ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலமா இளைஞர்களின் மத்தியில் பேமஸ் ஆனவர், ஜூலி. அதன்பிறகு, ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். போராட்டத்திற்குப் பிறகு இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டதால், பார்வையாளர்கள் அனைவரும் ஜூலியை மீம்ஸ்களால் வறுத்தெடுத்தனர்.
ஆனால், இது எதற்கும் ரியாக்ஷன் காட்டாத ஜூலி ‘ஓடி விளையாடு பாப்பா’ நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாகக் களமிறங்கினார். பின்னர், ‘மன்னர் வகையறா’ படத்தில் கெஸ்ட் ரோலில் தோன்றினார். இதைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் அம்மன் தாயி படத்தில் நடித்து வருகிறார்.
அதையடுத்து, நீட் பிரச்னைக்காக உயிர் துறந்த மாணவி அனிதாவின் வாழ்க்கை வரலாற்றில் ஜூலி நடிக்கப்போவதாக தகவல் வந்தது. மேலும், அனிதாவின் பிறந்த நாளன்று ‘அனிதா எம்.பி.பி.எஸ்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியானது.இந்த படத்தை இயக்குநர் அஜய் இயக்கி தயா ரிக்கவும் உள்ளார்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ’மகளின் தியாகம், போராட்டத்தை முன்வைத்து இயக்குநர் அஜய்குமார் பணம் சம்பாதிக்க திட்டமிடுவதாகவும் தமக்கு ரூ25 லட்சம் மானநஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும் அனிதாவின் தந்தை சண்முகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.வழக்கின் விசாரணை வரும் 22-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.மேலும், இயக்குனர் அஜய்க்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.