சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சித்தி மெட்டிஒலி வாணி ராணி போன்ற பல்வேறு தொடர்களில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர் நடிகை சாந்தி வில்லியம்ஸ். கோயம்புத்தூரில் பிறந்த இவர், வளர்ந்தது என்னவோ சென்னையில் தான். அசோக் நகரில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் எட்டாம் வகுப்பு படித்தபோது மலையாளத்தில் ‘செம்மீன்’ என்ற படத்தை இயக்கிய ராமு என்பவர் அதே பள்ளிக்கூடத்தின் பக்கத்தில் வசித்து வந்துள்ளார். இவரது சிவப்பான மற்றும் உயரமான உயரத்தைக் கண்டு காட்டு வாசிகள் பற்றிய மலையாள டாக்குமென்ட்ரி படத்தில் இவருக்கு வாய்ப்பு கொடுத்தார்.
1972 ஆம் ஆண்டு வெளியான அந்த படத்தில் நடித்த இவருக்கு 11 வயதிலேயே சிறந்த நடிகைக்கான தேசிய விருதும் வழங்கப்பட்டது. அதன்பின்னர் தொடர்ந்து பல்வேறு மலையாள படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், தமிழில் பல்வேறு படங்களிலும் .சீரியல்களிலும் நடித்திருக்கிறார், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக பிரபல பத்திரிக்கை ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார் நடிகை சாந்தி தனது கணவரின் இறப்புக்குப் பின்னர் வாழ்வில் பட்ட கஷ்டங்கள் குறித்து கூறியுள்ளார்.
இதையும் பாருங்க : தர்பார் படத்தில் வில்லன் குரலை எங்கயோ கேட்ட மாதிரி இருந்துச்சா. அது இந்த நடிகரின் குரல் தான்.
அந்தப் பேட்டியில் பேசியுள்ள அவர், கணவர் வில்லியம்ஸ், மலையாள சினிமாவின் பிரபலமான கேமராமேன். அவரும் நானும் ஒரு மலையாளப் படத்தில் வொர்க் பண்ணினோம். அவருக்கு என்னைப் பிடிச்சுப்போய் என் பெற்றோரிடம் பேசினார். 1979-ம் வருஷம் கல்யாணம் ஆச்சு. அடுத்தடுத்து நான்கு குழந்தைகள் பிறந்தாங்க. குடும்பத்தை கவனிச்சுக்க நடிப்பை நிறுத்திட்டேன். அந்த நேரத்தில் சினிமா துறையினருக்கும், சில நடிகர்களுக்கும் என் கணவர் செய்த உதவி ரொம்ப பெருசு.
அவரின் கால்ஷீட்டுக்காக காத்துகிட்டிருந்த பிரபலங்கள் அதிகம். ஆனால், உடல்நிலை சரியில்லாமல் அவர் இருந்தப்போ, உதவிக்குனு யாருமே வரலை. என் கணவர் கோடிகளில் சம்பாதிச்ச காலத்திலும் 200 ரூபாய் புடவைதான் கட்டுவேன். அதனால், திடீர் வறுமை என் மனசில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தலை. ஆனால், 75 பைசா கொடுத்து அவர் பஸ்ல போகும் சூழ்நிலை வந்தப்போ பல நாள் அழுதிருக்கேன். எங்கிட்ட இருந்த ஆயிரம் புடவைகளை வித்துதான் குழந்தைகளைப் படிக்கவெச்சேன். குடும்பச் செலவுக்காக 18 வருஷத்துக்குப் பிறகு 1990-ம் வருஷம் நடிப்புக்கு ரீ-என்ட்ரி கொடுத்தேன்.
‘உதயா’, ‘ஜோடி’, ‘டும் டும் டும்’, ‘மனதை திருட்டிவிட்டாய்’, ‘பாபநாசம்’ உள்பட ஐம்பதுக்கும் மேற்பட்ட படங்ளில் நடிச்சுட்டேன். ஆனாலும், கணவரை இழந்த துயரத்திலிருந்து இன்னும் மீள முடியலை. என்னோட கஷ்டமான சூழல்ல ராதிகா மேடம்தான் ‘சித்தி’ சீரியல்மூலமா சின்னத்திரையில் முதல் வாய்ப்பு கொடுத்தாங்க. தொடர்ந்து ‘வாணி ராணி’ வரை அவங்களின் எல்லா சீரியல்களிலும் நடிச்சுட்டிருக்கேன். ‘மெட்டி ஒலி’ ராஜம்மா கேரக்டர் பெரிய ரீச் கொடுத்துச்சு. அந்த சீரியல்ல நடிச்சுட்டிருந்தப்போதான் என் கணவர் காலமானார். அப்போ பொருளாதார ரீதியாக ரொம்ப கஷ்டத்தில் இருந்தேன். ‘மெட்டி ஒலி’ டைரக்டர் திருமுருகன் சார் மற்றும் தயாரிப்பாளர் சித்திக் சார் செய்த உதவிகளை என் வாழ்நாளுக்கும் மறக்கமாட்டேன் என்று கூறியுள்ளார். தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடித்து வருகிறார் நடிகை ஷாந்தி வில்லியம்ஸ்.