இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமலஹாசன் நடித்து வரும் படம் இந்தியன் 2. தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. படத்தில் இடம்பெறும் சண்டைக் காட்சிக்காக ஈவிபி பிலிம் சிட்டியில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் நடந்து வந்துள்ளது. நேற்று இரவு படத்தின் சண்டைக் காட்சிக்காக லைட்டிங் செய்யும் பணியில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டிருந்தது. அப்போது படப்பிடிப்பு தளத்தில் திடீரென்று கிரேன் அறுந்து விழுந்து 3 பேர் அநியாயமாக உயிரிழந்து உள்ளார்கள். இந்த கோர சம்பவம் ஒட்டுமொத்த தமிழ் திரையுலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த கோர விபத்தில் உதவி இயக்குனர் கிருஷ்ணா, ஆர்ட் உதவியாளர் சந்திரன், தயாரிப்பு உதவியாளர் மது ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இவர்களின் இழப்பால் ஒட்டுமொத்த படக்குழுவும் சோகத்தில் உள்ளது. இந்நிலையில் ஷூட்டிங் ஸ்பாட்டில் கிருஷ்ணா மற்றும் மது ஆகியோருடன் நெருங்கிப் பழகிய ஒருவர் இந்த சம்பவம் குறித்து சில விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அதில் அவர் கூறியது, நேற்று இரவில் படப்பிடிப்பு ரொம்ப நல்ல ஜாலியாக நடந்து கொண்டிருந்தது. யாரு கண்ணு பட்டது என்று தெரியலை இப்படி நடந்துவிட்டது. இந்த விபத்தில் ஒருத்தருக்கு கால் உடைந்து விட்டது. இந்த விபத்தில் இறந்த டெக்னீசியன் சங்கரன் எல்லாரிடமும் அன்பாக, நன்றாக பேசுவார். இந்த விபத்தில் இறந்த மது எனக்கு ரொம்ப நெருக்கமானவர். ரொம்ப சின்ன பையன் 25 வயது தான் ஆகிறது. மது புரொடக்ஷன்ல இருந்தார்.
எல்லோருக்கும் அவர் தான் சாப்பாடு தருவது, துருதுரு என்று அங்கும் இங்கும் சுற்றிக் கொண்டிருப்பார். இனி அவர் இல்லாமல் சூட்டிங் ஸ்பாட் வெறிச்சோடி தான் இருக்கும். அதே மாதிரி கிருஷ்ணாவை போல் ஒரு நேர்மையான மனிதரைப் பார்க்க முடியாது. எதையும் ரொம்ப அன்பாக சொல்லி கொடுத்து பழகுவார். அவர் கோபப்பட்டு நாங்கள் பார்த்ததே இல்லை. இந்தியன் 2 படத்துக்காக சில கலைஞர்கள் வெளிநாட்டிலிருந்து வந்து இருக்கிறார்கள். அவர்கள் சொல்வது சில பேருக்கு புரியாது. இவர்தான் மொழிபெயர்த்து உதவி செய்வார். எந்த வேலை என்றாலும் கொஞ்சம் கூட முகம் சுளிக்க மாட்டார். இவருக்கு இப்பதான் கல்யாணமாகி 4 வருடம் ஆகிறது. பிரபல கார்ட்டூனிஸ்ட் மதனின் இளைய மகளை கல்யாணம் செய்திருக்கிறார். இவருக்கு ஒரு ஆண் குழந்தையும் இருக்கு.
இவருக்கு நேர்ந்த இந்த கோர சம்பவத்தை நினைத்து எனக்கு ரொம்ப கஷ்டமாக உள்ளது. சம்பவம் நடந்தபோது கிரேன் கீழே விழ போவதை பார்த்து கிருஷ்ணா அங்கிருந்த ஒரு துணை நடிகையின் கையை பிடித்து தள்ளிவிட்டார். உயிர்போகும் நிலையிலும் அவர் அந்த நடிகையை காப்பாற்றினார். பின் அந்த நடிகை அண்ணா நீங்களும் வந்திருங்க என்று சொல்லி முடிப்பதற்குள் அவர் மேலே கிரேன் விழுந்து விட்டது. பின் அந்த நடிகையை சமாதனப்படுத்தி நாங்கள் தான் ஆட்டோவில் ஏற்றி வைத்தோம். அவங்க இன்னும் அந்த அதிர்ச்சியில் இருந்து வெளிவரவே இல்லை. எல்லாமே கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்து விட்டது. ஒரு குடும்பமாக ஷூட்டிங் ஸ்பாட்டில் கலகலப்பாக இருந்தது. இப்படி யார் கண்ணு பட்டது தெரியலை என்று மனவேதனையுடன் அழுது கொண்டே கூறினார்.