மலையாள திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் துல்கர் சல்மான். இவர் மலையாளத்தில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான ‘மெகா ஸ்டார்’ மம்மூட்டியின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. 2012-ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளி வந்த திரைப்படம் ‘செகண்ட் ஷோ’. இந்த படத்தினை இயக்குநர் ஸ்ரீநாத் ராஜேந்திரன் இயக்கியிருந்தார். இது தான் துல்கர் சல்மான் ஹீரோவாக நடித்த முதல் மலையாள திரைப்படமாம்.
இதனைத் தொடர்ந்து ‘உஸ்தாத் ஹோட்டல், தீவ்ரம், ABCD, 5 சுந்தரிகள்’ என அடுத்தடுத்து சில மலையாள படங்களில் நடித்தார் துல்கர் சல்மான். அதன் பிறகு மலையாள திரையுலகுடன் தனது திரைப் பயணம் நின்று விடக் கூடாது என்று நினைத்த துல்கர் சல்மான், தமிழ் திரையுலகில் நுழையலாம் என முடிவெடுத்தார். 2014-ஆம் ஆண்டு தமிழில் வெளி வந்த திரைப்படம் ‘வாயை மூடி பேசவும்’. இது தான் துல்கர் சல்மான் தமிழ் திரையுலகில் என்ட்ரியான முதல் திரைப்படமாம்.
‘வாயை மூடி பேசவும்’ படத்துக்கு பிறகு ‘ஓ காதல் கண்மணி, சோலோ, நடிகையர் திலகம், கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ போன்ற தமிழ் படங்களில் நடித்தார் துல்கர் சல்மான். கடைசியாக துல்கர் சல்மான் நடித்து மலையாளத்தில் வெளி வந்த திரைப்படம் ‘வரனே அவஷ்யமுண்டு’. இந்த படத்தினை பிரபல இயக்குநர் அனூப் சத்யன் இயக்கியிருந்தார்.
இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று சூப்பர் ஹிட்டானது. நேற்று தான் இந்த படம் பிரபல டிஜிட்டல் பிளாட்ஃபார்மான ‘நெட்ஃபிளிக்ஸ்’- யில் வெளி வந்தது. இந்நிலையில், பிரபல பத்திரிக்கையாளர் சேத்னா கபூர் என்பவர் சமூக வலைத்தளமான ட்விட்டர் பக்கத்தில் “இந்த படத்தில் என்னை கேட்காமலே என் புகைப்படத்தை உருவ கேலி செய்யும் வகையில் பயன்படுத்தியுள்ளீர்களே ஏன்?” என்று நடிகர் துல்கர் சல்மானிடம் கேட்டிருந்தார். மேலும், இதற்கான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு விட்டது ஆனால், இதற்கு முதலில் விளக்கம் கொடுங்கள் என்றும் கூறி இருந்தார்.
அதற்கு துல்கர் சல்மான் “நடந்த தவறுக்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இது வேண்டுமென்ற செய்யப்பட்ட விஷயம் அல்ல. நான் சம்பந்தப்பட்ட நபர்களிடம் இது பற்றி பேசுகிறேன்” என்று பதில் கூறியிருக்கிறார். இதனைத் தொடர்ந்து படத்தின் இயக்குநர் அனூப் சத்யனும், பத்திரிக்கையாளர் சேத்னா கபூரிடம் மன்னிப்பு கேட்டுள்ளாராம். ஆனால், விரைவில் தன்னுடைய புகைப்படத்தை நீக்குமாறு சேத்னா கபூர் வலியுறுத்தியுள்ளார்.