திரிபுராவில் பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் நேற்றுமட்டும் கம்யூனிச தலைவரான லெனின் சிலை உடைத்து எறியப்பட்டது. இந்நிலையில் ஹெச்.ராஜா தமிழகத்திலும் விரைவில் பெரியார் சிலை தகர்த்தெறியப்படும் என்று சமூகவலைத்தளமான டிவீட்டரில் தனது கருத்தை பதிவு செய்திருந்தார்.
பாஜகவின் தேசிய செயலாளரான ஹெச்.ராஜாவின் இந்த கருத்திற்கு தமிழகம் முழுதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. சமூகவலைத்தளத்தில் ஹெச்.ராஜாவை கடுமையாக ஒருசாரார் விமர்சிக்க மற்றொருபுறம் அரசியல் கட்சி தலைவர்களான ஸ்டாலின்,சீமான்,குஷ்பு,திருமாவளவன்,கீ.வீரமணி,சுபவீ மற்றும் பலரும் ஹெச்.ராஜாவின் பதிவுக்கு கடும் கண்டனங்களை பதிவுசெய்து எதிர்ப்பு தெரிவித்தனர்.
விவகாரம் இவ்வளவு விபரீதமானதை தொடர்ந்து ஹெச்.ராஜா சத்தமில்லாமல் தனது பதிவை அழித்துவிட்டார்.ரஜினியை தவிர மற்ற அனைவரும் ஹெச்.ராஜாவின் கருத்திற்கு கண்டனம் தெரிவித்திருந்த நிலையில் ரஜினி மட்டும் ஏன் இன்னும் வாய் திறக்கவில்லையென்று விமர்சனங்கள் எழத்தொடங்கியது.
இந்நிலையில் தான் தற்போது பெரியார் சிலை உடைப்பு விவகாரத்தில் ரஜினி மௌனம் கலைத்துள்ளார்.ரஜினிகாந்த் “பெரியார் சிலை உடைக்கப்படும் என்று கூறியது காட்டுமிராண்டிதனமானது” என்று ஹெச்.ராஜாவிற்கு எதிராக தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.