தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்துக் கொண்டு இருப்பவர் சூர்யா. சமீபத்தில் சூர்யா நடிப்பில் ஞானவேல் இயக்கத்தில் ஓடிடி தளத்தில் வெளியாகி இருந்த ஜெய் பீம் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தாலும் ஒரு சில சமூகத்தினர் மத்தியில் வெறுப்பை சம்பாதித்து இருந்தது. இது குறித்து பல சர்ச்சைகள் சோசியல் மீடியாவில் எழுந்தது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இது ஒரு பக்கம் இருக்க சூர்யா நடிகராக மட்டுமில்லாமல் தன்னால் முடிந்த பல உதவிகளை செய்து வருகிறார்.
அந்த வகையில் இவர் அகரம் அறக்கட்டளை ஒன்றை நடத்தி வருகிறார். 2006ஆம் ஆண்டிலிருந்து இவர் சமூக சேவையில் அதிகமாக கவனம் செலுத்தி வருகிறார். இதில் பல மாணவர்கள் படித்து பயன் அடைந்து வருகிறார்கள். இந்நிலையில் அகரம் அறக்கட்டளை மூலம் படித்த மாணவி ஒருவர் மிகப்பெரிய அளவில் சாதனை புரிந்துள்ள தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அகரம் அறக்கட்டளை மூலம் படித்து சாதித்த மாணவி கிருஷ்ணவேணி. இவர் கரூர் மாவட்டம் சமத்துவபுரத்தை சேர்ந்தவர்.
இதையும் பாருங்க : ‘மாநாடு ஆரம்பம், திரும்ப வரேன்’ – கடை திறப்பு விழாவிற்கு சென்ற யாஷிகா ஆனந்த் பகிர்ந்த இன்ஸ்டா ஸ்டோரி.
இவர் ஏழாம் வகுப்பு படிக்கும்போதே தாய் தந்தையை பறிகொடுத்து விட்டார். ஆதரவற்ற நிலையில் பலரின் உதவியால் தட்டுத்தடுமாறி பத்தாம் வகுப்பு வரை படித்தார். அறிவியல் மற்றும் கணிதம் ஆகிய இரு பாடத்திலும் 100 மதிப்பெண்கள் பெற்ற இவருக்கு ஆசிரியர் ஒருவரின் உதவியால் மேல்படிப்பு படிக்க முடிந்தது. மேலும், 2011 ஆம் ஆண்டு 12-ஆம் வகுப்பு பொது தேர்வு அடிப்படையில் மருத்துவத்திற்கான கட்-ஆப் 196. 75 எடுத்தார். ஆனால், இவருக்கு அரசு மருத்துவக் கல்லூரியில் படிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.
மருத்துவராக வேண்டும் என இவருடைய கனவை புரிந்து கொண்ட சூர்யாவின் அகரம் அறக்கட்டளை அவரை திருச்சி தனியார் மருத்துவக் கல்லூரியில் படிக்க வைத்தது. தமிழ் வழியில் படித்த இவருக்கு வந்த சிக்கல்களும், ஆதரவில்லாத இவருக்கு ஏற்பட்ட பிரச்சினைகளும் ஏராளம். இருந்தாலும் தன்னுடைய விடா முயற்சியால் கடின உழைப்பால் முதல் வகுப்பில் தேர்ச்சி பெறுகிறார். பின் 2017ஆம் ஆண்டு ராணுவத்தில் இவருக்கு வேலை கிடைக்கிறது. மேலும், படிப்படியாக உயர்ந்து தற்போது ராணுவத்தில் மேஜர் அந்தஸ்தில் மருத்துவராக இருக்கிறார்.
ஒரு மனிதன் இக்காலத்தில் கல்வியை மட்டும் நம்பி எவ்வளவு உயரத்திற்கும் செல்லலாம் என்பதற்கு ஒரு முன் உதாரணமாக கிருஷ்ணவேணி திகழ்கிறார். மேலும், கிருஷ்ணவேணி மலைவாழ் கிராமங்களுக்கும் மருத்துவம் கிடைக்காத ஊர்களுக்கும் தனது நண்பர்களுடன் சென்று மருத்துவ விழிப்புணர்வு பணியையும் மேற்கொண்டு வருகிறார். இதனை அறிந்த பலரும் சூர்யாவிற்கும் அவரது அகரம் அறக்கட்டளைக்கும் தன்னுடைய பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். ஜெய்பீம் படத்திற்குப் பின் சூர்யா அவர்கள் இருளர் இன மக்களின் கல்விக்காக ஒரு கோடி ரூபாய் நிதியை முதலமைச்சரிடம் வழங்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.