தமிழ் சினிமாவை பொறுத்தவரை எனக்கு என்று ஒரு தனி அடையாளத்தை கொண்ட வில்லன் நடிகர்கள் மட்டுமே மக்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்தார்கள். அதிலும் ஒரு சில நடிகர்கள் தங்களின் குரலாலும், சில நடிகர்கள் தங்கள நடிப்பாலும் மக்கள் மனதை வென்றார்கள். பி எஸ் வீரப்பா, டி எஸ் பாலையா, எம் என் நம்பியார், அசோகன் என்று இப்படி சொல்லிக் கொண்டு போகலாம். அந்த வகையில் எம்ஜிஆர், சிவாஜி காலகட்டத்தில் நடித்த வில்லன் நடிகர்கள் பட்டியலில் ஆர்எஸ் மனோகருக்கும் நிச்சயம் ஒரு தனி இடம் உண்டு.
குணச்சித்திர நடிகர், வில்லன், நாடகத் தமிழின் தந்தை, நாடகக் காவலர் என்று பல அடைமொழிகளில் அழைக்கப்பட்ட ஆர்.எஸ்.மனோகர், நாமக்கல்லில் 1925, ஜூன் 29 ஆம் தேதி சுப்ரமணியன் ஐயர் மற்றும் ராஜலட்சுமி அம்மாள் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார், மனோகரின் தந்தை சுப்பிரமணியன் அஞ்சல் துறையில் ஊழியராகப் பணியாற்றியவர்.லட்சுமி நரசிம்மன் என்ற இயற் பெயருடைய இவர் பள்ளிப் பருவத்தில் மனோகரா நாடகத்தில் நடித்ததால், மனோகர் என்னும் பெயர் பெற்றார்.
சென்னையிலுள்ள பச்சையப்பன் கல்லூரியில் பட்டம் பெற்று அஞ்சல் துறையில் சேர்ந்தார்.பின்னாளில் ‘கானல் நீர்’ படத்தில் பட்டதாரி இளைஞனாக நடிக்க நிஜ பட்டதாரியான இவரே தேர்ந்தெடுக்கப்பட்டார்.மனோகர் பல்வேறு நாடகங்களை அரங்கேற்றி நடித்துள்ளார். ‘நாடகக் காவலர்’ என்ற பொருத்தமான பட்டம் பெற்ற இவரது நாடகங்களில் இலங்கேஸ்வரன், சாணக்கிய சபதம், சூரபத்மன், சிசுபாலன், இந்திரஜித், சுக்ராச்சாரியார், நரகாசுரன், திருநாவுக்கரசர் போன்ற நாடகங்கள் குறிப்பிடத்தக்கவை.
நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்த ஆர்.எஸ்.மனோகரை சினிமா உலகம் சிறப்பாக வரவேற்றது.முதன் முதலாக ராஜாம்பாள் (1951) என்ற திரைப்படத்தில் நடித்தார் .கதாநாயகனாக அறிமுகமான ஒருசில ஆண்டுகளுக்குப் பிறகு வில்லன் கதாபாத்திரத்தில் முத்திரை பதித்தவர்.‘வண்ணக்கிளி’, ‘கைதி கண்ணாயிரம்’, ‘வல்லவனுக்கு வல்லவன்’, ‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘அடிமைப்பெண்’, ‘இதயக்கனி’ உட்பட 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
அடிமைப்பெண் படத்திற்காக இவரும் மக்கள் திலகத்துடன் ஜெய்பூர் சென்றபோது.. அங்கு நிறைய நாடகத்திற்கு சம்பந்தப்பட்ட ஆடை ஆபரணங்கள் எல்லாம் மக்கள் திலகம் இவருக்கு வாங்கி கொடுத்து மகிழ்ந்தது மட்டும் அல்லாமல்.. இவருக்கு “நாடக காவலர்” என்ற பட்டத்தையும் வழங்கியது குறிப்பிட தக்கது. மனோகர் அவர்கள் இரு திலங்களுக்கும் மிகவும் வேண்டியவர். ஆனால் அவர் அவர்கள் இருவரிடமும் எந்த ஒரு சகாயத்துக்கும் சென்றதில்லை.
கைதி கண்ணாயிரம், வண்ணக்கிளி போன்ற படங்களில் கதாநாயகனாகவும் பிரகாசித்தார்.புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆருடன் பல படங்களில் நடித்துள்ள போதிலும் அடிமைப்பெண், ஆயிரத்தில் ஒருவன், ரிக்க்ஷாக்காரன், பல்லாண்டு வாழ்க, நான் ஆணையிட்டால் போன்ற படங்களில் தனித்தன்மையுடன் விளங்குவார்.மனோகரின் நாடகங்களில் தமிழுணர்வும் தமிழர் பெருமையும் நிரம்பி வழியும்.
இவரது ஒரு நாடகத்திற்கு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட மக்கள் திலகத்திற்கு வெங்கடாஜலபதி திருவுருவம் பதித்த நினைவுப்பரிசை மனோகர் வழங்கினார்.கலையுலக ஜாம்பவான்களில் இவரும் முக்கியமானவர். பல படங்களில் நடித்திருந்தாலும் இறுதி மூச்சு வரை மேடை நாடகங்களுக்கு உயிரூட்டிக் கொண்டிருந்தவர்.இறப்பதற்கு கொஞ்ச காலத்திற்கு முன்பு கூட தன் வரகுண பாண்டியன் நாடகத்தை நடத்தினார். இசைப்பேரறிஞர், நாடகக் காவலர் உட்பட பல விருதுகள், பட்டங்கள் பெற்றவர்.தமிழ் நாடகத் துறையில் ஒரு திருப்பு முனையை உருவாக்கிய ஆர்.எஸ்.மனோகர் 81-வது வயதில் (2006) மறைந்தார்.