பிக் பாஸ்' வீட்டுக்குள்ளே அவர் எப்படி இருக்காரோ, நேரிலும் அப்படித்தான். அவருக்குப் பயங்கரமா கோபம் வரும். அந்த வீட்டுக்குள்ள கோபத்தை கன்ட்ரோல் பண்ணிட்டு இருக்கார். நிறைய பேர் அதை நடிப்புன்னு சொல்றாங்க. `அவர் கோபப்படுவார். இங்கே வெகுளி மாதிரி நடிக்கிறார்'னு சொல்றாங்க. என்கிட்ட அவருக்கு உரிமை இருக்கு. என் மேலே கோபப்படுவார். உரிமை இருக்கும் இடத்தில்தான் கோபத்தை வெளிக்காட்ட முடியும். சம்பந்தமில்லாத இடத்தில் கோபத்தைக் காட்டறது தப்புன்னு அவருக்குத் தெரியும். அதனால், கன்ட்ரோலா இருக்கார். `யார் ஒதுக்கினாலும் மனசு விட்டுறக் கூடாது. அதேமாதிரி, நீங்களா யாரையும் ஒதுக்கிடாதீங்க. எல்லோரிடமும் சகஜமாப் பேசுங்க'னு சொல்லி அனுப்பியிருந்தேன். அவருக்கு மூன்று வேளையும் சோறு சாப்பிட்டே ஆகணும். பழையதையும் சாப்பிடுவார். டிபன் போன்றவற்றைச் சாப்பிட மாட்டார். அதனால், அதை மட்டும் அட்ஜெஸ் பண்ணிக்கச் சொல்லி அனுப்பினேன்'' என்கிறார் கயல்விழி.
``அது சரி, அந்த வீட்டுக்குள் அடிக்கடி நடந்துகொண்டே இருக்கிறாரே...'' என்றதும், புன்னகைக்கிறார்.
``காலையில் எழுந்ததும் காபி கேட்பார். காபி போட்டுக் கொடுத்து அது ஆறியே போயிடும். அவர் நடந்துகிட்டே இருப்பார். என் அம்மா, அப்பா அவருடைய அம்மா, அப்பா எல்லோருமே சொல்லிட்டாங்க. கேட்கவே மாட்டேங்கிறார். நடந்துகிட்டே யோசிக்கிறது அவருடைய சுபாவம். எப்பவுமே நடந்துட்டு ஏதாவது யோசிச்சுட்டே இருப்பார். `பிக் பாஸ்' வீட்டிலும் அதையே பண்றார். சினிமாவுக்கு வர்றதுக்கு முன்னாடி ரொம்பவே கஷ்டப்பட்டவர். சினிமாதான் வாழ்க்கைன்னு முடிவுபண்ணினதும், யாருடைய சப்போர்ட்டும் இல்லாமல், மீடியாவுக்குள் வர அத்தனை போராட்டங்களை அனுபவிச்சார். சென்னை வந்து ஹோட்டல், கடைகளில் வேலை பார்த்திருக்கார். சினிமாவில் நுழைஞ்சும் ஆரம்பத்தில் வாய்ப்புகள் சரியா அமையலை. வேற வேலை ஏதாவது முயற்சி பண்ணுங்களேன்னு சொன்னப்போ, `கலைத் தாய் என்னை எப்பவும் கைவிட மாட்டாள்'னு வாயை அடைச்சிருவார். அவரைப் பொறுத்தவரை, சினிமா மட்டுமே உலகம். அதை யாருக்காகவும் விட்டுக்கொடுக்க அவர் தயாராக இல்லை'' என்கிறார்.
[caption id="attachment_22985" align="aligncenter" width="1405"]
Sendrayan-bigg-boss[/caption]
காதல் திருமணம் குறித்துக் கேட்டதும் குஷியாகி, ``என் ஃப்ரெண்டோட ஃப்ரெண்டு அவர். அதன்மூலமாப் பழக்கமாச்சு. ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிகிட்டா, நல்லா இருக்கும்னு தோணுச்சு. ஆரம்பத்தில் என் வீட்டுல ஒத்துக்காமல், அப்புறம் சம்மதிச்சாங்க. காதலிச்ச ஒரு வருஷத்தில் திருமணம். நாலு வருஷம் ஆகிடுச்சு. 'பிக் பாஸ்' வீட்டுக்குள்ள கைவிடப்பட்ட குழந்தைங்களை அனுப்பினபோது, `வெளியே வந்ததும் குழந்தையைத் தத்தெடுத்து வளர்க்கப் போறோம்'னு சொல்லியிருக்கார். இதுவும் நடிப்புன்னு சிலர் நினைக்கலாம். ஆனால், எங்களுக்குத் திருமணமான ஒன்றரை வருஷத்திலேயே, குழந்தையைத் தத்தெடுக்க நினைச்சார். திருமணமாகி ரெண்டு வருஷத்துக்குக் குறைவா இருந்தா குழந்தையைத் தத்தெடுக்க முடியாதுன்னு ரூல் சொன்னதால் தள்ளிப்போட்டோம். ஸோ, பரபரப்புக்காகச் சொல்லலை. பலமுறை வீட்டில் என்கிட்ட சொல்லியிருக்கார். அவர் `பிக் பாஸ்' வீட்டுக்குள்ளே போன சில நாளில் நான் தாய்மை அடைஞ்சிருக்கிறது தெரிஞ்சது'' எனப் பூரிக்கிறார் கயல்விழி.
``அவர்கிட்ட சொல்லணும்னு ஆசைதான். ஆனால், இப்போ சொன்னால், உடனே பிக் பாஸிலிருந்து வெளியே வரணும்னு நினைப்பார். அவர் 100 நாளும் அங்கிருந்து ஜெயிச்சுட்டு வந்ததுக்கு அப்புறம், சர்ப்ரைஸ் கிஃப்ட் சொல்லலாம்னு இருக்கேன். முதல் சீசனில், ஃபேமிலியை `பிக் பாஸ்' வீட்டுக்குள்ளே அனுப்பின மாதிரி இந்த சீசனும் அனுப்பினால், அப்போ அவரைப் பார்த்த சந்தோஷத்தில் சொல்லிடுவேனோன்னும் பயமா இருக்கு. அப்படிச் சொல்லாமல், ஸ்வீட் சர்ப்ரைஸ் பண்ணவே ஆசை'' என்கிறார் கயல்விழி.




