இசையமைப்பாளர் அனிருத் குறித்து ஜேம்ஸ் வசந்தன் அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழ் சினிமாவில் பிரபலமான இசையமைப்பாளராக இருப்பவர் ஜேம்ஸ் வசந்தன். இவர் சுப்பிரமணியம் என்ற படத்தின் மூலம் தான் இசையமைப்பாளராக அறிமுகமானவர். இந்த படத்தின் மூலம் இவர் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார். இதனை தொடர்ந்து இவர் பசங்க மற்றும் ஈசன் போன்ற பல வெற்றி படங்களுக்கு இசையமைத்திருக்கிறார்.
பின் இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும் நடுவராக பங்கேற்று இருக்கிறார். அதேபோல் இவர் சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார். சமீபத்தில் வெளியான ‘அரியவன்’ என்ற படத்திற்கு ஜேம்ஸ் இசையமைத்து இருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இது ஒருபுறம் இருக்க, ஜேம்ஸ் வசந்தன் சமீப காலமாக தனது முகநூல் பதிவுகள் மூலம் அடிக்கடி கவனமீர்த்து வருகிறார்.
இவர் இணையதளத்தில் சமூக ரீதியான பிரச்சினைகளுக்கு குரல் கொடுத்து வருகிறார். பல சமயங்களில் இவருடைய கருத்துக்கள் சர்ச்சைகளில் முடிந்து இருக்கிறது. அது மட்டும் இல்லாமல் இவர் ஏதாவது ஒன்று பேசி சர்ச்சையில் சிக்குவதையே வாடிக்கையாகவும் வைத்திருக்கிறார். இந்த நிலையில் அனிருத் பற்றி இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் பேசியிருக்கும் கருத்து தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
நிகழ்ச்சியில் ஜேம்ஸ் வசந்தன்:
அதாவது, சமீபத்தில் தனியார் நிறுவனம் நடத்திய ஒரு நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கலந்து கொண்டிருந்தார். அப்போது அவர் அனிருத் குறித்து கூறியது, இமான் சிறந்த இசையமைப்பாளர் தான். அவருடைய பலமே மெலோடி இசையை கொடுப்பதுதான். அதே சமயம் ரசிகர்களுக்கு தேவையான அனைத்தையும் தன்னுடைய இசையால் அவர் விருந்து வைத்து வருகிறார். ஆனால், அனிருத் அப்படி இல்லை. அவருடைய இசை முழுவதும் அதிரடி இசையாக இருக்கிறது. வேறு இசைகளில் அவர் அதிக கவனம் செலுத்தவில்லை.
அனிருத் குறித்து சொன்னது:
அவருடைய நோக்கமே ரசிகர்களை கவர்வதாக தான் இருக்கிறது. குத்து பாட்டுகளுக்கு மட்டுமே அனிருத் இசைக்கிறார். இதை கொண்டு எத்தனை நாட்கள் அவர் ஓட்ட முடியும்? பிரியாணியை ஒரு முறை சாப்பிட்டால் தான் நன்றாக இருக்கும். தொடர்ந்து அதை சாப்பிட்டால் எப்படி இருக்கும்? ரசிகர்கள் ராக் மியூசிக் மட்டும் விரும்புவதால் தொடர்ந்து அதையே கொடுத்து வருகிறார். இதற்கு தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் தலை சாய்ப்பதால் தான் அவருக்கு வேறு வாய்ப்பு கிடைக்காமல் போகிறது. இதை அவருக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு தனக்கு எது வருகிறதோ அதை மட்டுமே வெளிக்காட்டுகிறார்.
கண்டனம் தெரிவிக்கும் ரசிகர்கள்:
ஆனால், இசையமைப்பாளர்களுக்கு இது அழகு அல்ல. இசையமைப்பாளர் என்பவர் ஒரு படத்தின் கதைக்கு என்ன தேவையோ, அந்த இடத்திற்கு ஏற்றவாறு இசையமைத்துக் கொடுக்க வேண்டும். ராக் மியூசிக் மட்டும் படத்தின் சிறந்த இசை என்று சொல்லிட முடியாது. அந்த படத்திற்கு தேவையான மெலோடி, குத்து பாட்டு, பிஜிஎம் போன்ற பல விஷயங்கள் இருக்க வேண்டும். அது இருந்தால் தான் அந்த இசை சிறந்த இசை யாக இருக்கும் என்று கூறியிருக்கிறார். இப்படி ஜேம்ஸ் வசந்தன் அளித்த பேட்டி அனிருத் ரசிகர்கள் மத்தியில் கோபத்தை கிளப்பி இருக்கிறது. இதனால் ரசிகர்கள் பலரும் ஜேம்ஸ் வசந்தனை வறுத்தெடுத்து வருகிறார்கள்.