சமூக வலைத்தளங்களில் மிக பிரபலமான செயலியாக திகழ்வது ‘டிக்டாக்’. இதில் சாதாரண மக்கள் முதல் சினிமா பிரபலங்கள் வரை என பல லட்சக்கணக்கான மக்கள் கணக்கு வைத்து உள்ளார்கள். அந்த வகையில் டிக்டாக் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் சோனாலி போகத். இவர் ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர். சோனாலி போகத் அவர்கள் பா.ஜ.க.வில் முக்கியத் தலைவராக பொறுப்பேற்று வருகிறார். கடந்த சட்டசபைத் தேர்தலில் ஆதம்பூர் தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளராகவும் இவர் போட்டியிட்டார். மேலும், இவரின் கருத்துக்களால் சோசியல் மீடியாவில் அடிக்கடி சர்ச்சையில் சிக்கி வந்தார்.
இந்நிலையில் சோனாலி போகத் அவர்கள் பொதுவெளியில் வைத்து அரசு அதிகாரியைக் காலணியால் அடித்த சம்பவம் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. இது தொடர்பாக சோனாலி போகத் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளார். சோனாலி போகத் அவர்கள் ஹிசார் பகுதியில் உள்ள பாலசமந்த் மண்டி என்ற சந்தைப் பகுதிக்குச் சென்று உள்ளார். அந்த பகுதியில் அரசின் சந்தைக் குழு செயலாளரான சுல்தான் சிங்கை தனது காலணியால் கடுமையாகத் தாக்கினார்.
சுல்தான் சிங் அவர்கள் பா.ஜ.க.வின் இரு முக்கியமான பெண் தலைவர்கள் குறித்து மோசமாக சோசியல் மீடியாவில் விமர்சனம் செய்ததால் தான் சோனாலி போகத் அவரை அடித்ததாக தெரிவித்து உள்ளார். இதற்காக ஒரு மன்னிப்புக் கடிதம் ஒன்றை சுல்தான் சிங்கிடம் இருந்து சோனாலி பெற்றார். மேலும், சுல்தான் சிங் மீது காவல்நிலையத்தில் சோனாலி போகத் புகாரும் அளித்துள்ளார். ஆனால், தேர்தல் நேரத்தில் உதவி செய்யாத காரணத்தினால் தான் தன்னை சோனாலி அடித்ததாகக் சுல்தான் சிங் கூறி உள்ளார்.
அதோடு தன்னை மிரட்டி தான் சோனாலி மன்னிப்புக் கடிதம் வாங்கியதாகக் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இதனால் போலீஸ் கலவரத்தை ஏற்படுத்துதல், அரசு அதிகாரியைப் பணி செய்ய விடாமல் தடுத்தல் ஆகிய இரண்டு பிரிவுகளில் சோனாலி போகத் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் ஜாமினில் அவர் வெளியில் வந்தார். சுல்தான் சிங்கை, சோனாலி போகத் செருப்பால் தாக்கும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.