பாலிவுட் திரையுலகில் பிரபல ஒளிப்பதிவாளராக வலம் வந்து கொண்டிருப்பவர் கே.யு. மோகனன். இவரின் மகள் தான் பிரபல நடிகை மாளவிகா மோகனன். 2013-ஆம் ஆண்டு மலையாள திரையுலகில் வெளி வந்த திரைப்படம் ‘பட்டம் போலே’. இந்த படத்தினை இயக்குநர் அழக்கப்பன்.என் இயக்கியிருந்தார். இதில் ஹீரோவாக துல்கர் சல்மான் நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்திருந்தார். இது தான் நடிகை மாளவிகா மோகனன் ஹீரோயினாக அறிமுகமான முதல் மலையாள திரைப்படமாம்.
இதனைத் தொடர்ந்து ‘நிர்னாயகம்’ மற்றும் ‘தி கிரேட் ஃபாதர்’ ஆகிய இரண்டு மலையாள படங்களில் நடித்தார் மாளவிகா மோகனன். அதன் பிறகு கன்னடத்தில் ‘நானு மட்டு வரலக்ஷ்மி’, ஹிந்தியில் ‘பியான்ட் தி கிளவுட்ஸ்’ ஆகிய படங்களில் நடித்தார். மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய திரையுலகுடன் தனது திரைப் பயணம் நின்று விடக் கூடாது என்று நினைத்த நடிகை மாளவிகா மோகனன், அடுத்ததாக தமிழ் திரையுலகில் நுழையலாம் என முடிவெடுத்தார்.
கடந்த 2019-ஆம் ஆண்டு தமிழில் வெளி வந்த திரைப்படம் ‘பேட்ட’. இது தான் மாளவிகா மோகனன் தமிழ் சினிமாவில் என்ட்ரியான முதல் திரைப்படமாம். இந்த படத்தில் ஹீரோவாக ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் நடித்திருந்தார். ‘பேட்ட’ படத்துக்கு பிறகு நடிகை மாளவிகா மோகனனுக்கு அடித்தது மற்றுமொரு லக். ஆம்.. ‘தளபதி’ விஜய்-யின் ‘மாஸ்டர்’ படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருக்கிறார் மாளவிகா மோகனன். இப்படம் ரிலீஸுக்கு தயாராக இருக்கிறது.
உலகமெங்கும் தற்போது ‘கொரோனா’ எனும் வைரஸ் தீயாய் பரவி வருகிறது. ஆகையால், ‘144’ போடப்பட்டுள்ளது. இந்த லாக் டவுன் டைமில் பல திரையுலக பிரபலங்கள் ஷூட்டிங் எதுவும் இல்லாததால், வீட்டில் தங்களது குடும்பத்தினருடன் அதிக நேரத்தை செலவு செய்து பாதுகாப்பாக இருந்து வருகின்றனர். சமீபத்தில், படிப்பதற்காக லண்டன் சென்றிருந்த நடிகை மாளவிகா மோகனனின் தம்பி ஆதித்யா ‘கொரோனா’ லாக் டவுன் காரணமாக அங்கயே இருக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறார்.
இது தொடர்பாக நடிகை மாளவிகா மோகனன் பேசுகையில் “படிப்பிற்காக லண்டன் சென்ற எனது தம்பி, லாக் டவுனால் அங்கயே சிக்கிக் கொண்டான். இதனால் அவனுக்கு மிகவும் மன உளைச்சல் ஏற்பட்டிருக்கிறது. அவன் படிக்கும் காலேஜிற்கு வெளியே வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருக்கிறான். அவன் தங்கியிருப்பது மிகவும் சிறிய அறையில் தான். அவனுடைய நண்பர்கள் எல்லோரும் மற்ற நாட்டைச் சேர்ந்தவர்கள்.
அவர்கள் எல்லோரும் வெளியேறி விட்டதால், இப்போது இவன் மட்டும் தனியாக அங்கு இருக்கிறான். அவனது ரூமில் சமைக்க கூட எந்த ஒரு வசதியும் இல்லை. வெளியே உணவு ஆர்டர் செய்து சாப்பிடுவதும் பாதுகாப்பானதாக இல்லை என்பதால், கடந்த ஒரு மாதமாகவே அவன் டப்பாக்களில் அடைக்கப்பட்ட உணவை தான் சாப்பிட்டு வருகிறான். எப்போது இந்த கொரோனா பிரச்சனை முடியும் என்று தெரியவில்லை. அவனது உடல் நலம் பற்றி எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது” என்று நடிகை மாளவிகா மோகனன் தெரிவித்திருக்கிறார்.