தமிழ் சினிமா உலகில் புகழ் பெற்ற நடிகர்களில் ஒருவர் பாண்டியராஜன். இவரை புதுமைக் கலை மன்னன் என்று தான் அழைப்பார்கள். சினிமாவிற்கு தோற்றம், உயரம் முக்கியம் இல்லை என்பதை நிரூபித்த ஒரு கலைஞர். இவர் தன்னுடைய பள்ளிப்படிப்பை சென்னை சைதாப்பேட்டையில் உள்ள மாதிரி உயர்நிலைப் பள்ளியில் முடித்தார். கலைத்துறையின் மேலுள்ள ஈடுபாட்டால் தன்னுடைய இளம் வயதிலேயே திரைத்துறையை சேர்ந்தார். பாண்டியராஜன் என்று சொன்னாலே அனைவருக்கும் ஞாபகம் வருவது திருட்டு முளியும், வெள்ளந்தியான பேச்சும், விசுக் விசுக்கென நடக்கும் நடை தான்.
இவர் முதலில் இயக்குனர் பாக்யராஜிடம் உதவி இயக்குனராக பணி புரிந்தார். தனது 23 வயதிலேயே சினிமா உலகில் இயக்குனராக பிரபலம் அடைந்தார். இவர் இயக்கிய முதல் படத்திலேயே வெற்றி கொண்டவர். இவர் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் இயக்குனர், எழுத்தாளர் என பன்முகம் கொண்டவர். இவர் தமிழ் சினிமாவில் படைத்த சாதனைகள் ஏராளம்.
இந்நிலையில் நடிகர் பாண்டியராஜன் அவர்கள் சீகர் என்ற தேசிய குறும்பட விழாவில் கலந்து கொண்டிருந்தார். இந்த விழாவில் அவர் விருதுகளும் வழங்கினார். இதில் அவர் பேசியது, என்னை சாதாரண நடிகன், காமெடி என்று நினைக்கிறார்கள். அதைத் தாண்டி நான் பல சீரியஸான படங்களையும் எடுத்துள்ளேன். அவை சர்வதேச விருதுகளையும் பெற்று உள்ளது.
நான் பத்தாம் வகுப்பு முடித்தவுடனே சினிமா துறையில் நுழைந்தேன். அதற்கு பிறகு எம்ஏ, எம்பில் படிப்பை அஞ்சல் மூலம் படித்தார். இப்போது நான் மூன்று பல்கலைக்கழகங்களில் பகுதி நேர ஆசிரியராக பணி புரிந்து வருகிறேன். சினிமா என்பது ஒரு நல்ல தொழில். அது பல பேரை வாழ வைத்திருக்கிறது. என்னுடைய உயரத்துக்கு நான் ஹீரோவாக நடிப்பேன் என்று நான் நினைக்கவும் இல்லை, ஆசை படவும் இல்லை.
ஆனால், நான் ஹீரோவாக மக்கள் மத்தியில் பிரபலமானேன். ஆண் பாவம் என்ற ஒரு படத்தின் மூலமே நான் வீடு வாங்கினேன், கார் வாங்கினேன், அதே வருமானத்தில் திருமணமும் செய்து கொண்டேன். சினிமாவைப் பொறுத்தவரை உழைத்தால் வெற்றி நிச்சயம். தற்போது வெற்றி பெற்று உச்சத்தில் இருப்பவர்கள் எல்லாம் ஒரு காலத்தில் கஷ்டப்பட்டவர்கள் தான் என்று கூறினார்.
கன்னிராசி, ஆண்பாவம், நெத்தியடி, கதாநாயகன், தாய்குலமே தாய்குலமே என இவர் எடுத்த பல படங்கள் மக்கள் மத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட். இவருடைய படங்கள் எல்லாமே சிறிய கதைகளாக இருந்தாலும் அழுத்தமான கதை களத்திற்கும், நகைச்சுவைக்கும் பஞ்சமில்லை.இவருடைய படங்கள் எல்லாம் தற்போது கூட மக்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது. தற்போது இவர் சினிமாவில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.