வெக்கத்தை விட்டுச் சொல்கிறேன், முதல்வரின் கையை பிடித்து கெஞ்சினேன்..! ஸ்டாலின் உருக்கம்.!

0
1104
- Advertisement -

தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், இன்றைய செயற்குழுவில், `என் உயிரோடு கலந்திருக்கும் கலைஞரின் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே’ என்று கூறி தன் பேச்சைத் தொடங்கினார். அப்போது, கை தட்டல்களால் அவையே அதிர்ந்தது.

-விளம்பரம்-

kalaingar

- Advertisement -

தழுதழுத்த குரலில் தொடர்ந்து பேசிய அவர், `தலைவர் கருணாநிதிக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றிட வேண்டும் என்பதற்காக, இந்த அவசர செயற்குழுக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. இக்கூட்டத்தின் இறுதியில், கழகப் பொதுச்செயலாளர் பேராசியர் அன்பழகன் பேசுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர், “நான் பேசக்கூடிய சூழ்நிலையில் இல்லை. என்னை யாரும் கட்டாயப்படுத்த வேண்டாம்” என்று கூறிவிட்டார். தலைவர் இல்லாமல் இந்த நிகழ்ச்சி நடந்துகொண்டிருப்பதை என்னால் எண்ணிக்கூட பார்க்க முடியவில்லை. நீங்கள் எல்லாம் தலைவரை இழந்திருக்கிறீர்கள்.

நான் தலைவரை மட்டுமல்ல தந்தையையும் இழந்திருக்கிறேன். தலைவர் உடல்நலக்குறைவால் வீட்டில் ஓய்வில் இருந்தபோது, அவரின் அன்பை பெற்றுக்கொண்டு செயல் தலைவராகப் பொறுப்பேற்றேன். உங்கள் அனைவரின் ஒத்துழைப்போடு கழகப் பணிகளை மேற்கொண்டுவருகிறேன். அந்த அடிப்படையில், ஒவ்வொரு மாவட்டமாக நான் ஆய்வு நடத்தினேன். அப்போது, அங்கு இருக்கும் கழக மாவட்ட நிர்வாகிகளைச் சந்தித்துப் பேசுகையில், நான் சொல்வது ஒன்று மட்டும்தான், `ஒற்றுமையாக இருங்கள்’. நம் கட்சியை மீண்டும் மலரச் செய்து, அந்த வெற்றியை நம் தலைவரிடம் ஒப்படைக்க வேண்டும்; அவரின் காலடியில் குவிக்க வேண்டும் என்று தொண்டர்களிடம் கூறினேன். கலைஞர் காலத்திலேயே இந்த வெற்றியை மெய்ப்பிக்க வேண்டும் என்று உறுதியேற்றேன். ஆனால், அதை நிறைவேற்றத் தவறிவிட்டேன். அந்த ஏக்கத்தில் நான் தவித்துக் கொண்டிருக்கிறேன்.

-விளம்பரம்-

stalin

தலைவரின் உடலை, அவரை உருவாக்கிய அண்ணன் அருகே அடக்கம்செய்ய வேண்டும் என்று நாம் எண்ணினோம். நம் தலைவரின் விருப்பமும் அதுதான். தலைவர் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். இவ்வளவு நேரம்தான் அவரின் உயிர் இருக்கும் என மருத்துவர்களும் கூறிவிட்டனர். அந்தச் சூழலில், தலைவரின் ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக நண்பர்கள் வாயிலாக, அரசிடம் தலைவருக்கு மெரினாவில் இடம் ஒதுக்கக் கோரினோம் . ஆனால் அரசு மறுத்துவிட்டது. எனவே, நாமே முதல்வரை நேரடியாக சந்தித்து கோரிக்கை வைக்கலாம் என்று கட்சியின் மூத்த உறுப்பினர்கள் சொன்னார்கள். ‘நீங்கள் கட்சியின் செயல் தலைவர், தலைவரின் மகன். எனவே, நீங்கள் வரவேண்டாம். நாங்கள் சென்று முதல்வரிடம் கோரிக்கை வைக்கிறோம்’ என்று மூத்த உறுப்பினர்கள் கூறினார்கள். ஆனால் நான், ‘தலைவருக்காக எதையும் இழக்கத் தயார்’ என்று கூறி, நானும் சென்றேன்.

முதல்வரை சந்தித்து எங்கள் கோரிக்கையை முன் வைத்தோம். ‘விதிமுறைகளின்படி இது சாத்தியம் இல்லை’ என்று முதல்வர் சொல்லிவிட்டார். அரசு வகுப்பதுதான் விதிமுறை, நாங்களும் ஆட்சிப் பொறுப்பில் இருந்திருக்கிறோம் என்று நான் அவரிடம் சொன்னேன். முதல்வரிடம் எவ்வளவோ மன்றாடினோம். வெக்கத்தை விட்டுச் சொல்கிறேன், முதல்வரின் கைகளைப் பிடித்துக் கெஞ்சினேன். அப்போதுகூட அவர்கள் மனம் இறங்கவில்லை. எங்களை அங்கிருந்து விரட்ட வேண்டும் என்பதற்காக, ‘பார்ப்போம்’ என்று சொல்லி அனுப்பிவைத்தார். நாங்களும் மெரினாவில் அண்ணா சமாதி அருகே கலைஞருக்கு இடம் ஒதுக்கப்படும் என்று நம்பினோம். ஆனால் கடைசியில், `தி.மு.க-வின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுவிட்டது என்ற செய்தி வந்தது. அதற்குப் பதில், வேறு இடத்தில் இடம் ஒதுக்கப்படுகிறது என்றும் செய்தி வந்தது.

yedappadi

பின்னர், சட்டபூர்வமாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. நமக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது. அனைவரும் என்னைப் பாராட்டினீர்கள். ஆனால், என்னைப் பொறுத்தவரை நாம் நன்றி சொல்ல வேண்டியது நம் வழக்கறிஞர் குழுவுக்குதான். ஒருவேளை மறுக்கப்பட்டிருந்தால், கலைஞரின் பக்கத்தில் என்னைப் புதைக்கும் நிலை உருவாகியிருக்கும்’ என்றார் உருக்கமாக.

Advertisement