தமிழ் சினிமாவில் லிட்டில் சூப்பர் ஸ்டார் என்றழைக்கபடும் சிம்பு கடந்த 2004 ஆம் ஆண்டு “மன்மதன்” படத்தில் ஒரு கதை ஆசிரியராகவும் அவதாரமெடுத்தார். அந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ஜோதிகா நடித்திருந்தார்.மன்மதன்” படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்திருந்தது.
இந்த படத்தில் ஏ ஜி முருகன் என்பவரும் இயக்குனராக பணியாற்றி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது “மன்மதன்” படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கப்போவதாக இயக்குனர் ஏ ஜி முருகன் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். இயக்குனர் முருகன் தெரிவிக்கையில், மன்மதன் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருக்கிறது என்றும் அந்த படத்தை சரவணன் தயாரிக்கவுள்ளதாகவும் கூறியிருந்தார்.
ஆனால், சமீபத்தில் முருகன் அளித்த பேட்டியில் மன்மதன் கதை தன்னுடையது என்றும் ஆனால், சிம்புவும் அவரது அப்பாவும் இது சிம்புவின் கதை என்று கூறவேண்டும் என்று என்னிடம் கேட்டார்கள் நான் வேறு வழி இல்லாமல் ஒப்புக்கொண்டேன் என்றும் கூறியுள்ளார்.
மேலும், இதுகுறித்து பேசிய அவர், மன்மதன் இரண்டாம் பாகத்தை நான் அதர்வாவை வைத்து எடுக்க நினைக்கிறேன் அதற்காக ஒரு தயாரிப்பாளரிடமும் சம்மதம் வாங்கினேன். ஆனால், அதன் பின்னர் அவரிடம் இருந்து எனக்கு எந்த அழைப்பும் வரவில்லை இவை அனைத்தையும் சிம்புவும் அவரது தந்தை டி ஆர் ராஜேந்திரனும் தான் செய்கிறார்கள் என்று எனக்கு எண்ணம் தோன்றுகிறது என்று கூறியுள்ளார்.