படையப்பாவில் வந்த கார், ஷாலினி தவறவிட்ட வாய்ப்பு. நீங்கள் அறிந்திடாத பல தகவல்கள்.

0
30995
padaiyappa
- Advertisement -

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவர் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த். ரஜினிகாந்த் நடிப்பில் 1999ஆம் ஆண்டு ஏப்ரல் 10-ஆம் தேதி தமிழில் வெளியான படம் ‘படையப்பா’. இந்த படத்தை இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கியிருந்தார். இதில் சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக சௌந்தர்யா நடித்திருந்தார். ரஜினிக்கு எதிராக மோதும் பவர்ஃபுல்லான வில்லன் ரோலில் பிரபல நடிகை ரம்யா கிருஷ்ணன் நடித்திருந்தார். மேலும், முக்கிய கதாபாத்திரங்களில் சிவாஜி கணேசன், லக்ஷ்மி, சித்தாரா, ராதாரவி, நாசர், மணிவண்ணன், செந்தில், அப்பாஸ், ப்ரீத்தா, அனுமோகன், ரமேஷ் கண்ணா மற்றும் பலர் நடித்திருந்தனர். இதற்கு ‘இசைப் புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். ரஜினியின் மாஸ் காட்சிகள் அனைத்தும் இப்படத்தில் பெரிதாகப் பேசப்பட்டது. அப்போது வந்த படங்களில் ‘படையப்பா’ தான் ரூ.50 கோடி கல்லா கட்டி வசூலில் சாதனை படைத்தது. இந்த படம் ரிலீஸாகி 21 ஆண்டுகள் ஆகிவிட்டது.

-விளம்பரம்-

தற்போது, இதுவரை இப்படம் குறித்து வெளிவராத சில தகவல்கள் வெளியாகியிருக்கிறது. படத்தில் ‘நீலாம்பரி’ என்ற கேரக்டரில் ரம்யா கிருஷ்ணன் நடித்திருந்தார். இந்த படம் ரிலீஸான போது ரஜினிகாந்திற்கும், ஜெயலலிதாவிற்கும் ஒரு மோதல் இருந்துகொண்டே இருந்தது. அவர்கள் இருவரையும் மையமாக வைத்து தான் இக்கதையை கே.எஸ்.ரவிக்குமார் உருவாக்கியிருப்பதாக கூறப்பட்டது. ஆனால், உண்மையில் இந்த ‘நீலாம்பரி’ கேரக்டர் ஜெயலலிதாவை மனதில் வைத்து உருவாக்கப்படவில்லையாம். ‘பொன்னியின் செல்வன்’ நாவலில் வரும் நந்தினி கதாபாத்திரத்தை மனதில் வைத்து தான் அந்த கேரக்டரை உருவாக்கினாராம் கே.எஸ்.ரவிக்குமார். அதேபோல், ‘நீலாம்பரி’ கேரக்டருக்கு முதலில் பிரபல நடிகை மீனாவை நடிக்க வைக்கலாம் என்று தான் முடிவு செய்திருக்கின்றனர். ஆனால், வேறு ஏதோ ஒரு படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் மீனாவை சந்தித்த கே.எஸ். ரவிக்குமார், இதில் வரும் நெகட்டிவ் கேரக்டருக்கு அவர் பொருத்தமாக இருக்க மாட்டார் என்று ரஜினியிடம் சொன்னாராம். அதன் பிறகு நடிகை நக்மாவின் பெயர் பரிசீலனையில் இருந்ததாம். பின், தனது தோழியான ரம்யாகிருஷ்ணனை அந்த ‘நீலாம்பரி’ கேரக்டரில் நடிக்க வைத்தார் கே.எஸ்.ரவிக்குமார்.

- Advertisement -

பொதுவாகவே இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கும் படங்களில், அவர் ஒரு சிறிய கேரக்டரில் தோன்றுவார். ஆனால், இந்தப் படத்தின் ஷூட்டிங் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வந்ததால், எந்த ஒரு காட்சியிலும் நடிக்காமல் இருந்தாராம். அதன் பிறகு ரஜினி தான், படத்தில் இடம்பெற்ற ‘ஒ ஓஹோ கிக்கு ஏறுதே’ என்ற பாடலில் அவரை கெஸ்ட் ரோலில் நடனமாட சொன்னாராம். மேலும், தன்னுடைய காஸ்டியூம் போல் அவருக்கும் கொடுக்க சொன்னாராம் ரஜினி. இந்த படத்தில் சௌந்தர்யா நடித்த கேரக்டரில் நடிக்க சிம்ரனும், நடிகை சித்தாரா நடித்த கேரக்டரில் நடிக்க ஷாலினியும் தான் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாரின் முதல் சாய்ஸாக இருந்ததாம்.

