விஜய், எஸ்.ஜே.சூர்யா, சத்யராஜ், வடிவேலு, நித்யா மேனன், சமந்தா, காஜல் அகர்வால் உள்பட பலர் நடிக்க, தேனாண்டாள் நிறுவனம் தயாரிக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் அட்லி இயக்கும் படம் ‘மெர்சல்’. இது, விஜய், ஏ.ஆர்.ரஹ்மான் இருவரும் சினிமாவுக்கு வந்த 25-வது ஆண்டில் வெளிவரும் படம். மேலும், இது தேனாண்டாள் நிறுவனம் தயாரிக்கும் 100-வது படம். தவிர ‘தெறி’ வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் விஜய்-அட்லி காம்பினேஷனில் வரவுள்ள படம். அதனால் ‘மெர்ச’லுக்கும் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.
தவிர ‘மெர்சல்’ தலைப்பின் வடிவமைப்பு, காளை மாட்டு வால் போல் வடிவமைக்கப்பட்டு இருந்ததால், ஜல்லிக்கட்டு போன்ற நம் மண்சார்ந்த காட்சிகள் இந்தப் படத்தின் கதையில் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. தொடந்து, ஜல்லிக்கட்டுக்கு மாடு பிடிக்க தயாராகும் விஜய்யின் புகைப்படத்துடன் ‘மெர்ச’லின் முதல் பார்வை வெளிவந்தபோது அது உறுதியானது. பாடல்கள் ஒவ்வொன்றாக வெளியாக, ‘ஆளப்போறான் தமிழன்’ என்ற பாடல் பெரிய அளவில் ஹிட்டடிக்க படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்தது. இந்த நிலையில் படத்தின் டீசர் நேற்று 21-ம் தேதி வெளியானது.
இதையும் படிங்க: மெர்சல் டீஸர்- பிரபலங்களின் ட்வீட் மழையில் விஜய்.!
வெளியான ஒரேநாளில் ஒரு கோடி பேர் ‘மெர்சல்’ டீசரை பார்த்தள்ளனர். தவிர யூடியூப் லைக்ஸ் ஏழேகால் லட்சம் என உலக சாதனை படைத்துள்ளது. இந்தப் படம் தீபாவளிக்கு அக்டோபர் 18-ம் தேதி வெளியாக உள்ள நிலையில் தேனாண்டாள் நிறுவனம், படத்துக்கான விளம்பரங்களில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
இந்த நிலையில் ராஜேந்திரன் என்ற திரைப்பட தயாரிப்பாளர், உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடுத்தார். அதில், ‘நான் ஏற்கெனவே 2014ல் ‘மெர்சலாகிட்டேன்’ என்ற பெயரில் ஒரு படத்தை துவக்கினேன். அந்தப்படம் தயாரிப்பில் உள்ள நிலையில் விஜய் நடிக்கும் ‘மெர்சல்’ என்ற படம் வெளிவர உள்ளது. இந்தப்படம் வந்தால் என் படம் பாதிக்கப்படும்’ என்று குறிப்பிட்டு இருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, வழக்கை வரும் அக்டோபர் 3-ம் தேதி ஒத்திவைத்தவர், அதுவரை ‘மெர்சல் படத்தின் விளம்பரங்கள் எதுவும் வெளியிடக்கூடாது’ என்றும் தீர்ப்பில் கூறியுள்ளார்.
இதுகுறித்து, ‘மெர்சல்’ படத்தின் தயாரிப்பு தரப்பில் பேசினோம். ‘ஏற்கெனவே காதல், காதலுக்கு மரியாதை, காதல் மன்னன், காதலர் தினம், காதல் வைரஸ், காதல் சடுகுடு, காதலே நிம்மதி… என்று ஒரே வார்த்தைள் பல படங்களில் திரும்பத் திரும்ப இடம்பெற்றுள்ளன.
ஆனால் அவற்றுக்கெல்லாம் எந்த பிரச்னைகளும் வரவில்லை. ‘மெர்ச’லுக்கு மட்டும் ஏன் இந்தப் பிரச்னை? மேலும் இன்றில் இருந்து கோர்ட் விடுமுறை. அதன் அடுத்த அலுவல் நாள் 3-ம் தேதிதான். அதைப் பயன்படுத்தி இப்படி வழக்கு போட்டிருக்கிறார்கள். இந்த வழக்கை நாங்கள் சட்டப்படி சந்திப்போம்” என்கிறார்கள்.