தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக ராம் திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் கற்றது தமிழ் என்ற படத்தின் மூலம் தான் இயக்குனராக தமிழ் சினிமா உலகில் அறிமுகமாகியிருந்தார். அதனை தொடர்ந்து தங்க மீன்கள், தரமணி, பேரன்பு போன்ற படங்களை இயக்கி இருந்தார். இந்த படங்களுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்றிருக்கிறது. சிறிய இடைவெளிக்கு பின் தற்போது ராம் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் படம் பறந்து போ. இந்த படத்தில் மிர்ச்சி சிவா, அஜு வர்கீஸ், ரேஸ் ஆண்டனி, மிதுல் ராயன், அஞ்சலி உட்பட பலர் நடித்து இருக்கிறார்கள்.

இந்த படத்திற்கு சந்தோஷ் தயாநிதி, யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருக்கிறார்கள். மேலும், யுவன் சங்கர் ராஜா தான் படம் முழுக்க இசையமைப்பதாக இருந்தது. அந்த சமயத்தில் யுவன் வேறு சில படங்களில் பிஸியாக இருந்ததால் பின்னணி இசை மட்டும் அமைத்திருந்தார். பாடல்களை சந்தோஷ் தயாநிதி அமைந்திருக்கிறார். அப்பா-மகன் இடையே இருக்கும் பாசம், மிடில் கிளாஸ் வாழ்க்கை என்று அழகாக இயக்குனர் கதையை கொண்டு சென்றிருக்கிறார். சில தினங்களுக்கு முன் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. பிரபலங்கள் பலரும் படத்தை பாராட்டி வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
பறந்து போ:
இப்படி இருக்கும் நிலையில் இந்த படத்தின் உடைய நன்றி தெரிவிக்கும் விழா சென்னையில் நடைபெற்றிருக்கிறது. அதில் பேசிய மதன் கார்க்கி, இந்த படத்தில் பங்கேற்றத்தில் ரொம்ப மகிழ்ச்சி. இந்த
படத்திற்கு உண்மையான வெற்றி கிடைத்திருக்கிறது. உண்மையான வெற்றி என்றால் யாருக்குமே பொறாமை ஏற்படுத்தாத வெற்றி. அப்படி கிடைப்பது எல்லாம் ரொம்ப அபூர்வமான ஒன்று. இது காஷ்மீரா கார்காலமா, என் கோவில் புறா, இந்த குளிர் தாங்குமா என்று அப்பா எழுதிய வரியை மணிரத்தினம் சார் பார்த்துவிட்டு நம்ம காஷ்மீரில் படம் எடுக்கிறோம். அதைப் பாடலிலும் சொல்லணும் என்று கேட்டிருக்கிறார்.

நன்றி விழா:
அதற்கு பிறகு தான் புது வெள்ளை மழை என்று வரிகளை அப்பா எழுதினார். அதே மாதிரி இந்த படத்தில் என்ன விஷுவலாக இருக்கோ அதை எழுதலாம் என்று ராம் சார் சொன்னார். இந்த மாதிரியான விஷயங்கள் எல்லாம் உடைத்த ராம்சருக்கு முதலில் நன்றி. நா.முத்துக்குமார் இருந்திருந்தால் இந்த படத்தில் நான் பாடல் எழுதிருக்க மாட்டேன். அப்படி அவர்களுக்கு இடையில் ஆழமான நட்பு. இந்த படத்தோட வெற்றியில் அவருக்கும் பங்கு இருக்கிறது. நான் படத்தை முன்பு துண்டு துண்டாக பார்த்திருந்தேன். பிறகு பாடல் இல்லாமல் பார்த்தேன்.

மதன் கார்க்கி பேசியது:
திரையரங்களில் முழுமையாக பார்க்கும் போது ரொம்ப அழகாக இருக்கிறது. இந்த படம் பார்க்கும்போது என்னோட மகன், மக்கள் இந்த படத்தை கொண்டாடுகிறார்கள். ஆனால், ஏன் எல்லோரும் அழ வைக்கும் மாதிரியான டார்க் படங்கள் எல்லாம் எடுக்கிறார்கள் என்று கேட்டான். அப்போ நான், ஒருத்தரை அழ வைக்கிறது சுலபம். திரில்லர் உணர்வை கொடுப்பது சுலபம். ஆனால், சிரிக்க வைப்பது ரொம்ப கஷ்டம் என்று சொன்னேன். அந்த காமெடிகள் மூலமாக நிறைய விஷயங்களை நம்மை சிந்திக்க வைத்திருக்கிறார் என்று கூறினார்.

கதைக்களம்:
படத்தில் ஹீரோ சிவா அவர்கள் சென்னை சிட்லபாக்கம் ஏரியாவில் ஒரு அப்பார்ட்மெண்டில் வசித்து வருகிறார். இவருடைய மனைவி தான் கிரேஸ் ஆண்டனி. இவர்களுக்கு மிதுல் ராயன் என்ற ஒரு மகன் இருக்கிறார். இருவருமே காதல் திருமணம் செய்து கொண்டார்கள். இவர்கள் மிடில் கிளாஸ் குடும்பத்தை சேர்ந்தவர்கள். தன்னுடைய மகனுக்காக எதை வேண்டுமானாலும் செய்யக்கூடியவர் சிவா. அதற்காகவே இவர் இஎம்ஐயில் வீடு, பைக் என்று எல்லாமே வாங்கி வைத்திருக்கிறார். அதோடு கடனை கட்ட முடியாமலும் ரொம்ப கஷ்டப்படுகிறார் சிவா. இவருடைய மனைவி கிரேஸ், சேலை வியாபாரம் செய்கிறார்.
இப்படி இருக்கும் போது ஒருநாள் கோயம்புத்தூரில் சேலை வியாபாரம் செய்ய கிரேஸ் ஆண்டனி செல்கிறார். பின் மிர்ச்சி சிவா தான் தன்னுடைய மகனை கவனமாக பார்த்துக் கொள்கிறார். அப்போது மிர்ச்சி சிவாவின் மகன் பைக்கில் ஊர் சுற்ற வேண்டும் என்று ரொம்பவே அடம் பிடிக்கிறார். இதனால் சிவாவுமே தன்னுடைய மகனை அலைத்துக்கொண்டு பைக் டிராவல் செய்கிறார். அப்படி செல்லும்போது சிவா, தன் பள்ளி தோழி அஞ்சலியை சந்திக்கிறார். மகன்- தந்தை இருவருமே பைக் டிராவல் செய்யும்போது நடக்கும் சுவாரசியமான சம்பவங்களும், இருவருக்கும் இடையேயான புரிதலும் தான் படத்தினுடைய மீதி கதை.






