பிரபல நடிகர் நெப்போலியனின் மகன் தனுஷிற்கு திருமணம் முடிந்திருக்கும் செய்திதான் இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த சில நாட்களாகவே நெப்போலியன் மகனின் திருமணம் குறித்த செய்திகள் தான் சோசியல் மீடியாவில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. சினிமா உலகில் ஒரு காலத்தில் மிகப் பிரபலமான நடிகராக திகழ்ந்தவர் நெப்போலியன். இவர் ஜெயசுதா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு தனுஷ், குணால் என்கிற இரண்டு மகன்கள் உள்ளனர்.
இதில் நெப்போலியன் மூத்த மகன் தனுஷ், மஸ்குலர் டிஸ்ட்ரோஃபி என்ற தசை சிதைவு நோயினால் பாதிக்கப்பட்டு இருப்பதால் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். தனது மகனின் சிகிச்சைக்காகவே இந்தியாவை விட்டுச் சென்று குடும்பத்துடன் அமெரிக்காவில் செட்டில் ஆனார் நெப்போலியன். அமெரிக்காவில் நெப்போலியன் ஹைடெக் விவசாயம் செய்வதோடு, ஒரு மென்பொருள் நிறுவனத்தை தொடங்கி அதற்கு தனுஷை முதலாளி ஆகியிருக்கிறார்.
தனுஷ் நிச்சயதார்த்தம்:
அந்த நிறுவனத்தில் தமிழர்கள் ஏகப்பட்ட பேர் பணி புரிவதாக கூறப்படுகிறது. அமர்ந்த இடத்திலிருந்து தொழில்நுட்பத்தின் வசதியோடு அந்த நிறுவனத்தை நிர்வாகித்து வருகிறார் தனுஷ். இப்படி இருக்கும் சூழலில் தனுஷுக்கு திருமணம் செய்ய முடிவு செய்து, சமீபத்தில் தான் அவருக்கு திருநெல்வேலி மாவட்டம், மூலக்கரைப்பட்டியை சேர்ந்த விவேகானந்தர் என்பவரின் மகள் அக்ஷயாவோடு நிச்சயதார்த்தம் நடந்தது. மேலும், தனுஷ் இந்தியாவிற்கு வர முடியாததால் வீடியோ கால் மூலமாக தான் நிச்சயதார்த்தம் நடந்தது.
திருமணம் குறித்த தகவல்:
பின், இவர்களது திருமணம் ஜப்பானில் நடத்த முடிவு செய்யப்பட்டு, கடந்த ஒரு மாதத்திற்கு முன்பே நெப்போலியன் குடும்பம் அமெரிக்காவிலிருந்து ஜப்பான் புறப்பட்டனர். ஜப்பானில் தனது திருமணம் நடத்த வேண்டும் என்பது தனுஷின் ஆசை என்று கூறப்படுகிறது. இத்திருமணத்தில் கலந்து கொள்வதற்காக கலா மாஸ்டர், ராதிகா, சரத்குமார், மீனா, பாண்டியராஜன், யூடியூபர் இர்ஃபான் என்ன பல பிரபலங்கள் ஜப்பானுக்கு படையெடுத்தனர். அவர்களை நெப்போலியன் ஜப்பான் விமான நிலையத்துக்குச் சென்று அன்போடு வரவேற்றார்.
திருமண நிகழ்ச்சிகள்:
அந்தத் புகைப்படங்கள் கூட சோசியல் மீடியாவில் வைரலாகி இருந்தது. மேலும், திருமணத்துக்கு முன்பாக நலங்கு, ஹல்தி உள்ளிட்ட நிகழ்வுகள் நடத்தப்பட்டன. அந்த நிகழ்ச்சியில் நெப்போலியன் மற்றும் உறவினர்கள் மணமக்களுக்கு நலங்கு வைத்து மகிழ்ந்தார்கள். இதில் சங்கீத் நிகழ்ச்சியை கலா மாஸ்டர் பொறுப்பேற்று நடத்தி கொடுத்தார். கலா மாஸ்டர் இந்த பொறுப்பை ஏற்றது தனக்கு பெரும் பாக்கியம் என்று நெப்போலியன் கூறியிருந்தார். பின்பு மணமக்கள் தனுஷ் மட்டும் அக்ஷயாவிற்கு போட்டோஷாப் நடத்தப்பட்டுள்ளது. அதில் பிங்க் நிறத்தில் இருவரும் ஆடை அணிந்திருந்தார்கள்.
முடிந்தது திருமணம்:
இந்நிலையில், இன்று காலை இருவருக்கும் கோலாகலமாய் திருமணம் நடந்துள்ளது. திருமணத்தின் போது மணமக்கள் இருவரும் சிறப்பான உடையை அணிந்திருந்தனர். திருமண மேடையில் நெப்போலியன் மற்றும் அவரது மனைவி சுதா, அக்ஷயாவின் பெற்றோர்கள் உட்பட பலர் மணமக்கள் அருகே அமர்ந்து தேவையான சம்பிரதாயங்களை செய்திருந்தனர். பின் தாலியை தனுஷின் தாய் சுதா எடுத்துக் கொடுக்க, தனுஷ்- அக்ஷயா திருமணம் சிறப்பாக நடந்து முடிந்தது. தற்போது இவர்களின் திருமண புகைப்படங்கள் தான் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதோட பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தற்போது தனுஷ் மற்றும் அக்ஷயா தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.