தமிழகத்தில் நாளை மறுநாள் 234 தொகுதிகளுக்கான சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற இருக்கிறது. தேர்தல் நாள் நெருங்கி வரும் நிலையில் இன்று மாலை 7 மணியுடன் பிரச்சாரத்தை முடித்துக்கொள்ள வேண்டும் என்பதால் அரசியல் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டு வருகின்றனர். ஆளும் கட்சியான அதிமுக, மத்தியில் ஆளும் கட்சியான பா ஜ கவுடன் கூட்டணி அமைத்துள்ளது. தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்க அதிமுகவினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதே போல தமிழக முதல்வரும் அதிமுக தலைவருமான எடப்பாடி பழனிசாமி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
அந்த வகையில் சமீபத்தில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் செய்து கொண்டு இருந்தபோது விஜய் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். சமீபத்தில் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது கூட்டத்தில் இருந்த நபர் ஒருவர் ‘ஐயா, விஜய் மக்கள் இயக்கத்தில் இருந்து வரோம். எங்கள் ஆதரவு உங்களுக்கு தான் ஐயா’ என்று கூற அதற்கு நன்றி தெரிவித்த எடப்பாடி பழனிசாமி, நன்றி நன்றி, விஜய்யின் மக்கள் இயக்கம் நமக்கு ஆதரவு தெரித்துள்ளார். அதற்கு அனைவரின் சார்பாக நன்றி என்று கூறினார்.
இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் நடிகர் விஜய். தமிழ் சினிமாவில் இருந்து அரசியலில் குதித்தவர்கள் பல பேர் இருக்கின்றனர். அந்த வகையில் நடிகர் விஜய் கூட அரசியலுக்கு வருவார் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.
அதே போல கடந்த சில மாதங்களுக்கு முன்னர் விஜய்யின் மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக விஜய்யின் தந்தை எஸ் ஏ சி பதிவு செய்ததாக தகவல் வெளியானது. அந்த தகவல் வைரலான அடுத்த சில மணி நேரத்தில் தனது தந்தை கட்சிக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அறிக்கை வெளியிட்டார் விஜய். மேலும்,இந்த விவாகரத்துக்கு பின் விஜய் தன்னிடம் பேசுவது இல்லை என்று எஸ் ஏ சி தெரிவித்தார்.