ஜெயம் ரவி விவகாரம் தொடர்பாக நெட்டிசன் கேள்விக்கு பாடகி கெனிஷா அளித்திருக்கும் பதில் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த சில ஆண்டுகளாகவே கோலிவுட்டில் பிரபலமான ஜோடிகளின் விவாகரத்து குறித்த செய்தி தான் மக்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. சமந்தா-நாக சைதன்யா, தனுஷ்-ஐஸ்வர்யா, ஜிவி பிரகாஷ்- சைந்தவியை தொடர்ந்து சமீபத்தில் ஜெயம் ரவி தனது மனைவியிடம் இருந்து விவாகரத்து பெறுவதாக அறிவித்திருக்கிறார்.
தமிழ் சினிமா உலகில் பல ஆண்டுகாலமாக பிரபலமான நடிகராக திகழ்கிறார் ஜெயம் ரவி. இவர் ஆர்த்தி என்பவரை காதலித்து 2009 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். அதோடு தமிழ் சினிமாவில் சிறந்த ஜோடிகளாக ஜெயம் ரவி-ஆர்த்தி திகழ்ந்து கொண்டு இருந்தார்கள். இந்நிலையில் தான் நடிகர் ஜெயம் ரவி சில வாரங்களுக்கு முன்பு விவாகரத்து குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில், வாழ்க்கை என்பது பல்வேறு அத்தியாயங்களைக் கொண்ட ஒரு பயணம்.
ஜெயம் ரவி-ஆர்த்தி விவாகரத்து:
ஒவ்வொன்றும் அதன் சொந்த சவால்கள் மற்றும் வாய்ப்புகளுடன் வருகிறது. மிகவும் நெஞ்சம் கசந்த ஒரு தனிப்பட்ட செய்தியை உங்களுடன் பகிர வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன். நீண்ட கால யோசனை மற்றும் பல பரிசீலனைகளுக்கு பிறகு, ஆர்த்தி உடனான எனது திருமண வாழ்வில் இருந்து விலகுவது என மிகவும் கடினமான ஒரு முடிவை எடுத்துள்ளேன். இந்த நேரத்தில் எனது தனியுரிமைக்கு மதிப்பளிக்கும்படி அனைவரிடமும் கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியிருந்தார். பின் இது தொடர்பாக ஆர்த்தி வெளியிட்ட அறிக்கையில், எங்கள் திருமண வாழ்க்கை குறித்து வெளியான அறிக்கையை பார்த்து நான் கவலையும் மன வேதனையும் அடைந்தேன்.
ஆர்த்தி வெளியிட்ட அறிக்கை:
இது முழுக்க முழுக்க என் கவனத்திற்கு வராமலும், என் ஒப்புதல் இல்லாமலும் வெளியான ஒன்று என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். என் கணவரிடம் மனம் விட்டு பேச, என் கணவரை சந்திக்க வேண்டும். நான் சமீபகாலமாக பலவித முயற்சிகள் செய்தேன். ஆனால், அதற்கான வாய்ப்பு முயற்சிகள் மறுக்கப்பட்டது. திருமண பந்தத்தில் இருந்து விலக வேண்டும் என்ற இந்த முடிவு முழுக்க முழுக்க சொந்த விருப்பத்தை சார்ந்து அவராகவே எடுத்த முடிவே தவிர குடும்ப நலன் கருதி எடுக்கப்பட்ட முடிவு அல்ல என்று கூறி இருந்தார். இதை அடுத்து ஜெயம் ரவி- ஆர்த்தி பிரிந்ததற்கு காரணம் பாடகி கெனிஷா தான் என்றும், இருவருக்கும் இடையே பழக்கம் இருப்பதால் பிரிந்தார்கள் என்றெல்லாம் பல செய்திகள் வருகிறது.
ஜெயம் ரவி பேட்டி:
மேலும், இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஜெயம் ரவி செய்தியாளர்கள் சந்திப்பில், வாழு வாழ விடு. ஒரு பாடகியுடன் என்னை தொடர்பு படுத்தி பேசுகிறார்கள். அப்படி எல்லாம் செய்யாதீர்கள். கெனிஷா 600 லைவ் ஷோக்கலில் பாடியவர். அவருடைய வாழ்க்கையில் சொந்தமாக கஷ்டப்பட்டு முயற்சி இந்த இடத்திற்கு வந்தவர். நிறைய பேருக்கு உதவி செய்திருக்கிறார். அவர் ஒரு அங்கீகரிக்கப்பட்ட மனநல ஆசிரியர். நானும் அவரும் சேர்ந்து ஹீலிங் மையம் ஒன்றை தொடங்குவது தான் எங்களுடைய நோக்கமே. அதை கெடுக்காதீங்க. அதை யாரும் கெடுக்கவும் முடியாது என்று கூறியிருக்கிறார்.
கெனிஷா பதில்:
இப்படி ஜெயம் ரவி பேசி இருந்த வீடியோ இணையத்தில் காட்டுத் தீயாய் பரவிய நிலையில் சோசியல் மீடியாவில் நெட்டிசன்கள் கமெண்ட் போட்டு வருகிறார்கள். அந்த வகையில் நெட்டிசன் ஒருவர், ஜெயம் ரவி உங்களுடன் பத்திரமாக இருக்கிறாரா? என்று கெனிஷாவிடம் கேட்டிருக்கிறார். அதற்கு கெனிஷா, நீங்கள் உங்கள் பெற்றோர்களுடன் பாதுகாப்பாக இருக்கிறீர்களா? உங்களிடமிருந்து உங்களுடைய கேவலமான சிந்தனைகள் இடம் இருந்தும் நீங்கள் பாதுகாப்பாக இருக்கிறீர்களா? முதலில் நீங்களே ஒரு பாதுகாப்பான நபர்தானா? என்று பதில் அளித்திருக்கிறார்.