தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக கவின் திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் தற்போது இவருடைய நடிப்பில் உருவாகி இருக்கும் படம் மாஸ்க். இந்த படத்தை அறிமுக இயக்குனர் விகர்ணன் அசோக் இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் கதாநாயகியாக ஆண்ட்ரியா நடித்திருக்கிறார்.

அதோடு இந்த படத்தையும் தயாரிப்பாளர் சொக்கலிங்கம் உடன் இணைந்து ஆண்ட்ரியா தயாரித்திருக்கிறார். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்து இருக்கிறார். பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி இருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இப்படி இருக்கும் நிலையில் மாஸ்க் படத்தினுடைய முதல் நாள் வசூல் குறித்த விவரம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, படம் வெளியாகி முதல் நாளில் தமிழ்நாட்டில் 1.3 கோடி வசூலித்து இருக்கிறது.
படத்தின் வசூல்:
உலக அளவில் இந்த படம் 2 கோடிக்கும் மேல் வசூல் செய்து இருப்பதாக கூறப்படுகிறது. அது மட்டும் இல்லாமல் நேற்று வெளியான படங்களில் அதிக வசூல் செய்த படமே மாஸ்க் தான். தமிழ்நாடு பாக்ஸ் ஆபீசில் நம்பர் ஒன் திரைப்படமாக மாஸ்க் அமைந்திருக்கிறது. கடைசியாக கவின் நடிப்பில் வெளிவந்த கிஸ் படம் முதல் நாளில் 40 லட்சம் தான் வசூலித்தது. அதைவிட மூன்று மடங்கு அதிக வசூலை மாஸ்க் படம் வாரி குவித்து இருக்கிறது. இனி வரும் நாட்களிலும் மாஸ்க் படம் மிகப்பெரிய அளவில் வசூல் சாதனை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மாஸ்க் படம்:
படத்தில் ஹீரோ கவின் டிடெக்டிவ் ஆக வேலை செய்கிறார். இவர் தன்னிடம் வரும் வாடிக்கையாளர்களுடைய தேவைகளை எல்லாம் பூர்த்தி செய்து வைக்கிறார். அதோடு இவர் வாடிக்கையாளர்களிடம் மட்டுமில்லாமல் யார் தன்னிடம் சிக்கிக் கொள்கிறார்களோ அவர்களிடம் இருந்தும் பணத்தை பிடுங்கி விடுகிறார். காரணம், பணம் மட்டும்தான் உலகத்தின் உடைய ஒரே தேவை என்ற நோக்கத்துடன் வாழும் நபர் தான் ஹீரோ.
இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு குழந்தையும் இருக்கிறது. ஆனால், கணவன்- மனைவி இருவருமே பிரிந்து தான் வாழ்கிறார்கள். இந்த சூழலில் தான் ருஹானி ஷர்மா, ஹீரோ கவின் உடன் பேசி பழகுகிறார். ருஹானி ஷர்மாவுக்கு ஏற்கனவே திருமணம் ஆனது. ஆனால், அவருக்கு அந்த திருமணத்தில் எந்த ஒரு விருப்பமும் இல்லை என்பதால் தான் ஹீரோ கவின் உடன் நெருங்கி பழகுகிறார்.

கதைக்களம்:
இன்னொரு பக்கம் ஹீரோயினி ஆண்ட்ரியா பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் கொடுமைகளை எதிர்த்துப் போராடி அவர்களை மீட்டு நல்வாழ்வு அமைத்து தரும் நபராக இருக்கிறார். வெளி உலகில் இவருக்கு இப்படி ஒரு முகம் இருந்தாலும் இவருக்கு இன்னொரு முறை முகமும் இருக்கிறது. தன்னிடம் உள்ள பெண்களை வைத்து அரசியல்வாதிகளின் தேவைகளையும் இவர் பூர்த்தி செய்கிறார். அதனை வீடியோவாகவும் எடுத்து வைத்துக் கொள்கிறார். பின் தேர்தலில் போட்டியிடும் அரசியல்வாதி பவன், ஆண்ட்ரியாவிடம் 440 கோடியை கொடுத்து தொகுதி முழுவதும் யாருக்கும் தெரியாமல் அனுப்ப வேண்டும் என்று சொல்கிறார். பணத்தை தன்னுடைய சூப்பர் மார்க்கெட்டில் ஆண்ட்ரியா பதுக்கி வைக்கிறார்.

அந்த சூப்பர் மார்க்கெட்டை எம்.ஆர் ராதா மாஸ்க் போட்டு கொண்டு ஒரு கும்பல் கொள்ளையடிக்கிறது. இதுதெரியாமல் கொள்ளையடிக்கும் இடத்திற்கு கவின் வந்து விடுகிறார். கவின், ருஹானி ஷர்மா வீட்டிற்கு வருகிறார். அந்த நேரத்தில் தான் ருஹானி ஷர்மா உடைய கணவருமே வீட்டிற்கு வருகிறார். தன்னுடைய கணவருக்கு தெரியாமல் கவினை வீட்டை விட்டு அனுப்ப ருஹானி ஷர்மா முயற்சி செய்கிறார். வீட்டிற்கு வந்த ருஹானி ஷர்மா கணவரின் உடைய பேக்கில் எம்.ஆர் ராதா மாஸ்க் இருப்பதை கவின் பார்த்து விடுகிறார். அதோடு சூப்பர் மார்க்கெட்டில் கொள்ளை அடித்தது இவன்தான் என்று அதிர்ச்சியிலும் கவின் உறைந்து போகிறார். அதற்குப் பின் என்ன நடந்தது? 440 கோடியை கொள்ளை அடிக்க என்ன காரணம்? கவின் தப்பித்தாரா? ருஹானி ஷர்மா மாட்டிக்கொண்டாரா? ஆண்ட்ரியாவின் பின்னணி என்ன? என்பதுதான் படத்தின் உடைய மீதி கதை.






