இன்கேம் இன்கேம் காவாலி என்ற ஒரே பாடல் மூலம் தென்னிந்திய ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்தவர் நடிகை ராஷ்மிக மந்தனா. கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான ‘கிரிக் பார்ட்டி’ என்ற படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார் நடிகை ராஷ்மிகா மந்தனா. தனது முதல் படத்திலேயே அனைவர் மனதையும் கொள்ளையடித்தார். பின் நடிகர் விஜய் தேவர் கொண்டாவுக்கு ஜோடியாக ‘கீதா கோவிந்தம்’ என்ற படத்தின் மூலம் தெலுங்கு மொழியில் அறிமுகமானவர். இந்த படம் பிளாக் பஸ்டர் வெற்றியை கொடுத்தது.
மேலும், ‘சுல்தான்’ படத்தின் மூலம் தமிழிலும் அறிமுகமானார். இப்படி ஒரு நிலையில் தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த ஆகாஷ் திரிபாதி என்ற ரசிகர், ராஷ்மிகாவின் சொந்த ஊருக்குச் சென்று அவரை நேரில் சந்திக்க முடிவு செய்தார். இதற்காக அவர் தெலுங்கானாவில் இருந்து சாலை மார்க்கமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள ராஷ்மிகாவின் சொந்த ஊரான குடகு மாவட்டத்தை நோக்கி புறப்பட்டார். ஆனால், கடைசி வரை ராஷ்மிகாவின் வீட்டை கண்டுபிடிக்கவில்லை.
900 கி மீ பயணம் செய்த அவர், பல்வேறு இடங்களில், அவரது வீட்டு விலாசம் கேட்டு விசாரித்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த சிலர், இது குறித்து போலீசில் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து ஆகாஷிடம் விசாரணை நடத்திய போலீசார், குடகு மாவட்டத்தில் தற்போது ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், அவருக்கு அறிவுரை கூறி தெலுங்கானாவுக்கு திருப்பி அனுப்பினர். இவர் ராஷ்மிகாவை தேடி சென்ற போது அவர் மும்பையில் இருந்துள்ளார்.
இந்த தகவலை அறிந்த ராஷ்மிகா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது , என்னை காண்பதற்காக வெகு தூரம் பயணித்து எனது வீட்டிற்கு சென்றிருக்கிறீர்கள். தயது செய்து இனி இது போல் செய்ய வேண்டாம். உங்களை சந்திக்க முடியாமல் போனது குறித்து எனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். விரைவில் உங்களை நேரில் சந்திப்பேன் என நம்புகிறேன். அதுவரை உங்கள் இடத்தில் இருந்தே அன்பு செலுத்தினால் நான் மகிழ்ச்சி அடைவேன் என்று பதிவிட்டுள்ளார்.