இளையராஜாவின் மறுபக்கம் குறித்து பலரும் அறிந்திடாத தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் இசைஞானி என்ற அந்தஸ்துடன் பல ஆண்டுகளாக இசைத்துறையில் ஜாம்பவானாக திகழ்ந்து வருபவர் இளையராஜா. 70 காலகட்டம் துவங்கி தற்போது வரை இவர் இசைத்து வருகிறார். இவருடைய இசையை ரசிக்காத ரசிகர்கள் யாரும் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.
மேலும், இவர் 1976 ஆம் ஆண்டு ‘அன்னக்கிளி’ என்ற திரைப்படத்துக்கு இசை அமைத்ததன் மூலம் தான் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாகி இருந்தார். அதனை தொடர்ந்து இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசை அமைத்து இருக்கிறார். இதுவரை இவர் ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களில் இசையமைத்து இருக்கிறார். அதோடு இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பிற மொழி படங்களுக்கும் இசையமைத்து இருக்கிறார்.
இளையராஜா திரைப்பயணம்:
இவர் இசையமைப்பாளர், பாடகர் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. ஆனால், இவர் பாடல் வரிகளை எழுதுபவர் என்று பலருக்கும் தெரியாத ஒன்று. இவர் கருநாடக இசை மற்றும் மேற்கத்திய இசையில் புலமை பெற்றவர். இது ஒரு பக்கம் இருக்க, சமீப காலமாகவே இளையராஜாவை குறித்து பலரும் மனம் திறந்து பேசி வருகிறார்கள். அது மட்டும் இல்லாமல் அவருடன் இருந்த கசப்பான அனுபவங்களையும் சில பேர் பகிர்ந்து இருக்கிறார்கள்.
இளையராஜா குறித்த தகவல்:
அந்த வகையில் அவருடன் பணியாற்றி இருந்த சிலர் இளையராஜாவை விமர்சித்து பேட்டி அளித்திருந்தார்கள். ஒரு சமயத்தில் அவரைப்பற்றி மோசமாகவும் விமர்சனங்கள் வந்திருந்தது. இப்படி இருக்கும் நிலையில் இளையராஜாவை குறித்த வீடியோ தான் தற்போது வெளியாகி இருக்கிறது. அதில் தொகுப்பாளர், நீங்கள் திரைத்துறையில் பல பேருக்கு சொல்லாமல் பல உதவிகளை செய்து இருக்கிறீர்கள். குறிப்பாக, காசே வாங்காமல் கூட இசை அமைத்து இருக்கிறீர்கள். இது குறித்து உங்களுடைய கருத்து என்று கேட்டிருக்கிறார்கள்.
இளையராஜா அளித்த பேட்டி:
அதற்கு இளையராஜா, அது உண்மைதான். உதாரணத்திற்கு மணிரத்னம் சொல்லலாம். நான் இந்த கேள்வி கேட்டதற்காக சொல்கிறேன். மற்றபடி இதை செய்திக்காக நான் சொல்லவில்லை. மணிரத்னம் சினிமாவில் நுழைந்த போது அவர், என்னிடம் உங்களுடன் நாங்கள் இருப்பதை பெருமையாக நினைக்கிறோம். உங்களுக்கு கொடுக்கும் அளவிற்கு என்னிடம் பணம் இல்லை என்று சொல்லியிருந்தார். அதற்கு நான், உன்னால் முடிந்ததை கொடு என்று சொல்லி அனுப்பிவிட்டேன். அதற்குப் பிறகு அவருக்கே தெரியாமல் பல தயாரிப்பாளர்களிடம், இயக்குனர்களிடம், பிரபலங்களிடம் அவரைப் பற்றி பேசியிருக்கிறேன்.
பிரபலங்கள் சொன்ன தகவல்:
அவருடைய பெயரை நிறைய பேரிடம் சொல்லி வாய்ப்பு கொடுங்கள் என்று கேட்டிருக்கிறேன். இது மணிரத்தினத்திற்கு தெரியாது. அதே போல் திறமை இருப்பவர்களுக்கு என்னால் முடிந்த உதவியை நான் செய்திருக்கிறேன். பணத்திற்காக நான் அவர்களுடைய திறமையை வீணடிக்க விரும்பவில்லை என்று கூறியிருக்கிறார். இதை அடுத்து அந்த வீடியோவில் இயக்குனர் பி.வாசு, மணிவண்ணன், எஸ்.வி சேகர், பிரபல தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் எல்லோருமே இளையராஜா திறமைக்கு மதிப்பு கொடுக்கக் கூடியவர். எங்களை போன்ற பல பேரை அவர் வளர்த்துவிட்டு இருக்கிறார். ஒரு ரூபாய் கூட காசு வாங்காமல் நிறைய பேருக்கு உதவி செய்திருக்கிறார். இது பலருக்கும் தெரியாது என்று கூறியிருக்கிறார்கள்.