Nagma: படையப்பாவில் இவர்தான் நடிக்க ...

ஹீரோயினை நெகட்டிவ் ரோலில் வைத்து ஒரு கதையை உருவாக்க வேண்டும் என்ற ஐடியாவை நடிகர் ரஜினிகாந்த் தான் சொன்னாராம். கே,எஸ்.ரவிக்குமார் மற்றும் இரண்டு இயக்குநர்களிடமும் இதைப் பற்றி கூறி கதை ரெடி பண்ண சொன்னாராம் ரஜினி. அம்மூவர் சொன்ன கதையில், கே.எஸ்.ரவிக்குமார் சொன்ன கதைதான் ரஜினிக்கு மிகவும் பிடித்திருந்ததாம்.

-விளம்பரம்-

இப்படத்தில் இடம்பெறும் செம மாஸான பன்ச் வசனங்கள் அனைத்தும் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்தே எழுதினாராம். உதாரணத்திற்கு “என் வழி தனி வழி”, “போடா அந்த ஆண்டவனே நம்ப பக்கம் இருக்கான்”, “அதிகமா ஆசைப்படுற ஆம்பளையும், அதிகமா கோவப்படுற பொம்பளையும் நல்லா வாழ்ந்ததா சரித்திரமே இல்ல” போன்ற பன்ச் வசனங்களை எழுதியது ரஜினிதானாம். முதலில் இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிந்த பிறகு, ஃபைனல் வெர்ஷன் 22 ரீல்கள் இருந்ததாம். ஆகையால், ரஜினிகாந்த் இப்படத்திற்கு இரண்டு இடைவேளை விடலாம் என்று கே.எஸ்.ரவிக்குமாரிடம் கூறினாராம். பின், இது பற்றி தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான ‘உலக நாயகன்’ கமல் ஹாசனிடம் ரஜினி சொல்ல, அவர் இரண்டு இடைவேளை விட வேண்டாம் என்றும், இயக்குநரிடம் 14 ரீல்கள் வரும் மாதிரி படத்தை குறைக்க சொல்லுங்கள் என்றும் சொன்னாராம்.

இந்த படத்தின் முதல் நாள் ஷூட்டிங் ஸ்பாட்டில், பிரபல இயக்குநரும், ரஜினியின் குருநாதருமான கே.பாலச்சந்தர் கிளாப் அடித்து தொடங்கி வைத்தாராம். மேலும், முன்னாள் முதலமைச்சர் மு கருணாநிதி, ரஜினிக்கு இப்படம் வெற்றியடைய ஒரு வாழ்த்துக் கடிதம் எழுதி அனுப்பினாராம். இந்த படத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன் பயன்படுத்திய கார், இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாருடையதாம். ரஜினி தான் இக்காரை படத்தில் பயன்படுத்தலாம் என்று கூறினாராம்.

தற்போது, முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக இருப்பவர் ஹாரிஸ் ஜெயராஜ். இவர் ‘படையப்பா’ படத்தில் ஏ.ஆர்.ரஹ்மானிடம் கீபோர்டு ப்ளேயராக பணியாற்றினாராம். முதலில், படத்தில் இடம்பெற்ற ஊஞ்சல் காட்சிக்கு ஏ.ஆர்.ரஹ்மான் பின்னணி இசை சேர்க்காமல் இருந்தாராம். பின், அந்த காட்சிக்கு டைட்டில் கார்டில் இருந்த BGM-ஐ வைத்து ஹாரிஸ் ஜெயராஜ் தான் பின்னணி இசை சேர்த்து கொடுத்தாராம். இந்த படத்தில் இடம்பெற்ற ‘மின்சாரக் கண்ணா’ என்ற பாடலுக்கு இரண்டு வெர்ஷன்கள் உள்ளதாம். பிரபல பின்னணி பாடகர் ஹரிஹரன் ஒரு வெர்ஷனை பாடியிருந்தாராம். ஆனால், பாடகர் ஸ்ரீநிவாஸ் பாடிய வெர்ஷன் தான் படத்தில் இடம்பெற்றிருக்கும். அந்த வெர்ஷன் தான் இருக்க வேண்டும் என்று ரஜினியும் – கே.எஸ்.ரவிக்குமாரும் தான் முடிவு எடுத்தார்களாம்.

Advertisement