விஜய் டிவியில் மிகப் பிரபலமான தொகுப்பாளராக திகழ்பவர் மாகாபா ஆனந்த். இவர் ரேடியோ ஜாக்கியாக தன்னுடைய வாழ்க்கைப் பயணத்தை தொடங்கினார். பின் விஜய் டிவியில் வருடம் வருடம் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் தான் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார் மாகாபா ஆனந்த். அதற்குப் பிறகு இவர் சின்னத்திரையில் பிரபலமாகி விஜய் டிவியில் பல ஆண்டுகாலமாக ஆங்கரிங் செய்து வருகிறார்.

இவர் சூப்பர் சிங்கர் ஜூனியர், சீனியர், கிங்ஸ் ஆப் டான்ஸ், மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை, முரட்டு சிங்கிள், ராமர் வீடு என விஜய் டிவியில் ஒளிபரப்பான பல ரியாலிட்டி ஷோர்களை மாகாபா ஆனந்த் தொகுத்து வழங்கி இருக்கிறார். மேலும், கடந்த 2014 ஆம் ஆண்டு வெளிவந்த 'வானவராயன் வல்லவராயன்' என்ற படத்தின் மூலம் இவர் நடிகர் ஆனார்.
மாகாபா ஆனந்த் குறித்து:
அதனைத் தொடர்ந்து நவரச திலகம், கடலை, மீசைய முறுக்கு, இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் போன்ற சில படங்களில் நடித்திருக்கிறார். மேலும், இவர் விஜய் டிவி மட்டுமில்லாமல் நிறைய வெளிநிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்குகிறார். உள்ளூரில் மட்டும் இல்லாமல் நிறைய வெளிநாட்டு நிகழ்ச்சிகளுக்கும் விஜய் டிவி பிரபலங்களை விருந்தினராக அழைப்பது இப்போது டிரெண்டாகி வருகிறது. அந்த வகையில், மாகாபா திருச்சியில் ஒரு நிகழ்ச்சியில் பங்கு கொண்டதுதான் தற்போது பிரச்சினையாக முடிந்தது.

ஹாப்பி ஸ்ட்ரீட்:
அதாவது, திருச்சி அரியமங்கலத்தில் உள்ள ஒரு கல்லூரி மைதானத்தில் நடத்திய நிகழ்ச்சி ஒன்றே மாகாபா மீது வழக்கு பதிவு செய்ய காரணமாக அமைந்தது. பொதுவாக சென்னை, கோவை, ஓசூர் போன்ற மாநகராட்சிகளில் மக்களின் பொழுது போக்கிற்காகவும் அவர்களின் பணிசுமை உள்ளிட்ட மனநிலையை மாற்றுவதற்காகவும் ஹாப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதுண்டு. இது போன்ற நிகழ்ச்சிகள் பெரும்பாலும் தெருக்களில் தான் நடைபெறும்.
ஹாப்பி ஸ்ட்ரீட்டில் மாகாபா:
இந்நிலையில் திருச்சி அரியமங்கலத்தில் ஒரு கல்லூரி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக மாகாபா ஆனந்த் சிறப்பாக விருந்தினராக பங்கேற்க அழைக்கப்பட்டிருந்தார். அந்த அழைப்பை ஏற்ற மாகாபா, கடந்த ஞாயிற்றுக்கிழமை நிகழ்ச்சியில் பங்கேற்க திருச்சிக்குச் சென்றுள்ளார். அங்கு சென்ற மாகாபா ஆனந்த் நிறைய விஷயங்களை பேசி, காமெடி செய்து மக்களை மகிழ்வித்து இருக்கிறார். ஆனால், இந்த நிகழ்ச்சிக்கு முறையான அனுமதி வாங்கவில்லை என்று கூறப்படுகிறது.

வழக்குப் பதிவுக்கு காரணம்:
அதாவது இந்த நிகழ்ச்சியை ஒரு மருத்துவம் தொடர்பான நிகழ்ச்சி என்று கூறி அனுமதி பெற்றுள்ளனர். மருத்துவ முகாம் என்று கூறிவிட்டு, ஹாப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி நடத்தியதால் அங்கு ஒரே சமயத்தில் 2000 பேருக்கு மேல் கூடினர். இதை அறிந்த போலீசார் நிகழ்ச்சியை ரத்து செய்திருக்கிறது. மேலும், முறையான அனுமதி இல்லாமல் நிகழ்ச்சியை நடத்திய நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற விஜய் டிவி பிரபலம் மாகாபா ஆனந்த் உட்பட 50க்கும் மேற்பட்டோர் மீது போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளதாம்..






