தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டு இருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் . சமீபத்தில் தான் பொங்கல் பண்டிகை முன்னிட்டு இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் “தர்பார்” படம் வெளியானது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் சுனில் ஷெட்டி, நயன்தாரா, நிவேதா தாமஸ், யோகி பாபு, ஸ்ரீமன், ஸ்ரேயா சரண், பிரதீப் பப்பர் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து உள்ளனர். இந்த நிலையில் இன்று ட்விட்டரில் #கந்துவட்டிரஜினி என்ற ஹேஷ் டேக் ட்ரெண்டிங்கில் வந்துள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தன்னுடைய திரையுலக பயணத்தில் பல பிரச்சனைகளை தாண்டி தான் இந்த அளவிற்கு உயர்ந்து உள்ளார். மேலும், இவர் நிறைய வருமான வரி சிக்கல்களையும் தாண்டி வந்திருக்கிறார். ஆனால், அந்த பிரச்சனைகளை முடித்துவிட்டு வரவில்லை. தற்போது இந்த பிரச்சினை மீண்டும் விசுவரூபம் எடுத்து பெரிய சர்ச்சையை கிளப்பி வருகிறது. ரஜினிகாந்த் அவர்கள் வட்டிக்கு பணம் கொடுத்து வாங்கிய பிரச்சனை சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
மேலும், 2002-2003 மற்றும் 2004-05-ம் நிதியாண்டுகளில் வருமானத்தை ரஜினிகாந்த் அவர்கள் மறைத்ததாகக் கூறி ரஜினிகாந்த்துக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் வருமானவரித் துறை தரப்பில் மேல்முறையீடு செய்திருந்தது. இந்நிலையில் இந்த வழக்கை வருமானவரித் துறை சில தினங்களுக்கு முன் வாபஸ் பெற்றதகாக தகவல் வெளியாகி உள்ளது.
அந்த வருமானவரித் துறையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பது, 2002-03-ம் நிதியாண்டில் ரஜினிகாந்த் 2 கோடியே 63 லட்சம் ரூபாய் கடன் வழங்கியதாகவும், இதற்கு ஒரு லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் வட்டி பெற்று உள்ளார். கோபாலகிருஷ்ண ரெட்டிக்கு 18 சதவீத வட்டியில் ஒரு கோடியே 95 லட்சம் ரூபாய் வழங்கி உள்ளார். இதேபோல, அர்ஜுன்லால், சசி பூஷண், சோனு பிரதாப் ஆகியோருக்கு 68 லட்சம் ரஜினிகாந்த் அவர்கள் வழங்கி உள்ளதாக தெரிவித்து உள்ளார்.
2003-04-ம் நிதியாண்டில் ரஜினிகாந்த் அவர்கள் முரளி பிரசாத் என்பவருக்கு 10 லட்சம் ரூபாய் வழங்கி உள்ளார். ஆனால், 2004-05ம் ஆண்டில் ஒரு கோடியே 71 லட்சம் ரூபாய் கடன் திரும்ப வரவில்லை. இதன் காரணமாக 33 லட்சத்து 93 ஆயிரம் ரூபாய் இழப்பு ஏற்பட்டதாகவும், இந்த மாதிரி கடன் கொடுத்தவர்கள் மீண்டும் தராததால் எனக்கு நிறைய இழப்பு ஏற்பட்டுள்ளது என்றும் ரஜினிகாந்த் பதிலளித்து உள்ளார்.
இந்த மாதிரி கடன் கொடுப்பதை தொழிலாக கருத முடியுமா? என்று வருமான வரித்துறை கேட்டதற்கு, ரஜினிகாந்த் அவர்கள் இதனை நான் தொழிலாக செய்யவில்லை. எனக்கு தெரிந்தவர்களுக்கு மட்டுமே கடன் கொடுத்தேன் என்று கூறியிருந்தார். ரஜினிகாந்த் கூறிய கருத்தை ஏற்றுக் கொண்டு வருமானவரித்துறை இவர் மீது போடப்பட்டிருந்த வழக்கை வாபஸ் வாங்கி உள்ளது. தற்போது இந்த தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.