வலிமை பட இயக்குனர் எச் வினோத் இயக்கத்தில் வெளியான சதுரங்கவேட்டை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் ஹீரோவாக வரும் காந்தி பாபு என்பவர் இரட்டை தலை மண்ணுளி பாம்பு. ஈமு கோழிப்பண்ணை என்று பல்வேறு விஷயங்களை கூறி ஏமாற்றி பணமோசடிகளை செய்வார். அதிலும் இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் தீவிர சாமி பக்தி கொண்ட ஒரு நபரிடம் கோவில் கலசத்தை வாங்கி வீட்டில் வைத்தால் நீங்கள் சக்கரவர்த்தியாக வாழலாம் என்று கூறுவார். அவரும் இது குறித்து தன்னுடைய ஜோதிடர் ஒருவரிடம் விசாரிப்பார். அப்போது அவரும் கலசத்தில் இருடியம் என்ற சக்தி வாய்ந்த ஒரு பொருள் இருப்பதாக கூறுவார். அதை நம்பித்தான் இவரும் அந்த கோபுர கலசத்தை பல கோடிகளை கொடுத்து வாங்குவார்.

இப்படி சதுரங்க வேட்டை படத்தில் வந்தது போல மோசடி வேலை செய்து தற்போது போலீசாரால் கைது செய்யப்பட்டு இருக்கிறார் பிரபல பழம்பெரும் நடிகை ஜெயசித்ராவின் மகன் அம்ரீஷ். தமிழ் சினிமாவில் குறத்தி மகன் அரங்கேற்றம் உட்பட எண்ணற்ற படங்களில் நடித்தவர் பழம்பெரும் நடிகை ஜெயசித்ரா இவருக்கு அம்ரிஷ் என்ற 33 வயது மகன் இருக்கிறார். டிகர் லாரன்ஸ் நடித்த மொட்ட சிவா கெட்ட சிவா, அரவிந்தசாமி நடித்த பாஸ்கர் ஒரு ராஸ்கல், பிரபுதேவா நடித்த சார்லிசாப்ளின்-2 உள்ளிட்ட பல தமிழ் படங்களுக்கு இசை அமைத்துள்ளார் அம்ரீஷ்.
இவருக்கும் சென்னை வளசரவாக்கம் பகுதியைச் சேர்ந்த நெடுமாறன் என்ற 68 வயது நபருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. இப்படி ஒரு நிலையில் நெடுமாறனிடம் இசையமைப்பாளர் அம்ரீஷ் தங்களிடம் அரியவகை இருடியம் உள்ளதாகவும் இதனை மலேசியாவில் உள்ள நிறுவனம் 2.50 லட்சம் கோடி ரூபாய்க்கு வாங்க தயாராக இருப்பதாகவும் கூறியிருக்கிறார். மேலும், எங்களுக்கு 26 கோடி ரூபாய் கொடுத்தால் அந்த அரிய வகை இருடியத்தை நீங்கள் எடுத்துக்கொள்ளலாம் என்று கூறி இருக்கிறார் அம்ரீஷ்.

இதையடுத்து நெடுமாறனை மலேசியாவிற்கு அழைத்து சென்று தங்கள் கூட்டாளிகள் வாயிலாக நட்சத்திர ஓட்டலில் அரியவகை இருடியத்தை 2.50 லட்சம் கோடி ரூபாய்க்கு வாங்கியது போல ஒப்பந்தம் போட்டு உள்ளார். இதை நம்பியுள்ள நெடுமாறன் அவரது கூட்டாளிகளிடம் 26 கோடி ரூபாயை கொடுத்துள்ளார். ஆனால் பணம் வாங்கிய பின்னர் அவர்களிடமிருந்து எந்த தகவலும் வரவில்லை. இதனால் பணத்தை பறிகொடுத்த சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நெடுமாறன் புகார் அளித்தார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் அம்ரீஷை கைது செய்திருக்கிறார்கள்.





