ஆபாச பதிவு செய்ததற்காக சித்தார்த் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என தேசிய மகளிர் ஆணையம்
அளித்து உள்ள புகார் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சித்தார்த். இவர் திரைப்பட நடிகர் மட்டுமல்லாமல் பின்னணி பாடகர், திரைக்கதை எழுத்தாளர் என பன்முகம் கொண்டு திகழ்கிறார். இவர் தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் என பல மொழிகளில் சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து உள்ளார்.
சமீபத்தில் நடிகர் சித்தார்த் தமிழில் நடித்திருந்த சிவப்பு மஞ்சள் பச்சை திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றுத் தந்தது. தற்போது நடிகர் சித்தார்த் படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அதுமட்டும் இல்லாமல் இவர் எப்போதும் சமூக வளைத்தளத்தில் ஆக்ட்டிவாக இருப்பார். மேலும், இவர் சமூக வலைத்தளங்களில் அரசியல் ரீதியாகவும், சமூக ரீதியாகவும் பல கருத்துகளை கூறி பலமுறை பல சிக்கலில் சிக்கி உள்ளார்.
சாய்னா நேவாலின் டீவ்ட்:
இது குறித்து இவர் மீது பல விமர்சனங்கள் வந்துள்ளது. அதோடு நடிகர் சித்தார்த் சமூக வலைதளத்தில் தன்னை விமர்சிப்பவர்களுக்கு உடனுக்குடன் பதிலடி கொடுத்துவிடுவார். இந்த நிலையில் ஒலிம்பிக் பதக்கம் வென்ற சாய்னா நேவாலின் பதிவுக்கு சித்தார்த்தின் பதில் பதிவு தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
மோடி குறித்து சாய்னா நேவால் கூறியது:
சமீபத்தில் பஞ்சாப் மாநிலத்தில் பிரதமர் மோடி வரும் வழியில் விவசாயிகள் போராட்டம் நடத்தினார்கள்.
இதற்கு சாய்னா நேவால் டீவ்ட் போட்டு இருந்தார். அதில் அவர், எந்த நாட்டின் பிரதமரின் பாதுகாப்பு சமரசம் செய்யப்பட்டால் அந்த நாடு தன்னை பாதுகாப்பாக இருப்பதாக கூறிக் கொள்ள முடியாது. பிரதமர் மோடி மீது அராஜகவாதிகளால் நடத்தப்பட்ட கோழைத்தனமான தாக்குதலுக்கு வலுவான கண்டனம் செய்கிறேன் என்று பதிவிட்டிருந்தார்.
நடிகர் சித்தார்த் போட்ட பதில் டீவ்ட்:
இதை பார்த்த நடிகர் சித்தார்த் அவர்கள் ட்விட்டரில் அதற்கு பதிலடி கொடுத்திருக்கிறார். இந்நிலையில் நடிகர் சித்தார்த் பதிவிட்ட ட்விட் பெண்களைக் கொச்சைப்படுத்தும் வகையில் இருப்பதாக சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சை எழுந்தது. மேலும், சித்தார்த் அளித்த பதிவிற்கு தேசிய மகளிர் ஆணையம் மகாராஷ்டிரா டிஜிபிக்கு கடிதம் எழுதி இருக்கிறார்கள். அதில் அவர்கள் கூறியது, விளையாட்டு வீராங்கனை சாய்னா நேவாலுக்கு, ஆட்சேபிக்கத்தக்க வகையில் பெண்களை அவமானபடுத்தும் வகையில் நடிகர் சித்தார்த் பதிவு செய்து இருக்கிறார்.
தேசிய மகளிர் ஆணையம் சித்தார்த் மீது அளித்த புகார்:
அதனால் நடிகர் சித்தார்த் மீது இந்திய குற்றவியல் சட்ட பிரிவு 354 ஏ (பாலியல் துன்புறுத்தல்) மற்றும் ஐடி சட்டத்தின் பிரிவு 67 (ஆபாசமான விஷயங்களை வெளியிடுதல்) ஆகியவற்றின் கீழ் எஃப்ஐஆர் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொண்டு இருக்கிறார்கள். தற்போது தேசிய மகளிர் ஆணையம் சித்தார்த் மீது அளித்த புகார் குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. அதோடு சித்தார்த் எதிராக பாடகி சின்மயி, குஷ்பூ போன்ற பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.