தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் ஜீவா. தற்போது இவருடைய நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் தான் அகத்தியா. இந்த படத்தை இயக்குனர் பா.விஜய் இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் அர்ஜுன், ராசி கண்ணா, எட்வர்ட், ரோகினி, சார்லி உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். இந்த படத்தை வேல்ஸ் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷ்னல் தயாரித்து இருக்கிறது. பேய் கதைக்களத்தை மையமாக வைத்து வெளியாகி இருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

கதைக்களம்:
படத்தில் ஹீரோ ஜீவா ஆர்ட் டைரக்டராக வேண்டும் என்று ஆசைப்படுகிறார். இதனால் இவர் தன்னுடைய சொந்த பணத்தை எல்லாம் செலவு செய்து மிகப் பெரிய அரண்மனை போன்று ஒரு செட்டை ஏற்பாடு செய்கிறார். தன்னுடைய படத்திற்காக பல கஷ்டங்களை கடந்து அந்த அரண்மனையை ஜீவா உருவாக்கினார். ஆனால், அந்த படம் ஆரம்பிப்பதற்கு முன்னாடியே நின்று விடுகிறது. அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் வேதனையில் இருக்கிறார் ஜீவா.
பின் ஜீவா அந்த அரண்மனை செட்டில் ‘ஸ்கேர் ஹவுஸ்’ என்று மாற்றுகிறார். டிக்கெட் வாங்கி பொதுமக்களை எல்லாம் உள்ளே அனுப்பி திகில் அனுபவத்தை கொடுக்கிறார். இதற்கிடையில் ஜீவாவும், ராசி கண்ணாவும் காதலிக்கிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் அந்த அரண்மனைக்குள் உண்மையாகவே அமானுஷ்யம் விஷயங்கள் உலவுகின்றது. அந்த வகையில் ஒரு முறை உள்ளே சென்ற காதல் ஜோடியில் காதலன் ஒருவன் மாயமாகி விடுகிறார்.
இதனால் பொதுமக்கள் எல்லோருமே அந்த அரண்மனைக்குள் செல்ல பயப்படுகிறார்கள். பின் போலீசும் இந்த இடத்தில் யாரும் வரக்கூடாது என்று எச்சரிக்கை விடுகிறார்கள். ஜீவா தன்னுடைய எல்லா கனவுகளுமே தோற்றுப் போகிறது என்று சோகத்தில் இருக்கிறார். இன்னொரு பக்கம் வீட்டில் எலும்புருக்கி நோயால் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாக இருக்கும் தன் தாயை நினைத்து வருத்தப்படுக்கிறார். அந்த சமயத்தில் தான் அரண்மனை செட்டிற்கு கீழ் ஒரு சுரங்கம் இருப்பதை தெரிய வருகிறது.

அங்கு சென்று பார்க்கும் போது நிறைய அதிர்ச்சியான விஷயங்கள் நடக்கிறது. அப்போது அந்த இடத்தில் ஜீவாவிற்கு பழைய வீடியோ ரீல் கிடைக்கிறது. அதை பார்த்தவர் ரொம்பவே ஷாக் ஆகிறார். அதற்குப்பின் கதை 1940 களுக்கு நகர்கிறது. அங்கு அர்ஜுன் என்பவர் வருகிறார். அர்ஜுன் யார்? அவர் என்ன செய்தார்? அவருக்கும் இந்த அரண்மனைக்கும் இருக்கும் தொடர்பு என்ன? ஜீவா தன்னுடைய தாயை காப்பாற்றினாரா? அரண்மனைக்குள் நடந்த அமானுஷ்யங்களுக்கு பின்னணி என்ன? என்பது தான் படத்தினுடைய மீதி கதை.
படத்தின் ஹீரோ ஜீவா சிறப்பாக நடித்து இருக்கிறார். ஆரம்பத்தில் ஜீவா ஹீரோவாக தெரிந்தாலும் கதை செல்ல செல்ல அர்ஜுன் தான் படத்தை தாங்கி சென்றார் என்று சொல்லலாம். அர்ஜுனுடைய கதாபாத்திரத்தை இயக்குனர் சிறப்பாகவும் அழுத்தமாகவும் செய்திருக்கிறார். அதற்கு ஏற்ப அர்ஜுனன் தன்னுடைய முழு உழைப்பை கொடுத்திருக்கிறார். இவர்களை அடுத்து படத்தில் வரும் ராசி கண்ணாவிற்கு பெரிதாக முக்கியத்துவம் இல்லை என்றாலும் தனக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்.

சித்த மருத்துவத்தின் முக்கியத்துவத்தை சொல்லும் வகையில் இயக்குனர் இந்த படத்தில் காண்பித்து இருக்கிறார். இதற்கு முன்பு வந்த சித்த மருத்துவ சம்பந்தப்பட்ட படங்களின் கதை எல்லாம் சேர்த்து ஒரு கதையாக இயக்குனர் கொடுத்திருக்கிறார் என்று தான் சொல்லணும். ஆனால், இதில் ஒரே ஒரு வித்தியாசம் அமானுஷ்யத்தை புதுமையாக காண்பித்து இருக்கிறார். இயக்குனரின் இந்த புது முயற்சிக்கு பாராட்டை சொல்லலாம். இவரை அடுத்து படத்தில் வரும் மற்ற கதாபாத்திரங்களுமே தங்களுக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

யுவன் சங்கர் சங்கர் ராஜாவின் பின்னணி இசை நன்றாக இருந்தாலும் பாடல்கள் பெரிதாக கவரும் வகையில் இல்லை. விஎஃப்எக்ஸ் காட்சிகள் அருமையாக இருக்கிறது. குறிப்பாக, பார்வையாளர்களையே திகில் ஊட்டும் அளவிற்கு ஒளிப்பதிவாளர் காட்சிகளை காண்பித்திருக்கிறார். படம் ஆரம்பத்திலிருந்து இறுதிவரை நன்றாக தான் செல்கிறது. இடையில் கொஞ்சம் சலிப்பை தட்டி இருக்கிறது. இருந்தாலும், அது கதையை பாதிக்கவில்லை. கிளைமாக்ஸ் சண்டைக்காட்சி நன்றாக இருக்கிறது. மொத்தத்தில் ஒரு சுமாரான படமாக அகத்தியா இருக்கிறது.
நிறை:
அர்ஜுன், ஜீவா நடிப்பு
பின்னணி இசை, ஒளிப்பதிவு நன்றாக இருக்கிறது
வி எஃப் எக்ஸ் காட்சிகள் அருமை
கிளைமாக்ஸ் சண்டை காட்சிகள் நன்றாக இருக்கிறது

குறை:
அரைத்த மாவை தான் இந்த படத்திலும் இயக்குனர் அரைத்து இருக்கிறார்.
ஆங்காங்கே சில லாஜிக் குறைபாடுகள்
சில காட்சிகள் பார்வையாளர்கள் மத்தியில் சலிப்பை ஏற்படுத்தியிருக்கிறது
கதைக்களம் கொண்டு சென்ற விதத்தில் இயக்குனர் இன்னும் கொஞ்சம் சுவாரசியத்தை கொடுத்திருக்கலாம்
பாடல்கள் பெரிதாக கவரவில்லை
மொத்தத்தில் அகத்தியா – வித்தியாசம்