இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு சின்னப்பம்பட்டி கொடுக்கப்பட்ட வரவேற்ப்பு குறித்து கேள்வி எழுப்பியுள்ளார் பிரபல பின்னணி பாடகரான ஸ்ரீனிவாஸ். ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் அணிக்காக விளையாடி உலகில் பல முன்னணி வீரர்களை தனது பந்து வீச்சில் வீழ்த்திய நடராஜன் ஆஸ்திரேலிய சென்ற இந்திய அணியில் நெட் பவுலராக தேர்வானார். டி20 மற்றும் ஒருநாள் போட்டியில் இடம்பிடித்த நடராஜன் தனது முதல் ஒரு நாள் போட்டியிலேயே 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். அதன்பின்னர் நடைபெற்ற 3 டி20 போட்டிகளில் விளையாடி தனது சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தினார்.
இதன் காரணமாக டெஸ்ட் போட்டிக்கான அணியிலும் நெட் பவுலராக இணைந்தார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான நான்காவது மற்றும் இறுதி போட்டியில் இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாகி விளையாடினார். இந்த போட்டியிலும் 3 விக்கெட் வீழ்த்தி அசத்திய நடராஜன் ஆஸ்திரேலிய தொடரில் சிறப்பான திறனை வெளிப்படுத்தி கோப்பையை கைப்பற்ற முக்கிய காரணமாகதிகழ்ந்தார். இத் தொடர் முழுவதுமே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நடராஜனுக்கு ஏகப்பட்ட பாராட்டுகள் குவிந்தன.
அதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் இருந்து தாயகம் திரும்பிய இந்திய அணியில் இருந்த நடராஜன் பெங்களூர் வந்து அங்கிருந்து கார் மூலமாக சேலம் திரும்பினார். தனது சொந்த ஊர் சின்னப்பம்பட்டி திரும்ப இருந்த நடராஜனுக்கு பொதுமக்கள் சிறப்பான வரவேற்பு அளிக்க திட்டமிட்டிருந்தனர். அதன்படி அவரை பாராட்டும் வகையில் மேடை அமைக்கப்பட்டது. சாரட் வண்டி கொண்டுவரப்பட்டு மேளதாளங்களுடன் அவர் ஊருக்குள் வந்தார். நடராஜனுக்கு ஊர் மக்கள் மட்டுமின்றி சமூக வலைத்தளத்திலும் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இருப்பினும் கொரோனா பரிசோதனையை நடராஜன் செய்துகொண்டதால் தனிமைப்படுத்திக் கொள்வதற்காக அவரை 14 நாட்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர். இப்படி ஒரு நிலையில் நடராஜனை வரவேற்க கூட்டம் கூடியதை விமர்சிக்கும் விதமாக பாடகர் ஸ்ரீனிவாசன் ட்வீட் ஒன்றை செய்துள்ளார். அதில், நடராஜனுக்கு ராஜா மாறியாதை கொடுத்தது எல்லாம் சரி தான். ஆனால், கொரோனா ? அதற்கு என்ன பதில் என்று நடராஜனை சந்தித்த போது கூடிய கூட்டத்தால் கொரோனா பரவும் வாய்ப்புகள் குறித்து சூசகமாக பதிவிட்டுள்ளார்.