தி.மு.க. தலைவர் கருணாநிதியின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சிக்குப் பிரதமர் நரேந்திர மோடி வந்த பிறகு, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட போலீஸாருக்கு ரகசிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தி.மு.க தலைவர் கருணாநிதி, கடந்த 7-ம் தேதி மரணமடைந்தார். அவரின் இறுதி அஞ்சலி, ஊர்வலம் நேற்று நடந்தது. அண்ணா நினைவிடத்தில் கருணாநிதியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. பொதுமக்களின் இறுதி அஞ்சலிக்காக ராஜாஜி அரங்கத்தில் கருணாநிதியின் உடல் வைக்கப்பட்டிருந்தது. பிரதமர் நரேந்திர மோடி முதல் அரசியல் கட்சித் தலைவர்கள், நடிகர்கள், நடிகைகள், பொதுமக்கள், தி.மு.க-வினர் என லட்சக்கணக்கானோர் கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
இறுதி அஞ்சலி செலுத்த வந்த வி.வி.ஐ.பி-க்களுக்குத் தனி வழி ஏற்படுத்தப்பட்டிருந்தது. அவ்வழியாகப் பலத்த பாதுகாப்புடன் வி.வி.ஐ.பி-க்கள் வந்தனர். பிரதமர் நரேந்திரமோடி மற்றும் பா.ஜ.க-வினர் கருணாநிதியின் உடலுக்கு மலர்வளையம் வைத்தனர். பிறகு, மு.க.ஸ்டாலின், கனிமொழி ஆகியோருக்கு பிரதமர் மோடி ஆறுதல் கூறினார். அதன் பிறகு, அவர் புறப்பட்டுச் சென்றுவிட்டார். அப்போது, பாதுகாப்புப் பணியைக் கவனித்த போலீஸ் உயரதிகாரிக்கு வாய்மொழி உத்தரவு ஒன்று வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதன் பிறகு வி.வி.ஐ.பி பாதுகாப்புப் பணியில் மெத்தனம் காட்டப்பட்டுள்ளதாகச் சொல்கின்றனர் தி.மு.க-வினர்.
இதனால், கருணாநிதியின் உடல் வைக்கப்பட்டிருந்த இடத்தின் அருகே திடீரென கட்டுக்கடங்காத கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதனால் அதில் ஸ்டாலின், கனிமொழி மற்றும் தி.மு.க மூத்த தலைவர்கள் சிக்கிக்கொண்டனர். பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாரால் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் ராஜாஜி அரங்கின் உள்ள படிகளில் அமர்ந்திருந்த தி.மு.க மூத்த தலைவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். அதன் பிறகு கூடுதல் போலீஸார் அங்கு வரவழைக்கப்பட்டனர். கருணாநிதியின் குடும்பத்தினர் யாரும் அவரின் உடல் அருகே நிற்கவில்லை. போலீஸாரின் முழு கட்டுப்பாட்டுக்குள் அந்த இடம் கொண்டுவரப்பட்டது. ராகுல்காந்தி, அகிலேஷ் யாதவ் ஆகியோர் வந்தபோது ஸ்டாலின் அவர்களுடன் வந்தார். அதன் பிறகு அவர் அங்கு இல்லை.
கூட்ட நெரிசலில் சிக்கி 4 பேர் பலியாகியுள்ளனர். மேலும், படுகாயமடைந்த 26 பேருக்கும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இறுதி அஞ்சலி, ஊர்வலத்தின்போது எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறவில்லை. ஆனால், கருணாநிதியின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் கூட்ட நெரிசல் ஏற்பட்டதற்கு என்ன காரணம் என்று போலீஸார் விசாரித்துவருகின்றனர். அதுதொடர்பாக, அரசும் டி.ஜி.பி-யிடம் அறிக்கை கேட்டுள்ளது.
இதுகுறித்து போலீஸார் கூறுகையில், “வி.வி.ஐ.பி-க்கள் வருகை நேரம் குறித்த தகவல் முன்கூட்டியே பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படிதான் அவர்கள் அனுமதிக்கப்பட்டனர். கருணாநிதியின் உடல் அருகே அவரின் குடும்பத்தினரும் கட்சியினரும் மட்டுமே அமர்ந்திருந்தனர். பிரதமர் நரேந்திர மோடி வந்து சென்ற பிறகு, ஒரே நேரத்தில் தொடர்ந்து வி.வி.ஐ.பி-க்கள் வந்தனர். இந்தச் சமயத்தில்தான் அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. இந்தத் தகவல் கிடைத்ததும் கூடுதல் போலீஸார் வரவழைக்கப்பட்டு அந்த இடத்தை எங்களின் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துவிட்டோம். அதன் பிறகு, எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறவில்லை” என்றனர்.
“போலீஸாரின் இந்தக் காரணத்தை தி.மு.க-வில் உள்ள சிலர் ஏற்றுக்கொள்ளவில்லை. அரசு தரப்பில் முழு அளவில் எங்களுக்கு ஒத்துழைப்புக் கொடுக்கவில்லை. ஆனால், அறிவிப்பு மட்டும் அதிரடியாக வெளியான வண்ணம் இருந்தன. காவேரி மருத்துவமனையிலிருந்து கோபாலபுரம், சி.ஐ.டி.காலனி, ராஜாஜி அரங்கம் வரை கருணாநிதியின் உடலைக் கொண்டுவரும்போது பாதுகாப்பில் சிக்கல்கள் இருந்தன. கோபாலபுரம் வீட்டின் முன் கருணாநிதியின் உடலை ஆம்புலன்ஸிலிருந்து இறக்க முடியாமல் சிரமப்பட்டோம்” என்கின்றனர்.