நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில்தேர்தல் பிரசாரத்திற்காக, தமிழகம் வந்த காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, சென்னை உள்ள ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடினார். மாணவிகளுக்கும் ராகுலுக்கும் இடையே நடந்த உரையாடல் இந்திய அளவில் பேசுபொருளானது. தொடர்ந்து பத்திரிகையாளர் சந்திப்பில் ராகுல் பேசிய கருத்துகளும் அவ்வாறே அமைந்தது.
இவ்விரண்டு நிகழ்ச்சிகளிலும் ராகுலின் பேச்சுகுறித்து எவ்வித விமர்சனங்களும் எழாத நிலையில், இறுதி நிகழ்வாக நாகர்கோவிலில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு ராகுல் காந்தி பேசிய ஆங்கில உரையை, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு மொழிபெயர்த்தார்.
ராகுல் பேசியது ஒன்றாகவும், தங்கபாலு மொழிபெயர்த்தது வேறொன்றாகவும் பல இடங்களில் அமைந்தது, அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இதையடுத்து ராகுலின் பேச்சையும், அதற்கு தங்கபாலுவின் மொழிபெயர்ப்பையும் தொலைக்காட்சியிலும், யூடியூபிலும் நேரலையாகப் பார்த்த தமிழக மக்கள், உடனடியாக அதை விமர்சிக்கத் தொடங்கினர்.
`ஒருவேளை தங்கபாலு, ஏதாவது பதற்றத்தில் இருந்தாரோ என்னவோ, அதனால்தான் சில வாக்கியங்களைத் தவறாக மொழிபெயர்த்து இருக்கலாம்’ என்று கூட எண்ணம் தோன்றியது. இதனால் தங்கபாலு பாலுவின் மொழி பெயர்ப்பை கலாய்த்து பல மீம்கள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.