‘குற்றப்பரம்பரை’ நாவலை தொடராக உருவாக்கும் முயற்சியில் நடிகரும், இயக்குனருமான சசிகுமார் மும்முரமாக களமிறங்கி இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி பின்னர் ஹீரோவாக நடித்து வரும் இயக்குனர்கள் பலர் இருக்கின்றனர். அந்த வரிசையில் இயக்குனராகி நடிகராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் சசிகுமார். தற்போது இவர் தமிழ் திரையுலகில் இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டு திகழ்கிறார். தமிழில் சசிகுமார் இயக்கத்தில் 2008 ஆம் ஆண்டு வெளிவந்த படம் சுப்ரமணியபுரம்.
இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றியடைந்து இருந்தது. இந்த படத்தின் மூலம் தான் சசிகுமார் இயக்குனராகவும் நடிகராகவும் சினிமா உலகில் அறிமுகமாகி இருந்தார். இந்த படத்தில் ஜெய், சமுத்திரகனி, சுவாதி, கஞ்சா கருப்பு போன்ற பலர் நடித்திருந்தார்கள். அதோடு இந்த திரைப்படம் அந்த ஆண்டின் சிறந்த திரைப்படமாக பல்வேறு விருதுகளை அள்ளிக் குவித்து இருந்தது. மேலும், நட்பு காதல் மற்றும் துரோகம் போன்றவற்றை மையமாக எடுக்கப்பட்ட படம்.
சசிகுமார் திரைப்பயணம்:
அதன் பின்னர் சசிகுமார் ஈசன் என்ற படத்தை இயக்கியிருந்தார். அதன் பின்னர் இவர் இயக்குவதை விட்டு தொடர்ச்சியாக ஹீரோவாக மட்டுமே நடித்து வருகிறார். சமீபத்தில் சசிகுமார் நடிப்பில் எம்ஜிஆர் மகன், ராஜவம்சம் போன்ற படங்கள் வெளியாகி இருந்தது. தற்போது மட்டுமே வச்ச சிங்கம்டா, .பரமகுரு போன்ற பல படங்களில் சசிகுமார் நடித்து வருகிறார். இந்த நிலையில் குற்றப்பரம்பரை என்ற நாவலை சசிகுமார் இயக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
குற்றபரம்பரை நாவல்:
பிரபல எழுத்தாளரும், நடிகருமான வேல ராமமூர்த்தி எழுதிய நாவல் தான் குற்றப்பரம்பரை. இந்த நாவல் மிகவும் பிரபலமானது. இந்த நாவலை படமாக்க தமிழ் சினிமாவை சேர்ந்த முன்னணி இயக்குனர்களான பாரதிராஜா மற்றும் பாலா ஆகியோர் முயற்சி செய்திருந்தனர். அதனால் இருவருக்குமே இடையே பனிப்போர் ஏற்பட்டது என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். கடந்த சில வருடங்களுக்கு முன்பு இந்த பிரச்சனை விஸ்வரூபம் எடுத்து இருந்தது. இருவரும் ஒருவரை ஒருவர் நேரடியாகவே விமர்சித்து இருந்தார்கள். பின் இருவரும் இதுகுறித்து பத்திரிகையாளர்களை சந்தித்து விளக்கம் கொடுத்த பின்னர் தான் இந்த பிரச்சினை முடிவுக்கு வந்தது.
குற்றபரம்பரை நாவல் குறித்த தகவல்:
இந்த பிரச்சனைக்கு பின்னர் இருவருமே குற்றபரம்பரை நாவலை படமாக்கும் முயற்சியை கைவிட்டு விட்டனர். இந்த நிலையில் தற்போது குற்றப்பரம்பரை நாவலை தொடராக உருவாக்கும் முயற்சியில் நடிகரும் இயக்குனருமான சசிகுமார் மும்முரமாக களமிறங்கிய உள்ளார். மேலும், இந்த தொடரின் கதையை வேல ராமமூர்த்தி எழுது இருப்பதாகவும், ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் இந்தப் படத்தை தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதில் நடிகரும் அரசியல்வாதியுமான விஜயகாந்தின் மகன் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார்.
இயக்குனராக ரீ என்ட்ரி கொடுக்கும் சசிகுமார்:
மேலும், சுப்ரமணியபுரம், ஈசன் போன்ற படங்களை இயக்கிய சசிகுமார் 12 ஆண்டுகளாக எந்த ஒரு படத்தையும் இயக்காமல் நடிப்பில் கவனம் செலுத்தி வந்திருந்தார். இந்த நிலையில் குற்றப்பரம்பரை மூலமாக இயக்குனராக ரீ என்ட்ரி கொடுக்க உள்ளதாக கூறப்படுகிறது. பாரதிராஜா, பாலா போன்ற இயக்குனர்கள் இயக்கத்தை விட்டு குற்றப்பரம்பரை சசிகுமார் முயற்சியில் வெற்றி பெறுமா? இல்லையா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.