தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு வருகின்ற அக்டோபர் 27ஆம் தேதி நடக்க இருக்கும் நிலையில், தவெக தலைவர் விஜய் வெளியீட்டிற்கும் அறிக்கை தான் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் என்றென்றும் தளபதியாக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய். கடந்த பிப்ரவரி மாதம் தான் ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்னும் தன் கட்சியின் பெயரை விஜய் அறிவித்திருந்தார். அதோடு வருகின்ற 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் நேரடியாக களத்தில் இறங்கி போட்டிருப்பதாக விஜய் அறிவித்திருந்தார்.
இப்படி இருக்கும் நிலையில் சில வாரங்களுக்கு முன் பனையூரில் உள்ள தன்னுடைய கட்சி அலுவலகத்தில் விஜய் கட்சி கொடியை ஏற்றி அறிமுகம் செய்திருந்தார். விஜய் தன்னுடைய கட்சிக் கொடியை ஏற்றுவதற்கு முன் உறுதிமொழி எடுத்து, கட்சிக்கான பாடலையும் பாடி, கொடியை ஏற்றி இருந்தார். அதனைத் தொடர்ந்து விழுப்புரம் மாவட்டம், விக்ரவாண்டியில் தனது முதல் அரசியல் மாநாட்டை பிரம்மாண்டமாக நடத்த தலைவர் விஜய் திட்டமிட்டு, அதற்கான அறிக்கையும் சமீபத்தில் வெளியிட்டிருந்தார்.
தவெக முதல் மாநாடு:
தற்போது மாநாடு குறித்து தலைவர் விஜய் இரண்டாவது அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார். அதில், மாநாட்டுப் பணிகளுக்கான குழுக்களும் தொகுதி பொறுப்பாளர்கள் பட்டியலும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நம் முதல் மாநில மாநாடு வெற்றிக் கொள்கைத் திருவிழாவின் ஏற்பாடுகளில் நீங்கள் தீவிரமாக இருப்பது எனக்கு தெரியும். அரசியலை, வெற்றி-தோல்விகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு அளவிடாமல், ஆழமான அக உணர்வாகவும், கொள்கை கொண்டாட்டமாகவும் அணுகப்போகும் நம்முடைய அந்தத் தருணங்கள். மாநாட்டில் மேலும் அழகுற அமையட்டும்.
இரண்டாவது அறிக்கை:
அரசியல் களத்தில், வாய்மொழியில் வித்தை காட்டுவது நம் வேலை அன்று. நம்மைப் பொறுத்தவரை, செயல் மொழி தான் நமது அரசியலுக்கான தாய் மொழி. மாநாட்டு களப்பணிகளில் மட்டுமல்லாமல், நம் ஒட்டுமொத்த அரசியல் களப்பணிகளிலும் நாம் அரசியல்மயப்படுத்தப்பட்டவர்கள் என்ற ஆழமான எண்ணத்தை மக்கள் மத்தியில் நீங்கள் உண்டாக்குவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. உற்சாகமும் உண்மையான உணர்வும் தவழும் உங்கள் முகங்களை மாநாட்டில் காண போகும் அந்த தருணங்களுக்காகவே, என் மனம் தவம் செய்து காத்துக் கிடக்கிறது. இதை நீங்களும் அறிவீர்கள் என்று எனக்குத் தெரியும்.
முக்கியமான வேண்டுகோள்:
மேலும், இந்த நெகிழ்வான நேரத்தில், முக்கியமான ஒரு வேண்டுகோளை வைக்க விரும்புகிறேன். கழகத் தோழர்கள் எல்லோரையும் போலவே கர்ப்பிணிப் பெண்கள், பள்ளி சிறுவர் சிறுமியர், நீண்டகால உடல் நலம் இன்றி இருப்பவர்கள், முதியவர்கள் பலரும் தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் இருந்து நம் மாநாட்டுக்கு வரத் திட்டமிட்டு இருப்பர். அவர்களின் அந்த ஆவலை நான் மிகவும் மதிக்கிறேன். உங்கள் எல்லோருடனும் அவர்களையும் மாநாட்டில் காண வேண்டும் என்ற ஆவல் தான் எனக்கும் இருக்கிறது. ஆனால், எல்லாவற்றையும் விட அவர்களின் நலனே எனக்கு மிக மிக முக்கியம். மாநாட்டிற்காக அவர்கள் மேற்கொள்ளும் நீண்ட தூரப் பயணம், அவர்களுக்கு உடல் ரீதியாகச் சிரமத்தை ஏற்படுத்தக்கூடும். அதனால், அவர்கள் இவ்வளவு தூரம் சிரமப்பட்டு வர வேண்டாம் என்று அவர்களின் குடும்ப உறவாகவும் இருக்கும் உரிமையில் அன்புடன் வேண்டிக் கொள்கிறேன்.
— TVK Vijay (@tvkvijayhq) October 20, 2024
விவேக சாலையில் சந்திப்போம்:
ஊடக மற்றும் சமூக ஊடகங்கள் மூலமாக அவர்கள் வீட்டிலிருந்தே நம் மாநாட்டில் கலந்து கொள்ளலாம். மாநாட்டுக்கு வருகின்ற மற்ற அனைவரும், பயண வழிகளில் அரசியல் ஒழுங்கையும் நெறிமுறைகளையும் போக்குவரத்து விதிமுறைகளையும் கட்டாயம் கடைப்பிடித்து பாதுகாப்பாக வந்து செல்ல வேண்டும். நாம் எதைச் செய்தாலும் அதில் பொறுப்புணர்வுடன் கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டையும் காப்போம் என்பதை உணர்த்துமாறு செயல்பட்டால் தான் நம் செயல்கள் மிக நேர்த்தியாக அமையும். நாம் எப்போதும் மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும். எந்நாளும் இதை ஒரு கட்டுப்பாட்டு விதியாகவே கடைப்பிடிக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன். வி சாலை என்னும் விவேக சாலையில் சந்திப்போம் என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.