விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியலில் ‘சிறகடிக்க ஆசை’ ஒன்று. இந்த சீரியல் ஒளிபரப்பான நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டு இருக்கிறது. சீரியலில் மனோஜ், கடையில் பெரிய ஆர்டர் வந்ததால் லட்சக்கணக்கில் பொருள்களை விற்று ஏமாந்து விட்டார். இதனால் மீனாவின் நகையை அடமானம் வைக்காமல் விற்று விடுகிறார் மனோஜ். இன்னொரு பக்கம் வீட்டில் முத்து, மீனா நகையை வாங்கி கடைக்கு சென்று பார்த்தால் அது எல்லாம் கவரிங் என்று தெரிந்தது. பாட்டி பிறந்தநாள் முடிந்தவுடன் கவரிங் நகை விஷயத்தை அண்ணாமலை இடம் முத்து சொன்னார்.

அண்ணாமலை அதிர்ச்சியாகி விஜயாவிடம் கேட்டவுடன், எனக்கு தெரியாது. மீனா வீட்டில் தான் நகை மாறி இருக்கும். அவருடைய தம்பி தான் இந்த வேலையை செய்திருப்பான் என்று சொல்ல கோபப்பட்டு மீனா பேசி இருந்தார். இறுதியில் முத்து, இந்த வேலையை யார் செய்தது என்று எனக்கு தெரியும், ஆதாரத்துடன் நிரூபிக்கிறேன் என்கிறார். மேலும், மனோஜை ஏமாற்றிய கும்பலை போலீஸ் கைது செய்து இருந்தது. அப்போது போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்த மனோஜ் நடந்ததைப் பற்றி போலீஸ் இடம் சொல்வதை மறைந்து நின்று வீடியோ எடுத்த முத்து வீட்டில் காண்பித்தார்.
சிறகடிக்க ஆசை:
இதை பார்த்தவுடன் அதிர்ச்சியாகி விஜயா, ரோகினி நிற்கிறார்கள். ஆனால், மனோஜை அடித்து அந்த நேரத்தில் காப்பாற்றி விடுகிறார் விஜயா. கடைசியில் மனோஜ், ரோகினி இடம் உண்மையை உளறி விடுகிறார். பின் எப்படியாவது மனோஜ் வாயில் உண்மையை வர வைக்க வேண்டும் என்று முத்து, ஒரு சாமியாரிடம் மந்திரித்து வாங்கி வந்த எலுமிச்சை பழம் என்று பொய் சொல்லி, அந்த நகையை யார் மாற்றி வைத்தார்களோ அவர்களுக்கு வாய் கோணி விடும் என்று சாமி அறையில் வைக்கிறார். இதனால் மனோஜ், விஜயா இருவருமே பயந்து கொண்டிருக்கிறார்கள்.

முத்து போடும் புது பிளான்:
இருவரும் காலையில் ஒரு சாமியாரை சந்தித்து பேசுகிறார்கள். அவர் கண்டிப்பாக நடக்கும் என்று வேறு ஒரு எலுமிச்சம் பழத்தை அதற்கு எதிர்வினையில் வையுங்கள் என்று சொன்னார். இவர்களும் அதே போல் அந்த எலுமிச்சம் பழத்தை சாமி அறையில் வைத்தார்கள். இருந்தாலுமே இரவில் தூங்க முடியாமல் மனோஜ் தவித்து கொண்டு இருந்தார். கடைசியில் அந்த எலுமிச்சம்பழத்தை தூக்கி வெளியே போடலாம் என்று விஜயா-மனோஜ் சாமியறைக்கு சென்றார்கள். அந்த சமயம் எல்லோருமே வந்து விடுகிறார்கள். முத்து, மீனா மாத்தி மாத்தி கேள்வி கேட்க இருவருமே சமாளிக்கிறார்கள்.

நேற்று எபிசோட்:
ஒரு கட்டத்தில் மனோஜ் உண்மையை உளறி விடுகிறார். இதனால் கோபமடைந்த அண்ணாமலை, வெளு வெளு என்று மனோஜை வெளுக்கிறார். அதை விஜயா தடுக்கிறார். கடைசியில் இது எல்லாம் உனக்கும் தானே தெரியும் என்று கோபப்பட்ட அண்ணாமலை, இனி என்னிடம் பேசாதே, ஜென்மத்துக்கும் உன் கையில் தண்ணி கூட வாங்கி குடிக்க மாட்டேன் என்று சொல்லி விடுகிறார். கோபத்தில் விஜயா கதவை மூடி கொண்டு ரூமை விட்டு வெளிவரவில்லை. எல்லோருமே கதவை தட்டியும் விஜயா வரவில்லை. பின் விஜயாவின் தோழி பார்வதி வந்து விடுகிறார்.

இன்றைய எபிசோட்:
ஒரு வழியாக விஜயாவை வெளியே கூட்டி வந்து விடுகிறார் பார்வதி. ஆனால், அண்ணாமலை பேசவில்லை. மனோஜ்- அம்மா இருவருமே மீனாவிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் முத்து என்று கேட்டதற்கு ரோகினி முடியாது என்று சொல்கிறார். விஜயாவும் முடியாது என்று தன் கையில் போட்டு இருந்த தங்க வளையலை கழட்டி மீனா மேலே தூக்கி எறிந்து பொறுக்கி கொள் என்று கேவலமாக பேசுகிறார். இதைப் பார்த்து அண்ணாமலை- முத்து இருவருமே அதிர்ச்சியாகி நிற்கிறார்கள். எதுவும் பேசாமல் மீனா அழுது கொண்டு இருக்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது. இனி வரும் நாட்களில் முத்து என்ன செய்யப் போகிறார்? விஜயா, மனோஜ் திருந்துவார்களா? போன்ற பரபரப்பான கட்டத்துடன் சீரியல் சென்று கொண்டிருக்கின்றது






