்து தான் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி இருந்தார். அந்தப் படத்தில் வெளிவந்த பாடல்கள் எல்லாம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதைத் தொடர்ந்து இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து வருகிறார். குறிப்பாக, கடந்த 2024 ஆம் ஆண்டு இவருக்கு நல்ல ஆண்டாக அமைந்தது என்று தான் சொல்ல வேண்டும். இந்த ஆண்டு இவர் இசையில் வெளிவந்த அனைத்து பாடல்களும் ஹிட் தான்.\
ஜிவி பிரகாஷ் குறித்த தகவல்:
அதோடு கேப்டன் மில்லர் தொடங்கி, தங்கலான், அமரன், லக்கி பாஸ்கர் என இவர் இசைக்காகவே தனி பாராட்டுகளைப் பெற்ற படங்கள் இருக்கிறது. அதோடு இவர் படங்களில் ஹீரோவாகவும் கலக்கி கொண்டு இருக்கிறார். அந்த வகையில் கடைசியாக இவர் நடித்த படம் கிங்ஸ்டன். இந்த படத்தை இவரே தயாரித்து இருந்தார். ஆனால், இந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை. தற்போது இவர் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

ஜி.வி.பிரகாஷ்-சைந்தவி:
இதற்கிடையில் ஜி.வி.பிரகாஷ்-சைந்தவி இருவரும் பல வருடங்களாக காதலித்து கடந்த 2013 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள். பல வருடங்களுக்கு பிறகு தான் இவர்களுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் கடந்த ஆண்டு தாங்கள் இருவரும் பிரிவதாக சோசியல் மீடியாவில் அறிவித்து இருந்தார்கள். இது பலருக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது. ஆனால், இவர்களின் பிரிவிற்கு காரணம் என்ன? என்று தெரியவில்லை.

ஜி.வி.பிரகாஷ்-சைந்தவி விவாகரத்து:
பிரிவிற்கு பிறகும் சைந்தவி- ஜி.வி பிரகாஷ் இருவருமே ஒன்றாக நிகழ்ச்சிகளில் கலந்து வருகிறார்கள்.
அந்த வகையில் சமீபத்தில் நடந்த இசை கச்சேரியில் இருவரும் சேர்ந்து பாடி இருந்தது ரசிகர்கள் மத்தியில் வரவேற்கப்பட்டது. ஆனால், இவர்களின் பிரிவை ஏற்று கொள்ள முடியவில்லை என்று கூறி வருகிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் ஜி.வி பிரகாஷ் மற்றும் சைந்தவி இருவரும் சேர்ந்து விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கிறார்கள்.
குடும்ப நல நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு வந்திருந்த ஜி.வி பிரகாஷ் - சைந்தவி ஆகியோர், விசாரணை முடிந்து ஒரே காரில் புறப்பட்டுச் சென்றனர்.#GVPrakash #Saindhavi pic.twitter.com/X5o6xHrkqM
— Kollywood Street (@KollywoodStreet) March 24, 2025
நீதிமன்றம் விசாரணை:
இதற்காக இவர்கள் இருவருமே ஒரே காரில் தான் சென்றிருக்கிறார்கள். சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் பரஸ்பரமாக விவாகரத்து கேட்டு இருவரும் மனுதாக்கல் செய்திருக்கிறார்கள். இந்த மனு சென்னை முதலாவது கூடுதல் குடும்ப நல நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஜி.வி.பிரகாஷ் மற்றும் சைந்தவி நேரில் ஆஜராகி பரஸ்பரமாக பிரிவதாக அறிவித்திருக்கிறார்கள். இதனை அடுத்து இந்த வழக்கின் விசாரணையை நீதிபதி ஒத்தி வைத்திருக்கிறார். விசாரணைக்கு பிறகு ஜி.வி பிரகாஷ்-சைந்தவி இருவருமே ஒரே காரிலேயே புறப்பட்டு சென்றிருக்கிறார்கள்.






