வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த நிவர் புயல் கடுமையான சூறாவளி புயலாக தீவிரமடைந்துள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையத்தின்படி, அடுத்த 12 மணி நேரத்தில் இது மிகவும் கடுமையான சூறாவளி புயலாக மேலும் தீவிரமடைய வாய்ப்புள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடற்கரைகளை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த புயல் தமிழகத்தில் சென்னயில் தான் அதிக பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் மக்களின் அன்றாட வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புயல் காரைக்காலுக்கும் தமிழகத்தின் மாமல்லபுரத்திற்கும் இடையே நாளை 25 ஆம் தேதி இரவு அல்லது 26ஆம் தேதி அதிகாலை கரையைக் கடக்கும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.எனினும் நேற்று முதலே சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களிலும், தமிழகத்தின் கடற்கரையோர கிழக்கு மாவட்டங்களிலும் கன மழை பெய்து வருகிறது. தொடர்ந்து கன மழை பெய்து வருவதால், புயல் கரையை கடக்கும் வரை மக்கள் வெளியில் வர வேண்டாம் என்றும் அரசு அறிவுறுத்தி இருக்கிறது.
தொடர்ந்து காற்று பலமாக வீசி வருவதால் சாலை ஓரம் இருக்கும் மரங்கள், பலவீனமான மின் கம்பங்கள் ஆங்காங்கே முறிந்து விழுந்து வருகிறது. இப்படி ஒரு நிலையில் சந்தானம் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘பிஸ்கோத்’ பட இயக்குனர் கண்ணன் கார் மீது மரம் விழுந்து இருக்கிறது. தமிழில் 2008ஆம் ஆண்டு வினை நடிப்பில் வெளியான ஜெயம்கொண்டான் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குநர் ஆர். கண்ணன். அந்த படத்தை தொடர்ந்து கண்டேன் காதலை வந்தான் வென்றான் சேட்டை போன்ற பல படங்களை இயக்கியிருக்கிறார்.
இறுதியாக இவர் சந்தானத்தை வைத்து பிஸ்கோத்து படத்தை இயக்கியிருந்தார். தற்போது அதர்வாவை வைத்து தள்ளிப்போகாதே படத்தை இயக்கி வருகிறார். அதோடு அந்த படத்தை தயாரித்தும் இருக்கிறார். தற்போது பெய்து வரும் கன மழையால் கண்ணன் வீட்டுக்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அவரது கார் மீது மரம் விழுந்ததில் காரின் முன் பக்கம் சேதமடைந்துள்ளது. அந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.