சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது கட்சி ஆரம்பிப்பது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளதால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். தமிழ் சினிமாவில் உள்ள பல்வேறு நடிகர்கள் அரசியலில் ஈடுபட்டு வந்துள்ளனர். அதில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரஜினி மட்டும் என்ன விதிவிலக்கா. மேலும், கடந்த பல ஆண்டுகளாக ரஜினிகாந்த் அரசியலுக்கு வரப்போகிறார் என்று கூறப்பட்டது. இதனால் பல தரப்பில் இருந்து கண்டனக்குரல்களும், வரவேற்புகளும் வந்துள்ளது. அதோடு ரஜினியின் அனைத்து ரசிகர்களையும் ஒன்றிணைக்க rajinimandram.org என ஒரு இணையதளத்தை துவங்கினார் ரஜினிகாந்த். இதற்கென ஒரு ஆன்ட்ராய்ட் அப்ளிகேசனையும் அறிமுகம் செய்தார். தமிழ் சினிமா உலகில் அன்றும் இன்றும் என்றும் நடிகர் ரஜினிகாந்த் ஸ்டைலுக்கும் நடிப்புக்கும் எவரும் நிகரில்லை.
ரஜினி அரசியலுக்கு வருவார் என்று பல வருடங்களாக அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். ஆனால், இப்போ வரேன் அப்போ வரேன் என்று ரசிகர்களுக்கு பூச்சாண்டி காட்டி வருகிறார் ரஜினி. இதுமட்டும் இல்லாமல் ரஜினிகாந்த அவர்கள் இன்னும் 3 படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளார். அதன் பிறகு தான் அவர் அரசியலுக்கு வருவார் என்றும் தகவல்கள் வெளியாகி இப்படி ஒரு நிலையில் தனது அரசியல் கட்சி குறித்து இன்று (நவம்பர் 12) ட்வீட் ஒன்றை செய்திருந்தார் ரஜினி.
அதில், ஜனவரியில் கட்சித் துவக்கம், டிசம்பர் 31ல் தேதி அறிவிப்பு. மாத்துவோம் எல்லாத்தையும் மாத்துவோம். இப்போ இல்லன்னா எப்போ என்று பதிவிட்டு, வரப்போகிற சட்டமன்றத் தேர்தலில் மக்களுடைய பேராதரவுடன் வெற்றி பெற்று தமிழகத்தில் நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஊழலற்ற, ஜாதி மதச்சார்பற்ற ஆன்மீக அரசியல் உருவாவது நிச்சயம், அற்புதம், அதிசயம் நிகழும் என்றும் குறிப்பிட்டிருந்தார். இதை தொடர்ந்து பத்திரிகையாளர் சந்திப்பில் பங்கேற்றார் ரஜினி.
அதில், இந்த சந்திப்பில் கடந்த மார்ச் மாதம் தன்னுடைய அரசியல் பயணம் குறித்து பேசியதை நினைவு கூர்ந்தார் ரஜினி ‘ அந்த சமயம் நான் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டு இருந்தேன். ஆனால்,கொரோனா பிரச்சனை காரணமாக என்னால் அதை செய்ய முடியவில்லை. அதேபோல எனக்கு அறுவை சிகிச்சை செய்து இருப்பது நீங்கள் அனைவரும் அறிவீர்கள். எனக்கு நடைபெற்ற சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையால் என்னுடைய எதிர்ப்பு சக்தி மிகவும் குறைந்தது. எனவே, இதுபோன்ற சமயத்தில் பொதுமக்களை சந்திக்க வேண்டாம் என்று மருத்துவர்கள் அறிவுரை கூறினார்கள்.
நான் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிங்கப்பூரில் அனுமதிக்கப்பட்ட போது தமிழ் மக்களின் பிரார்த்தனைகளால் தான் மீண்டு வந்தேன். எனவே, இந்த முறை தமிழ் மக்களுக்காக நான் செத்தாலும் அது எனக்கு சந்தோஷம் தான். என்னுடைய வார்த்தையில் நான் உறுதியாக இருப்பேன். அரசியல் மாற்றம் இப்போது மிகவும் அவசியமான ஒன்று. தேர்தலில் நான் வெற்றி பெற்றால் அது மக்களின் வெற்றி. என் உயிரே போனாலும் மக்களே முக்கியம் என களம் இறங்கி உள்ளேன் என கூறினார்.